சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட் ஒப்பந்ததாரர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் மார்க்கெட் இரண்டாக உடைந்ததோடு, மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு அபாயமும் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகர மையப்
பகுதியில் 100 ஆண்டுகள்
பழமையான வ.உ.சி. பூ மார்க்கெட்
இயங்கி வருகிறது.
பழைய கட்டடத்தில்
இயங்கி வந்த இந்த வளாகம்,
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்,
புதிதாக கட்டுவதற்காக
கடந்த 2020ம் ஆண்டு இடிக்கப்பட்டது.
14.97 கோடி ரூபாய் பட்ஜெட்டில்
நான்கு தளங்களுடன் புதிதாக
வ.உ.சி. பூ மார்க்கெட் வளாகம்
கட்டி முடிக்கப்பட்டது.
கடந்த 2023 ஜூன் 11ம் தேதி,
தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
இதில் மொத்தம் 240 கடைகள்
கட்டப்பட்டு உள்ளன.
சேலம் மாநகராட்சி கட்டுப்பாட்டில்
உள்ள வ.உ.சி. மார்க்கெட்டிற்கு
வரும் வியாபாரிகள், விவசாயிகளிடம்
சுங்கம் மற்றும் கடை வாடகை
வசூலிக்கும் உரிமத்திற்கான
பொது ஏலம் கடந்த 2023 நவம்பர்
மாதம் நடத்தப்பட்டது.
சேலம் கிச்சிப்பாளையத்தைச்
சேர்ந்த லோகேஷ் என்கிற லோகநாதன்
மற்றும் வெங்கடேசன் ஆகியோர்
கூட்டாக சேர்ந்து 9.08 கோடி
ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர்.
வ.உ.சி. மார்க்கெட் டெண்டர்
வரலாற்றில் இந்தளவுக்கு
யாரும் விலைப்புள்ளி
கோரியதில்லை.
இதன்பிறகுதான்
சிக்கலே ஆரம்பித்தது.
திமுக, அதிமுக என எந்தக் கட்சி
ஆட்சியில் இருந்தாலும்
கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த
பூக்கடை ராஜூ என்கிற ஆர்.எம்.ராஜூ
தரப்புதான் 30 ஆண்டுக்கும் மேலாக
வ.உ.சி. மார்க்கெட் சுங்கம்
வசூல் உரிமத்தைப் பெற்று வந்தனர்.
லோகேஷ் தரப்புக்கு
பூ மார்க்கெட் டெண்டர்
கைமாறிய நிலையில்,
மறைந்த திமுக மாஜி அமைச்சர்
வீரபாண்டியாரின் ஆதரவாளரான
ஆர்.எம்.ராஜூவின் சாம்ராஜ்யம்
கைவிட்டுப் போனதாக பேச்சுகள்
கிளம்பின. இதைத் தொடர்ந்து,
சேலம் பழைய பேருந்து நிலையம்
அருகே உள்ள விக்டோரியா வணிக
வளாகத்தில் கடந்த ஆண்டு
டிச. 9ம் தேதி முதல்
போட்டி பூ மார்க்கெட்டை
திறந்தது ஆர்.எம்.ராஜூ தரப்பு.
இது தொடர்பாக வ.உ.சி. பூ மார்க்கெட் ஒப்பந்ததாரர் லோகேஷிடம் விசாரித்தோம்.
”புதிதாகக் கட்டப்பட்ட வ.உ.சி.
பூ மார்க்கெட் சுங்கம் வசூல்
உரிமத்தை கூடுதல் விலைப்புள்ளிக்கு
நாங்கள் ஏலம் எடுத்திருக்கிறோம்.
இந்த ஏலத்தில் கலந்து கொண்ட
பூக்கடை ராஜூ தரப்பு எங்களை விட
குறைந்த விலைப்புள்ளி
கோரியதால் அவர்களுக்கு
ஒப்பந்தம் கிடைக்கவில்லை.
ஒப்பந்தம் கைவிட்டுப் போனதை
கவுரவப் பிரச்னையாக கருதுகிறார்.
அதனால் பூ மார்க்கெட்டை
இரண்டாக உடைக்கும் நோக்கத்துடன்,
விக்டோரியா வணிக வளாகத்தில்
போட்டி பூக்கடைகளைத்
திறந்து உள்ளனர். அங்கு
பூ, காய்கறிகள், இறைச்சிக் கடைகள்
மற்றும் இதர அழுகும் பொருட்கள்
கடைகளை வைக்கக் கூடாது
என சேலம் மாநகராட்சிக் கூட்டத்தில்
சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
அதை மீறி பூ மார்க்கெட் திறந்துள்ளனர்.
மேலும், வ.உ.சி. பூ மார்க்கெட்
ஏலத்திற்காக செலுத்தப்பட்ட
டெபாசிட் தொகையை,
விக்டோரியா வணிக வளாக
கடைகளை ஏலம் எடுக்க
மாற்றம் செய்துள்ளனர்.
இதுவும் விதிகளுக்குப் புறம்பானது.
பூக்கடை ராஜூ தரப்பினர்,
வ.உ.சி. மார்க்கெட்டில்
கடைகளைத் தருவதாகச் சொல்லி
பூ வியாபாரிகள் பலரிடம்
4 கோடி ரூபாய்க்கு மேல்
வசூலித்துள்ளனர். அவர்கள்
பணத்தைக் கேட்டு தொல்லை
கொடுப்பதால், அவர்களை
சமாளிப்பதற்காக பூக்கடை ராஜூ
எனக்கு எதிராக போட்டி
பூ மார்க்கெட்டை திறந்துள்ளார்.
அவர்கள் அமைச்சர்
கே.என்.நேருவைச் சந்தித்து,
அவர் மூலமாக அரசு செயலருக்கு
அழுத்தம் தரப்பட்டு உள்ளது.
அதன்பேரில், சேலம் மாநகராட்சியில்
கொண்டு வரப்பட்ட சிறப்புத்
தீர்மானத்தை ரத்து செய்து,
நகராட்சி நிர்வாகம் மற்றும்
குடிநீர் வழங்கல் துறை செயலர்
கடந்த நவ. 11ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.
விக்டோரியா வணிக வளாக
பூக்கடைகளால் வ.உ.சி. மார்க்கெட்டில்
30 சதவீத வியாபாரம் பாதித்துள்ளது,”
என்கிறார் லோகேஷ்.
விக்டோரியா வணிக வளாகத்தில்
போட்டி பூ மார்க்கெட் இயங்குவதன்
மூலம், வ.உ.சி. மார்க்கெட்
கட்டப்பட்டதன் நோக்கம்
சிதைந்து போய்விடும் என்றும்,
இதனால் சேலம் மாநகராட்சிக்கு
ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் வரை
வருவாய் இழப்பு ஏற்படும் என்றும்
சொல்கிறார்கள், ஆளுங்கட்சி கவுன்சிலர்கள்.
சிறப்புத் தீர்மானம் ரத்து செய்த
உத்தரவை எதிர்த்து சேலம்
மாநகராட்சி மண்டலக்குழுத்
தலைவர்கள் தனசேகர் (அம்மாபேட்டை),
அசோகன் (கொண்டலாம்பட்டி),
கவுன்சிலர்கள் இந்துஜா, ஜெயந்தி,
மஞ்சுளா கணேசன் ஆகியோர்
உயர்நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து
சேலம் மாநகர வ.உ.சி. பூ மார்க்கெட்,
புஷ்ப ஏஜண்டுகள் முன்னேற்ற சங்கத்
தலைவர் பூக்கடை ராஜூ என்கிற
ஆர்.எம்.ராஜூ, செயலாளர் ராஜ் கணேஷ்
ஆகியோரிடம் பேசினோம்.
”பழைய வ.உ.சி. மார்க்கெட்
இடிக்கப்படுவதற்கு முன்பு
அங்கு ஏற்கனவே கடை வைத்திருந்த
பூ வியாபாரிகளுக்கு ஸ்மார்ட் சிட்டி
திட்டத்தில் புதிதாகக் கட்டப்படும்
மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கப்படும்
என்று சேலம் மாநகராட்சி தரப்பிலும்,
லோகேஷ் தரப்பிலும் உத்தரவாதம்
அளிக்கப்பட்டது.
அந்த வாக்குறுதியை நம்பி, மாநகாட்சி கேட்டுக் கொண்டதன்பேரில் நாங்களும் ஏலத்தில் கலந்து கொண்டோம். ஆனால் லோகேஷ் தரப்புக்கு டெண்டர் இறுதி செய்யப்பட்ட பிறகு வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. டெண்டர் எடுத்த பிறகு அவருக்கு புத்தி மாறிப்போச்சு. காசுக்கு ஆசைப்பட்டுட்டார்.
விதிகளுக்குப் புறம்பாக
லோகேஷ் தரப்பினர்
ஒவ்வொரு கடையையும்,
வியாபாரிகளுக்கு 10 லட்சம் முதல்
90 லட்சம் ரூபாய் வரை விற்றுள்ளனர்.
இதன்மூலம் அவர்கள் 50 கோடி
ரூபாய் பகடி வசூல் செய்துள்ளனர்.
இதுபற்றி அப்போது சேலம்
மாவட்ட பொறுப்பு அமைச்சராக
இருந்த கே.என்.நேருவிடம்
முறையிட்டோம். அதன்பிறகு
விக்டோரியா வணிக வளாகத்தில்
75 கடைகளை 3 கோடி
ரூபாய்க்கு ஏலம் எடுத்து,
பூ மார்க்கெட்டை திறந்து
நடத்தி வருகிறோம்.
இதைப் பொறுத்துக் கொள்ள
முடியாமல் லோகேஷ்,
20க்கும் மேற்பட்ட அடியாள்களை
அனுப்பி வைத்து எங்களிடம்
வரும் பூ வியாபாரிகளையும்,
விவசாயிகளையும் மிரட்டி வருகிறார்.
இதனால் எங்கள் வியாபாரத்திற்கும்,
உயிருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
அவரும், அமைச்சர் ராஜேந்திரனின்
உதவியாளர் பழக்கடை கணேசன்
மூலமாக சேலம் மாநகராட்சி
மேயருக்கு அழுத்தம் கொடுத்து,
விக்டோரியா வணிக வளாகத்தில்
பூக்கடை, காய்கறி கடை
நடத்தக்கூடாது என சிறப்புத்
தீர்மானம் மூலம்
முட்டுக்கட்டை போட்டார்.
இதுகுறித்து மீண்டும் நாங்கள் அமைச்சர் கே.என்.நேருவின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் பேரில், மாநகராட்சியின் சிறப்புத் தீர்மானத்தை அரசு ரத்து செய்துவிட்டது. தமிழக அரசு ரத்து செய்த சிறப்பு தீர்மான உத்தரவுக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே நீதிமன்றத்திற்குச் சென்றிருப்பதில் உள்நோக்கம் இருக்கிறது,” என்கிறார்கள்.
பகடி வசூல் குறித்து லோகேஷிடம்
மீண்டும் விளக்கம் கேட்டபோது,
”ஏன் சார்… 9 கோடி ரூபாய்க்கு
ஏலம் எடுத்துவிட்டு 50 கோடி
ரூபாய் வசூலிக்க முடியுமா?
பூக்கடை ராஜூ தரப்பினர்
ஏலம் கைவிட்டுப் போன
விரக்தியில் எனக்கு எதிராக
ஆதாரமற்ற அவதூறு புகார்களை
பேசி வருகின்றனர்,” என்றார்.
சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கூறுகையில், ”மாமன்ற கூட்டத்தில் பெரும்பான்மை கவுன்சிலர்கள் ஆதரவுடன் விக்டோரியா வணிக வளாகத்தில் அழுகும் பொருள்கள், பூக்கடைகள் நடத்தத் தடை விதித்து சிறப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் இதற்கு மேல் பேசுவது நல்லதல்ல,” என பட்டும் படாமலும் சொன்னார்.
சேலம் மாநகராட்சி ஆணையர் ரஞ்சித் சிங்கிடம் கேட்டபோது, ”மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்படும்போது புதிய வணிக வளாகங்கள், சந்தைகள் இருப்பது நல்லதுதானே? எந்த ஒரு தொழிலிலும் ஒரே நபரின் ஆதிக்கம் இருக்கக் கூடாது. எதிலும் போட்டி இருக்க வேண்டும். விக்டோரியா வணிக வளாகத்தில் ஆர்.எம்.ராஜூ தரப்பு கடைகளை ஏலம் எடுத்துள்ளனர். இதன்மூலம் மாநகராட்சிக்கும் வருவாய் கிடைத்துள்ளது. ஆர்.எம்.ராஜூ தரப்புக்கு ஒப்பந்தம் கொடுக்கும்போது எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை,” என்றார்.
இந்த விவகாரத்தை ஆரம்பத்தில் இருந்து கவனித்து வரும் திமுக பிரமுகர் ஒருவரோ, ”லோகேஷ் தரப்பு அமைச்சர் ராஜேந்தின் மூலமாகவும், ஆர்.எம்.ராஜூ தரப்பு அமைச்சர் கே.என்.நேரு மூலமாகவும் டெண்டர் சம்பந்தமாக காய்களை நகர்த்தி வந்தனர். ஒப்பந்ததாரர்களுக்குள் ஏற்பட்ட ‘ஈகோ’ பிரச்னையால் மீண்டும் மீண்டும் அவர்கள் அமைச்சர்களை சந்தித்துப் பேசி வந்தனர்.
ஒருகட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, ‘இது சம்பந்தமாக இனிமேல் யாரும் தன்னைச் சந்திக்க வரக்கூடாது,’ என ஆர்.எம்.ராஜூவிடம் கடிந்து கொண்டார். அமைச்சர் ராஜேந்திரனோ, ‘எதுவாக இருந்தாலும் மேயருடன் முடித்துக் கொள்ளுங்கள்,’ என்று லோகேஷ் தரப்புக்குச் சொல்லி நகர்ந்து விட்டாராம். கடைசியில் மேயர் தலையை உருட்டி வருகிறார்கள்,” என்று காதை கடித்தார்.
இதற்கிடையே,
திமுக கவுன்சிலர்கள் தாக்கல்
செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்,
”இந்த வழக்கு தொடர்பாக
எதிர்மனுதாரர்களான அரசுத் தரப்பினர்
உரிய ஆவணங்களுடன் பதில்
மனுத்தாக்கல் செய்ய வேண்டும்.
6.1.2025ம் தேதி இந்த வழக்கு
மீண்டும் பட்டியலிடப்படும்.
அதுவரை நகராட்சி நிர்வாகம்
மற்றும் குடிநீர் வழங்கல் துறை
செயலாளர் பிறப்பித்த உத்தரவின்
மீது எந்த நடவடிக்கையும்
எடுக்கக்கூடாது,” என்று தெரிவித்து இருந்தது.
அதன்படி, ஜன. 6ஆம் தேதி இந்த மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பதில் மனுவில்,
”வஉசி மார்க்கெட்டில் இருந்து
விக்டோரியா வணிக வளாகம்
500 மீட்டர் தொலைவுக்கு
அப்பால் உள்ளது. அதனால்
வஉசி பூ மார்க்கெட் வியாபாரம்
பாதிக்காது. மேலும்,
சேலம் மாநகராட்சி மாமன்றம்
கொண்டு வந்த சிறப்புத்
தீர்மானத்தின் மீது ஆட்சேபணைகள்
வந்துள்ளது.
மேலும்,
சிறப்புத் தீர்மான நகல்
கவுன்சிலர்களுக்கு உரிய காலத்தில்
கொடுக்கப்படாமல் அவசர அவசரமாக
கையெழுத்துப் பெறப்பட்டுள்ளது.
ஒருவேளை, விக்டோரியா வணிக
வளாக பூக்கடைகளை மூடினால்
மாநகராட்சிக்கு ஆண்டுக்கு
1.64 கோடி ரூபாய் வருவாய்
இழப்பு ஏற்படும். ஆகையால்,
கவுன்சிலர்கள் தாக்கல் செய்த
மனுவை ரத்து செய்ய வேண்டும்,”
என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து வழக்கு விசாரணை, வரும் பிப். 3ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒப்பந்ததாரர்களிடையே சிண்டு முடிந்து விடும் வேலையை அமைச்சர்களும், சேலம் மாநகராட்சி அதிகாரிகளும் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவர்களால்தான் இப்போது இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளதாக புலம்புகிறார்கள் பூ வியாபாரிகள்.
- பேனாக்காரன்