Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: ஓசியில் கறி கேட்டு முதியவரிடம் வீரம் காட்டிய காக்கிகள்! இடமாற்றத்தால் மன்னிப்பு கேட்டு கெஞ்சல்!!

 

சேலத்தில் ஓசியில் இறைச்சி தர மறுத்த முதியவரை ஏக வசனத்தில் பேசியதுடன், அடித்து உதைத்த இரண்டு எஸ்ஐக்கள் அதிரடியாக இடமாறுதல் செய்யப்பட்டனர்.

 

சேலத்தை அடுத்த கம்மாளப்பட்டியைச் சேர்ந்தவர் மூக்குத்தி கவுண்டர் (75). இவர், சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையம் அருகே கறிக்கடை நடத்தி வருகிறார்.

பாலசுப்ரமணி

நேற்று (ஜனவரி 13) காலை

காவல்துறை ஜீப்பில் வந்த

அன்னதானப்பட்டி

உதவி காவல் ஆய்வாளர் பாலசுப்ரமணி,

வாகனத்தில் இருந்தபடியே,

‘2 கிலோ ஆட்டுக்கறி சீக்கிரம் வெட்டுடா….’

என அதிகார தொனியில் கேட்டார். ஓரளவு கூட்டம்

இருந்த நிலையில், பலர் முன்னிலையில்

உதவி ஆய்வாளர் கண்ணியக்குறைவாக

கூறியதைக் கேட்டு அதிர்ச்சி

அடைந்த மூக்குத்தி கவுண்டர்,

‘ஏங்க உங்க வயசு என்ன… என்னோட வயசு என்ன…

கொஞ்சமாவது வயசுக்கு

மரியாதை கொடுங்க,’

என்று கூறினார்.

 

இதனால் ஆத்திரம் அடைந்த எஸ்ஐ பாலசுப்ரமணி மற்றும் அவருடன் வந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சிவபெருமாள் ஆகியோர் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து மூக்குத்திகவுண்டர் மற்றும் அவருடைய மனைவி பழனியம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டினர்.

சிவபெருமாள்

மேலும், அந்த முதியவரை அடித்து உதைத்து வலுக்கட்டாயமாக தங்கள் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த மூக்குத்தி கவுண்டரின் மகன் விஜயகுமார், காவல் நிலையத்துக்கு சென்றார். ‘எதற்காக எனது தந்தையை அடித்தீர்கள்?’ என கேட்டார். இப்படி கேள்வி கேட்டதால் மேலும் ஆத்திரம் அடைந்த உதவி ஆய்வாளர்கள் விஜயகுமாரையும் தாக்கினர். பிறகு, தந்தை, மகன் இருவரிடமும் ஒரு வெற்றுத்தாளில் விரல் ரேகையை பதிவு செய்துகொண்டனர். பின்னர் அவர்களை விடுவித்தனர்.

 

காவல்துறையினர் தாக்கியதில் காயம் அடைந்த இருவரும், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாநகர காவல்துறை ஆணையர் சங்கர், நடந்த சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தினார்.

 

கறிக்கடைக்காரரை தாக்கிய உதவி ஆய்வாளர்கள் பாலசுப்ரமணி, சிவபெருமாள் ஆகிய இருவரையும் உடனடியாக மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு இடமாறுதல் செய்து, ஆணையர் சங்கர் உத்தரவிட்டார். இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

 

இதற்கிடையே, தங்கள் வேலைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக உதவி ஆய்வாளர் பாலசுப்ரமணி, கறிக்கடைக்காரர் மூக்குத்திகவுண்டர், அவருடைய மனைவி பழனியம்மாள், மகன் விஜயகுமார் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்டார். அந்தக்காட்சி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.