Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: போதை ஆசிரியர் பணியிடை நீக்கம்; பள்ளியில் குறட்டை விட்டு தூக்கம்!

சங்ககிரி அருகே,
அரசுப்பள்ளியில்
குடிபோதையில்
வகுப்பறையில் தூங்கிய
ஆசிரியர் அதிரடியாக
பணியிடை நீக்கம்
செய்யப்பட்டார்.

 

அரசுப்பள்ளிகளில்
தரமற்ற கற்பித்தல் முறை,
போதிய உள்கட்டமைப்பு
வசதிகள் இல்லாதது,
குழந்தைகளுக்கு
பாதுகாப்பின்மை போன்ற
காரணங்களால் ஏற்கனவே
மாணவர் சேர்க்கை குறைந்து
வரும் நிலையில்,
ஒழுக்கக்கேடான
ஆசிரியர்களால் மேலும்
சீர்குலைந்து வருகின்றன.

சேலம் மாவட்டம் சங்ககிரி
அருகே உள்ள
கே.மேட்டுப்பாளையத்தில்
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
செயல்பட்டு வருகிறது.
1 முதல் 5ம் வகுப்பு வரையிலும்
மொத்தமே 20க்கும் குறைவான
குழந்தைகளே படித்து
வருகின்றனர். இரண்டு
ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
இருதயராஜ் என்பவர்
தலைமை ஆசிரியராகவும்,
அறிவழகன் என்பவர்
இடைநிலை ஆசிரியராகவும்
பணியாற்றி வருகின்றனர்.

 

மாணவர்களுக்கு முன்னுதாரணமாக
இருக்க வேண்டிய ஆசிரியர்
அறிவழகன், அடிக்கடி
முன்னறிவிப்பின்றி விடுப்பு
எடுத்துக் கொள்வார் என்கிறார்கள்.
அவர் பள்ளிக்கு வந்தால்தான்
பணியில் இருக்கிறார் என்பதே
தெரிந்து கொள்ள முடியும்.
பள்ளிக்கு வராதது குறித்து
செல்போனில் தொடர்பு
கொண்டு பேசினாலும்,
முறையான பதில் இருக்காது
என்கிறார்கள். பள்ளி முடிந்து,
குழந்தைகளை அழைத்துச்
செல்ல வரும் சில
பெற்றோர்களிடமும் அடிக்கடி
தகராறில் ஈடுபட்டு
வந்துள்ளார்.

 

இந்தநிலையில்,
ஜன.28ம் தேதி, சங்ககிரியில்
தொடக்கக்கல்வித்துறை சார்பில்
நடந்த ஒரு பயிற்சி முகாமில்,
கலந்து கொள்வதற்காக
தலைமை ஆசிரியர்
இருதயராஜ் சென்று விட்டார்.
அதனால் பள்ளியில்
ஆசிரியர் அறிவழகன்
மட்டுமே இருந்தார்.

 

திடீரென்று பள்ளியில்
குழந்தைகளை தனியாக
விட்டுவிட்டு, வெளியே சென்ற
அறிவழகன் சிறிது நேரம்
கழித்து மீண்டும் வந்தார்.
அப்போது அவர் மது
அருந்திவிட்டு குடிபோதையில்
இருந்துள்ளார். சிறிது நேரத்தில்,
போதை தலைக்கேறவே,
அவர் வகுப்பறையிலேயே
அயர்ந்து தூங்கி விட்டார்.
இதுபற்றி அறிந்த
குழந்தைகளின் பெற்றோர்கள்,
உள்ளூர்க்காரர்கள் பள்ளியை
முற்றுகையிட்டனர். பயிற்சி
முகாமிற்கு சென்றிருந்த
தலைமை ஆசிரியருக்கும்
தகவல் அளித்து வரவழைத்தனர்.

 

வட்டாரக் கல்வி அலுவலர்
நெடுமாறனிடமும் புகார்
அளிக்கப்பட்டது. இதையடுத்து
ஆசிரியர் அறிவழகன்,
இடைப்பாடி அரசு
மருத்துவமனைக்கு அழைத்துச்
செல்லப்பட்டார். அங்கு நடந்த
மருத்துவ பரிசோதனையில்
அவர் மது அருந்தியிருப்பது
ஊர்ஜிதமானது. இதுபற்றி
சங்ககிரி கல்வி மாவட்ட
அலுவலர் ராமசாமியிடம்,
வட்டாரக் கல்வி அலுவலர்
புகார் அளித்தார். அதன்பேரில்,
ஆசிரியர் அறிவழகன்
உடனடியாக பணியிடைநீக்கம்
(சஸ்பெண்ட்) செய்யப்பட்டார்.

 

இதுகுறித்து தொடக்கக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”அரசு தொடக்கப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு இலவச சீருடை, காலணி உள்ளிட்ட 14 வகையான இலவச பொருள்கள் வழங்கப்படுகின்றன. தரமான பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கழிப்பறை, தண்ணீர் வசதி செய்து தரப்பட்டுள்ளன. படிப்படியாக அரசுப்பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

 

ஆனால், ஆசிரியர் அறிவழகன் போன்ற ஒழுக்கம் தவறிய ஆசிரியர்களால் ஒட்டுமொத்த தொடக்கக் கல்வித்துறைக்கும் கெட்டப்பெயர் ஏற்படுகிறது. தற்போது அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். குழந்தைகளின் சிறுசேமிப்பு பணத்தை எடுத்துச்சென்று அவர் மது அருந்தியதாக புகார் சொல்லப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவரிடம் துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது,” என்றார்.

 

– பேனாக்காரன்