புது டில்லி: தொழில்நுட்பம் என்ற பெயரில் பிறரின் அந்தரங்கத்தை உளவு பார்ப்பது, மாண்பை குலைக்கும் செயல் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு குட்டு வைத்துள்ளது.
ஆதார் அடையாள அட்டையை அரசு சேவைகளுக்கு கட்டாயமாக்குவது தனிப்பட்ட உரிமையை மீறும் செயல் என்ற வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சு விசாரித்தது. அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.
அந்தரங்க உரிமை என்பது அரசியல் சாசனத்தில் கூறியுள்ளபடி அடிப்படை உரிமைதான் என்று இந்த பெஞ்ச் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பின் முக்கிய அம்சம்:
ஒருவர், தனது வீட்டுக்குள் யாரை அனுமதிக்க வேண்டும் என்பது அவரது உரிமை. அவருடைய வீட்டில் ஒருவரை அனுமதித்தால், அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. வீட்டுக்குள் யார் வரவேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட உரிமை.
ஒரு வீட்டில் அந்தரங்கம் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய அம்சம். அதுதான் அவரது மாண்பை காக்கும். இது உடல் ரீதியாக மட்டுமல்ல தொழில்நுட்ப ரீதியாகவும் பொருந்தக்கூடியது.
யாருடன் வாழ்கிறார், யாருடன் வாழ வேண்டும் என்பது ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட விஷயம். அதில் தொழில்நுட்பம் என்ற பெயரில் பிறர் தலையிட்டு உளவு பார்ப்பது ஒருவரின் மாண்பை குலைக்கும் செயல்.
குடும்பம், திருமணம், பாலியல் சார்பு போன்ற குடும்பம் சார்ந்த அந்தரங்கங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இவையெல்லாம்தான் தனி நபர் மாண்பை காப்பாற்ற உதவும். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.