Saturday, June 14மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

‘ஆங்கிரி பேர்ட்’ பெண் கவுன்சிலர்; நிலைகுலைந்த அதிமுக தலைவர்; களேபரமான மாநகராட்சி!

‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?’ என சினிமாக்களில் டைட்டில் கார்டுக்கு முன்பாக வரும் முகேஷின் கதை போலாகி விட்டது, சேலம் மாநகராட்சி. அண்மைக் காலமாக அரங்கேறி வரும் கவுன்சிலர்கள் மோதல், மாமன்ற அரங்கை களேபரமாக்கி வருவது பல தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாநகராட்சியில்,
கடந்த மே 29ம் தேதி மாமன்ற
இயல்பு கூட்டம் நடந்தது.
அன்றைய தினம் காலையில்
அரசு நிகழ்ச்சி இருந்ததால்
தாமதமாகவே கூட்டம் தொடங்கியது.
அடுத்த ஒரு மணி நேரத்தில்
அதுவரை நிகழாத சம்பவம்
மாமன்ற அரங்கத்தில் அரங்கேறியது.

அதிமுக கவுன்சிலரும்,
எதிர்க்கட்சித் தலைவருமான யாதவமூர்த்தி,
‘சாலை சீரமைப்பு பணிகளுக்காக
30 கோடி ரூபாயில் டெண்டர்
கோரப்பட்டு இருந்தது. அமைச்சரின்
ஆதரவாளரான காமராஜூக்கு
டெண்டர் ஒதுக்குவதற்கு ஏதுவாக
டெண்டரை ரத்து செய்தது ஏன்?,’
என்று கேள்வி எழுப்பினார்.

அவர் இப்படி பேசி முடிப்பதற்குள்ளாகவே
ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் பொங்கி எழுந்தனர்.
‘அமைச்சரின் பெயரை இந்த கூட்டத்தில்
ஏன் இழுக்கிறீர்கள்? சம்பந்தம் இல்லாத
விஷயங்களை ஏன் பேசுகிறீர்கள்?’
என கேள்விகளால் புரட்டி எடுத்தனர்.

யாதவமூர்த்தி – செல்வராஜ் – சசிகலா

அப்போது, 34வது வார்டு
திமுக கவுன்சிலர் ‘ஈசன்’ இளங்கோ,
திடீரென்று தன் மேஜை மீது இருந்த
மிக்சர் பொட்டலத்தை எடுத்து
யாதவமூர்த்தி மீது எறிந்தார்.
இதன் பிறகுதான் மாமன்ற கூட்ட
அரங்கமே பெரும் அமளிக்காடானது.
பதிலுக்கு யாதவமூர்த்தியும்
ஜிலேபி பாக்கெட்டை தூக்கி வீச,
அருகில் இருந்த திமுக கவுன்சிலர்
பச்சியம்மாள் மீது விழுந்தது.

ஒரே கூச்சலும் குழப்பமும்
ஏற்பட்டிருந்த நிலையில்,
பின் வரிசையில் இருந்து
ஓடி வந்த 45வது வார்டு
திமுக பெண் கவுன்சிலர் சுகாசினி,
யாதவமூர்த்தி அருகில் சென்று
கையை நீட்டி நீட்டி கடும்
வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதற்கு யாதவமூர்த்தி
‘கை நீட்டி பேசாத…
உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?
மேயர் எதுக்கு இருக்கிறார்…
அவர் பேசட்டும். நீ போய்
உன் இடத்துல உட்காரு,’
என ஒருமையில் பேச,
சுகாசினியோ விடாமல்
வாக்குவாதம் செய்தார்.

அப்போது யாதவமூர்த்தி
அவருடைய கையை தட்டிவிட்டார்.
இதனால் ஆக்ரோஷம் அடைந்த சுகாசினி,
திடீரென்று பாய்ந்து சென்று
யாதவமூர்த்தியின் கன்னத்தில்
‘பளார்’ என ஓங்கி அறைந்தார்.
அவரை மற்ற கவுன்சிலர்கள்
தடுத்தபோதும், குத்துச்சண்டை வீரர்
மைக் டைசன் போல எகிறி எகிறி
யாதவமூர்த்தியின் முகத்திலேயே
தாக்கினார். இதை சற்றும்
எதிர்பாராத யாதவமூர்த்தி,
நிலைகுலைந்து கீழே சரிய,
அவரை மற்ற கவுன்சிலர்கள்
தாங்கிப் பிடித்துக் கொண்டனர்.

சுகாசினி – பச்சியம்மாள் – ஈசன் இளங்கோ

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், மாமன்ற கூட்ட அரங்கத்திற்கு உள்ளேயே புகுந்து இருதரப்பையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். பதினைந்து நிமிடம் நீடித்த இந்த சம்பவத்தால், அந்த அரங்கமே பதற்றமாக காணப்பட்டது. ஸ்டிரைக்கிங் போலீசார் குவிப்பால் அங்கு அசாதாரண நிலையும் உருவானது.

இந்த பரபரப்புக்கு இடையே, கூட்டம் இத்துடன் முடிந்து போனதாக அறிவித்துவிட்டு மேயர் ராமச்சந்திரன் பாதியிலேயே வெளியேறினார். அதற்குள் தேசிய கீதம் ஒலிக்கத் தொடங்கவும், அதுவரை குஸ்தி போட்டுக் கொண்டிருந்த கவுன்சிலர்கள் அனைவரும் அந்தந்த இடத்திலேயே ஆடாமல் அசையாமல் நின்று தேசிய கீதம் பாடினர்.

இதையடுத்து சிறிது நேரம் யாதவமூர்த்தி தலைமையில் அதிமுக கொறடா கே.சி.செல்வராஜ், கவுன்சிலர்கள் ஆனைவரதன், ஜனார்த்தனன், சசிகலா, மோகனபிரியா, சந்திரா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து அறிந்த அதிமுக எம்எல்ஏ பாலசுப்ரமணியம், மாஜி மா.செ. வெங்கடாசலம் மற்றும் நிர்வாகிகள் மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே திமுக கவுன்சிலர்களை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

இந்த சம்பவத்தால், தாங்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறி, திமுக கவுன்சிலர்கள் சுகாசினி, பச்சியம்மாள், அதிமுக கவுன்சிலர்கள் யாதவமூர்த்தி, சசிகலா ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனைக்குச் சென்று படுத்துக் கொண்டனர்.

இரு தரப்பினர் மீதும் போலீசார், பெண்கள் மீது தாக்குதல் உள்ளிட்ட பிணையில் வெளிவர முடியாத சில பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திமுக கவுன்சிலர்களின் பாய்ச்சலின்
பின்னணி விவகாரம் குறித்து யாதவமூர்த்தி,
அதிமுக கொறடா கே.சி.செல்வராஜ்
ஆகியோரிடம் விசாரித்தபோது,
”சேலம் மாநகராட்சியில் பல்வேறு
வார்டுகளில் சாலை சீரமைப்பு பணிகள்
30 கோடி ரூபாய் பட்ஜெட்டில்
மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்காக, ஆன்லைன் மூலம்
கடந்த ஏப்ரல் மாதம் டெண்டர் கோரப்பட்டது.
இதில், ஒப்பந்ததாரரும்,
எங்கள் கட்சியின் ஓமலூர் எம்எல்ஏவுமான
மணியின் தந்தை ராமசாமி குறைந்த
விலைப்புள்ளி குறிப்பிட்டு
டெண்டர் கோரி இருந்தார்.

அமைச்சர் ராஜேந்திரன் – ஒப்பந்ததாரர் காமராஜ்

விதிகளின்படி அவருக்குதான்
ஒப்பந்தம் வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால், அதிக விலைப்புள்ளி
குறிப்பிட்டு இருந்த சுற்றுலாத்துறை
அமைச்சர் ராஜேந்திரனின் நெருங்கிய
ஆதரவாளரான காமராஜூக்கு
டெண்டர் வழங்குவதற்காக,
ஒப்பந்ததாரர் ராமசாமி டெக்னிக்கல்
பிரிவில் சரியான விவரங்களை
குறிப்பிடவில்லை எனக்கூறி,
கடைசி நேரத்தில் டெண்டர்
அறிவிப்பையே ரத்து செய்து விட்டனர்.

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாதவமூர்த்தியிடம் நலம் விசாரிக்கிறார் அதிமுக எம்எல்ஏ மணி.

இதை எதிர்த்து,
உயர்நீதிமன்றத்தில் ஒப்பந்ததாரர் ராமசாமி
தடை உத்தரவை பெற்று விட்டார்.
இனி, சேலம் மாநகராட்சியில்
புதிய டெண்டர் விட முடியாது.
அரசு ஒதுக்கிய 30 கோடிக்கு
மாநகராட்சி நிர்வாகம் வீணாக
வட்டி செலுத்த வேண்டியதுதான்.
இதைக் கண்டித்துதான் கேள்வி எழுப்பினோம்.
இத்தனைக்கும் மந்திரியின்
பெயரைக்கூட குறிப்பிடவில்லை.

அமைச்சரின் கவனத்தை
ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன்
திமுக கவுன்சிலர்கள் சுகாசினி,
ஈசன் இளங்கோ ஆகியோர்
தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் திட்டமிட்டே இந்த
சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்,” என்றார்கள்.

மேயர் உள்ளிட்ட திமுக கவுன்சிலர்கள் ஒட்டுமொத்தமாக அரசியல் சார்ந்து அதிமுகவுக்கு எதிராக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக, ‘ஆங்கிரி பேர்ட்’ சுகாசினி, ‘மிக்சர் பாக்கெட்’ ஈசன் இளங்கோவுக்கு எதிராக திரும்பி இருப்பதுதான் இந்த சம்பவத்தில் எதிர்பாராத ட்விஸ்ட்.

”மாநகராட்சி மாமன்றத்திற்கென
சில மரபுகள் உள்ளன.
கவுன்சிலர்கள் இருக்கையை விட்டு
எழுந்து பிறரின் இருக்கை
நோக்கிச் செல்லக்கூடாது;
யாரையும் கை நீட்டியோ,
ஒருமையிலோ பேசக்கூடாது.

கடந்த மூன்றரை ஆண்டுகளில்,
சேலம் மாநகராட்சி சார்பில்,
முன்னாள் முதல்வர்
எடப்பாடி பழனிசாமியின்
நெருங்கிய ஆதரவாளரான
கரட்டூர் மணி தரப்புக்குச் சொந்தமான
பீனிக்ஸ் நிறுவனத்திற்குதான்
536 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள்
ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளன.
இதுவும் திமுக ஆட்சியில்தான்
நடந்துள்ளது.

யாதவமூர்த்தி எழுப்பிய கேள்விக்கு,
இப்படி ஆதாரப்பூர்வமாக
ஆளுங்கட்சியால் பதிலடி
கொடுத்திருக்க முடியும்.
அதை விட்டுவிட்டு அமைச்சரின்
கவனத்தை ஈர்ப்பதற்காக சிலர்
மரபுகளை மீறி கோதாவில் ஈடுபட்டுள்ளனர்.
கவுன்சிலர் ஈசன் இளங்கோ,
மிக்சர் பாக்கெட்டை தூக்கி
வீசவில்லை என்றால்,
இந்தளவுக்கு பிரச்னை
கிளம்பி இருக்காது.

இவ்வளவு களேபரம்
நடந்தபோதும் கூட மேயர்
வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தார்.
திடீரென்று மேயர் கூட்டத்தை
பாதியிலேயே முடித்துவிட்டு
வெளியேறிவிட்டார். தீர்மானங்கள் மீது
எந்த முடிவும் எடுக்காமலேயே
கூட்டத்தை முடித்தது
மாபெரும் வரலாற்றுப்பிழை,”
என்கிறார்கள் திமுக கவுன்சிலர்கள்.

சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனிடம் கேட்டோம்.

”டெண்டர் சம்பந்தமாக அமைச்சரை
குறிப்பிட்டு யாதவமூர்த்தி பேசவும்தான்
திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு
தெரிவிக்க வேண்டியதாப் போச்சு.
அவர்தான் முதலில் பெண்
கவுன்சிலரை அடிச்சாரு.
என்ன இருந்தாலும் பொம்பளைய
கைநீட்டி அடிக்கறது தப்புதானே?
யாரையும் ஒருமையில் பேசக்கூடாதுல்ல.
அப்புறம்தான் கவுன்சிலர் சுகாசினியும்
தாக்க ஆரம்பிச்சுட்டாங்க.
அதுவும் தப்புதான்.
இத்தன பிரச்னைக்கும்
ஈசன் இளங்கோதான் காரணம்.
எல்லாரையும் தூண்டிவிட்டுட்டு
அவர் பாட்டுக்கு ஓரமா போய்
நின்னுக்கிட்டாரு,” என புலம்பினார்
மேயர் ராமச்சந்திரன்.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த மாமன்ற கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களே, சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை பணிகள் கூட நடப்பதில்லை என குற்றம் சாட்டியதோடு மூத்த கவுன்சிலர் குணசேகரன் மைக்கை வீசிவிட்டு வெளிநடப்பு செய்தார். மே 25ம் தேதி துணை மேயர் நேரடியாகவே மேயர் தனக்கு உரிய மரியாதை வழங்குவதில்லை எனக்கூறிவிட்டு விழாவில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில், மே 29ம் தேதி மாமன்ற அரங்கிலேயே ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் அடிதடி வரை சென்றுள்ளனர். இவை எல்லாமே, இரண்டு முறை ‘பெஸ்ட் பெர்பார்மன்ஸ்’ விருது பெற்ற சேலம் மாநகராட்சிக்கு அழகல்ல என்கிறார்கள் கவுன்சிலர்கள்.

  • பேனாக்காரன்

Leave a Reply