Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மாணவனின் சொந்த கருத்திற்கும் மதிப்பெண் உண்டு! பிளஸ்-2 தமிழ் வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றம்!

பிளஸ்-2 பொதுத்தேர்வில்,
மாணவர்கள் பாடப்புத்தகத்தின்
துணையின்றி தானாகவே சிந்தித்து
எழுதும் வகையில் வினாத்தாள்
வடிவமைக்கப்பட்டு இருந்தது,
கல்வியாளர்களிடையே பெரும்
வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் நடப்புக் கல்வி ஆண்டில் (2019-2020) பிளஸ்-2 வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்காக, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரன் தலைமையில் புதிய பாடங்களை எழுதுவதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு, மெதுவாக கற்கும் மாணவர்கள் முதல் அதிபுத்திசாலி மாணவர்கள் வரை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஏற்றபடி புதிய பாடங்களை வடிவமைத்தது.

 

இந்த மாற்றமானது, மார்ச் 2ம் தேதி நடந்து முடிந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு தமிழ் வினாத்தாள் வடிவமைப்பிலும் எதிரொலித்தது. அதாவது, எல்லா வினாக்களுக்கும் பாடப்புத்தகத்தின் துணை கொண்டு விடை அளிக்க வேண்டிய தேவை இருக்காது என்ற வகையில் ஒன்றிரண்டு வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. சமூகத்தில் அன்றாடம் நடக்கும் நடவடிக்கைகளை உற்று நோக்கினாலே வினாவுக்கு விடையளிக்கும் வகையில் இவ்வினாத்தாள் அமைந்து இருந்தது.

 

இது தொடர்பாக நாம் தர்மபுரி மாவட்டம் மானியாதஅள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியின் தமிழ் ஆசிரியர் சிவாவிடம் கேட்டோம்.

ஆசிரியர் சிவா

”பொதுவாக பிளஸ்-2
பொதுத்தேர்வு வினாத்தாள்,
பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள
மாதிரி வினாத்தாளை
அடிப்படையாகக் கொண்டு
தயாரிக்கப்படும். ஆனால்
புதிய பாடத்திட்டத்தின்படி
பள்ளிகளுக்கு மாதிரி வினாத்தாள்
வழங்கப்படவில்லை. அதேநேரம்,
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழ் வினாத்தாள், பொதுவாக
எளிமையாக இருந்தது. ஒவ்வொரு
பாடத்தின் பின்பகுதியில்
சில பயிற்சி வினாக்கள்
கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில்
இருந்தும் வினாக்கள் கேட்கப்பட்டு
இருந்தன. கணிசமான வினாக்கள்
பாடப்பகுதிக்குள்ளிருந்தும்
கேட்கப்பட்டு இருந்தன.
சில வினாக்கள், பாடப்புத்தகத்தில்
இருப்பதுபோல் அல்லாமல்
சற்று சுற்றி வளைத்து
கேட்கப்பட்டு இருந்தன.

 

இந்த தேர்வில் ஒரு வினா,
மாணவனின் பொது அறிவை
சோதிக்கும் வகையில்
கேட்கப்பட்டு இருந்தது.
அதை நாங்களே எதிர்பார்க்கவில்லை
என்றாலும், நல்ல முயற்சியாக
கருதுகிறோம். பகுதி-4ல்,
6 மதிப்பெண்கள் பிரிவில்,
46வது வினாவாக,
‘சாலை விபத்தில்லா தமிழ்நாடு –
இக்கூற்று நனவாக நாம்
செய்ய வேண்டியன யாவை?’
என்று கேட்கப்பட்டு இருந்தது.
பிளஸ்-2 தமிழ் உரைநடை பகுதியில்,
சாலை விதிகள் என்ற தலைப்பில்
ஒரு பாடம் இடம்பெற்றுள்ளது.
சாலை விபத்துகளில் அதிகளவில்
உயிரிழப்புகளைச் சந்திக்கும்
மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.
இத்தகைய சூழலில் பள்ளி
மாணவர்களுக்கு சாலை விதிகளை
கற்றுக்கொடுப்பது மிகவும் அவசியம்
என்ற நிலையில், சாலை
விதிகளுக்காக ஒரு பாடம்
வைக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.

 

சாலை விபத்துகளை
தவிர்ப்பது குறித்து
மாணவர்களே சுயமாக சிந்தித்து
எழுதும் வகையில்,
‘சாலை விபத்தில்லா தமிழ்நாடு’
பற்றி வினா கேட்கப்பட்டு இருந்தது.
இந்த வினாவுக்கான பதில்
பாடப்புத்தகத்தில் இல்லை.
ஆகையால் மாணவனே அனுபவ
ரீதியில் உணர்ந்ததை, கேட்டு அறிந்ததை
அல்லது அவனுடைய ஆக்கப்பூர்வமான
சிந்தனையை பதிலாக எழுதலாம்.
மாணவன் தன் சிந்தனைக்கு
உதித்த பயனுள்ள கருத்துகளை
எத்தனை வரிகளில் இவ்வினாவிற்கு
பதில் அளித்தாலும் அதற்கு
முழு மதிப்பெண் கிடைக்க
வாய்ப்பு இருக்கிறது.

பகுதி-2ல், 18வது வினாவாக,
‘வயலுக்குள் யானையைத் தனித்து
விடுவதால் ஏற்படும் விளைவு யாது?’
என்று கேட்கப்பட்டு உள்ளது.
இந்த வினா, ‘காய்நெல் அறுத்துக்
கவளங் கொளினே’ என்று தொடங்கும்
புறநானூறு பாடலோடு தொடர்புடையது.
வினாத்தாளில் கேட்கப்பட்டு இருந்த
வினா, புறநானூறு பாடலோடு
தொடர்புப் படுத்திக் கேட்காமல்,
பொதுவாகவே ஒரு யானையை
வயலில் தனித்து விட்டால் என்ன
மாதிரியான விளைவுகள் ஏற்படும்
என்ற பொதுப்புரிதலுக்கு உட்பட்டு
பதில் எழுதும் வகையில்
கொஞ்சம் சுற்றி வளைத்துக்
கேட்கப்பட்டு இருந்தது.
இந்தப்பாடலைத்தான்,
மத்திய அமைச்சர்
நிர்மலா சீதாராமன்,
கடந்த 2019ம் ஆண்டு பட்ஜெட்
தாக்கலின்போது மேற்கோள்
காட்டினார். ஒரு தமிழாசிரியராக
நான் என் மாணவர்களுக்கு
மத்திய அமைச்சர் மேற்கோள்
காட்டிய புறநானூற்றுப் பாடலை
யுடியூப் காணொலியாக காண்பித்து
பாடம் நடத்தியிருக்கிறேன்.
இப்படி சமகால நிகழ்வுகளையும்
ஆசிரியர்கள் ‘அப்டேட்’ செய்ய
வேண்டியது அவசியம்.

 

அதேபோல்
ஒரு மதிப்பெண் பிரிவில்,
‘மாதவி பெற்ற பட்டம்?’ என்ற
வினா கேட்கப்பட்டுள்ளது.
மாதவி, தலைக்கோலி என்ற
பட்டம் பெற்றவள். ஆனால்,
புத்தகத்தில் இதற்கான பதில் இல்லை.
இந்தப்பாடப்பகுதியை நடத்தும்போது
ஆசிரியர்கள் கூடுதல் தகவலாக
தலைக்கோலி பட்டம் பற்றி
பயிற்றுவித்திருந்தால் மட்டுமே
இவ்வினாவிற்கு மாணவர்களால்
பதில் அளிக்க முடியும்.
அதாவது, புத்தகத்தில் உள்ள
வரிகளை மட்டுமே இனி
ஆசிரியர்களால் போதித்துவிட்டுச்
சென்றுவிட முடியாது.
குறிப்பிட்ட செய்யுள்,
உரைநடைக்குப் பின்னால் உள்ள
விரிவான தகவல்கள்,
அதன் தற்போதைய மாற்றங்கள்
குறித்தும் ஆசிரியர்கள்
அறிந்து கொண்டு,
மாணவர்களுக்கு பயிற்றுவிப்பது
புதிய பாடத்திட்டத்தின் நோக்கமாக
இருக்கிறது. பொதுத்தேர்வு
வினாத்தாளும் அதன்படியே
தயாரிக்கப்பட்டிருக்கிறது,” என்கிறார்
தமிழாசிரியர் சிவா.

 

கரூர் மாவட்டம் தம்மநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் தேவி கூறுகையில், ”பிளஸ்-2 பொதுத்தேர்வில், நெடுவினா பகுதியில், சாலை விபத்தில்லா தமிழ்நாடு என்ற வினா, மாணவர்களே சிந்தித்து தங்களது யோசனைகளை முன்வைக்கும் விதமாக வினா கேட்கப்பட்டு இருந்தது.

ஆசிரியர் தேவி

இதே பகுதியில், ‘நடிகர் திலகம் என்ற பட்டம் சிவாஜிக்கு பொருத்தமானதே என்பதை நிறுவுக’ என்ற வினாவும் கேட்கப்பட்டு இருந்தது. பிளஸ்-2வில், நடிகர் திலகம் சிவாஜி பற்றிய பாடமும் புத்தகத்தில் இருக்கிறது. ஆனாலும், புத்தகத்தில் இல்லாத, இந்த வினாவிற்கு பொருத்தமான கருத்துகளை உரிய தரவுகளுடன் எழுதினாலும் மாணவர்களுக்கு முழு மதிப்பெண் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

 

இதுபோன்ற மாற்றங்களைத்தான் எதிர்பார்த்தோம். அது இப்போது நடந்திருக்கிறது. இத்தகைய மாற்றங்களால், ஆசிரியர்கள் என்போர், இனிமேல் புத்தகத்தில் உள்ளதை வைத்து ‘கூறியது கூறல்’ என்று இல்லாமல், அவர்களும் புத்தகத்திற்கு வெளியே நிறைய தகவல்களை திரட்டி, தங்களை ‘அப்டேட்’ செய்து கொள்ள வேண்டும் என்பதையும் இந்த வினாத்தாள் வடிவமைப்பு உணர்த்துகிறது. என்றாலும், தமிழ்ப்பாட பொதுத்தேர்வு வினாத்தாள் எல்லா தரப்பு மாணவர்களும் எதிர்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டு இருந்தது வரவேற்புக்குரியது,” என்றார்.

 

– பேனாக்காரன்