Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஜெ., மனதில் என்ன இருந்தது?: நாகராஜன்

சிங்கம்போல் வாழ்ந்த ஜெயலலிதாவை அசிங்கப்படுத்தக் கூடாது என்பதற்காகவே, அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுத்த ஒளிப்படங்களை சசிகலா வெளியிட மறுத்துவிட்டார் என்று அதிமுகவின் கோவை எம்பி நாகராஜன் இன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

நாகராஜன்

கோவை எம்பியும் வழக்கறிஞருமான நாகராஜன் இன்று (29/8/17) காலை திடீரென்று ஊடகங்களைச் சந்தித்தார். அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிளவு குறித்து அவர் பேசினார். பிரிந்து கிடக்கும் டிடிவி தினகரன் அணியினரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அழைத்துப் பேச வேண்டும் என்றார். அரசியல் என்பதே சூதுதானே. சூதில் வெற்றி பெறுவதுதான் முக்கியம் என்றார். சிலரை ஒதுக்கி வைப்பதும், பின்னர் மீண்டும் சேர்த்துக் கொள்வது எல்லாமே அரசியல் ராஜ தந்திரம்.

ஓபிஎஸ், இந்த ஆட்சியைப்பற்றி என்னவெல்லாமோ சொன்னார். அவரை இப்போது நாங்கள் துணை முதல்வராக ஏற்கவில்லையா? ஆர்கே நகர் தேர்தலில் ஜெயலலிதாவின் சடலத்தின் மாதிரியை வைத்து மாஃபா பாண்டியராஜன் பிரசாரம் செய்தார். அதைப்பார்த்தபோது என்னால் தாங்கவே முடியவில்லை. இன்றைக்கு அவர் மாண்புமிகு அமைச்சர் ஆகிவிட்டார். எல்லாமே அரசியல்தான்.

அவர் மேலும் கூறுகையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பெரியம்மா என்றும், சசிகலாவை சின்னம்மா என்றும் கூறினார். ஜெயலலிதா உடல்நலம் குறித்து சசிகலா, ஜெ., வீட்டில் இருக்கும் ராஜம்மா ஆகியோருக்கு நன்றாகவே தெரியும். அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தபோது எடுக்கப்பட்ட வீடியோ படங்கள் இருக்கின்றன. அதை வெளியிடும்படி எத்தனையோ பேர் கெஞ்சிக் கேட்டும், சசிகலா அதை வெளியிட மறுத்துவிட்டார்.

அவர், ஜெயலலிதாவை அக்கா என்றுதான் அழைப்பார். ‘அக்கா சிங்கம்போல் இருந்தார். அவரை நாம் ஒருபோதும் அசிங்கப்படுத்தி விடக்கூடாது’ என்றுகூறி, சிகிச்சை எடுத்த படங்களை வெளியிட மறுத்துவிட்டார்.

இன்றைக்கு எம்எல்ஏ, எம்பிக்களாக இருப்பவர்களில் 90 சதவீதம் பேர் சசிகலா மூலமாக பதவிக்கு வந்தவர்கள்தான். தேர்தல் கூட்டணி முடிவுகளிலும் சசிகலாவின் பங்கு இருக்கிறது. அவர் உண்மையிலேயே தியாகத்தலைவி. நாங்கள் இன்றைக்கு சசிகலா, தினகரன் பக்கம் இருக்கிறோம் என்றால் அதற்கு நன்றியுணர்வும், விசுவாசமும்தான் காரணம்.

ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாத காலக்கட்டத்தில் நானும் போயஸ் கார்டனில்தான் இருந்தேன். அவர் மனதில் என்ன நினைத்திருந்தார் என்பதை நான் அறிவேன். அதிமுகவில் பிரிந்து கிடக்கும் அணிகள் அனைத்தும் ஒன்றாக இணையாவிட்டால் ஜெ., மனதில் நினைத்திருந்ததை பகிரங்கமாக சொல்வேன்.

இவ்வாறு எம்பி நாகராஜன் கூறினார்.