Sunday, March 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

சேலம் அதிமுக மாவட்ட செயலாளர் நீக்கம் ஏன்? பரபரப்பு பின்னணி!

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து முன்னாள் எம்எல்ஏ ஜி.வெங்கடாசலம், திடீரென்று நீக்கப்பட்டதன் பின்னணியில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுகவில், சேலம் மாநகர்
மாவட்டச் செயலாளராக
இருந்தவர் ஜி.வெங்கடாசலம்.
8 ஆண்டுக்கும் மேலாக இந்தப்
பதவியில் இருந்து வந்தார்.
எடப்பாடியின் தீவிர விசுவாசியாக
அறியப்பட்ட இவர்,
கடந்த ஜன. 28ம் தேதி,
திடீரென்று மா.செ. பதவியில்
இருந்து கட்டம் கட்டப்பட்டார்.
அத்துடன், கொள்கை பரப்பு
துணைச் செயலாளர் என்ற
‘டம்மி’ பதவியில் நியமிக்கப்பட்டார்.

ஜி.வெங்கடாசலம்

சூட்டோடு சூடாக,
அனைத்துலக எம்ஜிஆர் மன்ற
துணைச்செயலாளர் எம்.கே.செல்வராஜ்,
சேலம் சூரமங்கலம் பகுதி செயலாளர்
ஏ.கே.எஸ்.எம்.பாலு ஆகிய
இருவரையும் சேலம் மாநகர்
மாவட்ட பொறுப்பாளர்களாக
நியமித்திருக்கிறார்
எடப்பாடி பழனிசாமி.

மா.செ. பதவியில் இருந்து
வெங்கடாசலம் நீக்கப்பட்டதன்
பின்னணி குறித்து இலைக்கட்சியின்
மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம்.

”கடந்த 2001 – 2006 வரை
வெங்கடாசலத்தின் மனைவியும்,
2006 – 2011 வரை வெங்கடாசலமும்
சேலம் மாநகராட்சி கவுன்சிலராக
இருந்தனர். அதன்பிறகு,
எடப்பாடி பழனிசாமிதான்
அவரை போயஸ் கார்டனுக்கு
அழைத்துச் சென்று அம்மாவிடம்
அறிமுகப்படுத்தி வைத்தார்.
2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில்
சேலம் மேற்கில் சீட் வாங்கிக்
கொடுத்து, எம்எல்ஏவாக்கினார்
எடப்பாடி.

மீண்டும் 2021 சட்டமன்ற
தேர்தலின்போதும் சேலம் வடக்கில்
அவருக்கு வாய்ப்பு வழங்கினார்.
ஆனால் அந்தத் தேர்தலில்
தோல்வி அடைந்தார்.
300 ரூபாய் கூலிக்கு
பரோட்டா மாஸ்டர்
வேலைக்குச் சென்று
கொண்டிருந்த வெங்கடாசலம்,
எம்எல்ஏ ஆக இருந்த
பத்தாண்டு காலத்தில்
எக்கச்சக்கமான சொத்துகளை
குவித்திருக்கிறார்.

மகன், மகள், மைத்துனர்,
நெருக்கமான உறவினர்கள்
பெயர்களில் 10 பேருந்துகள்,
சேலம், வாழப்பாடி, எடப்பாடி,
ஓமலூர், ஈரோடு உள்ளிட்ட
இடங்களில் 8 பெட்ரோல்
பங்க்குகள் இயங்குகின்றன.
சேலம் சூரமங்கலம் முல்லை
நகரில் ஒரு அபார்ட்மென்ட்,
சென்னையில் 3 இடங்களில்
அபார்ட்மென்ட், உள்ளூரில்
அவருக்கும், மகளுக்கும்
லிப்ட் வசதியுடன் சொகுசு
வீடுகள் இருக்கின்றன.

சேலம் அங்கம்மாள் காலனி, ஓமலூர் அருகே எல்லாயூர், காமலாபுரம், வட்டக்காடு, வெள்ளாளகுண்டம், மங்களபுரம் மற்றும் கரூர் ஆகிய இடங்களில் 100 ஏக்கருக்கும் மேலான நிலபுலன்கள் என 500 கோடி ரூபாய்க்கும் மேலாக சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார்.

புறத்தோற்றத்தைப் பார்த்தால் இத்தனை சொத்துகளுக்கு அதிபதியா? என்பதே தெரியாது. அதுதான் அவருக்கு பெரிய பிளஸ் பாயிண்ட். அதிமுகவுக்கே உரிய மரபுப்படி, எடப்பாடியை தனிமையில் சந்தித்தால் வெங்கடாசலம் நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்து விடுவார். இதெல்லாம் வெறும் நடிப்பு என்பதே தலைமைக்கு பின்னர்தான் தெரிய வந்தது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சேலம் வடக்கில் போட்டியிட்டு வெறும் 7500 சொச்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப் போனார். இரண்டு முறை எம்எல்ஏ ஆக இருந்தவருக்கு எந்தெந்த பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரியாதா? தேர்தல் செலவுக்காக கொடுத்த பணத்தை, ‘வீக்’ ஆன பகுதிகளில் முறையாக பட்டுவாடா செய்யாமல் பதுக்கிக் கொண்டார்.

அடுத்து நடந்த மாநகராட்சித் தேர்தலில் அவர் நினைத்து இருந்தால் மேலும் 6 பேரை கவுன்சிலர்களாக ஜெயிக்க வைத்திருக்க முடியும். ஆனால் கடைசி வரை சொந்த கஜானாவை திறந்து செலவழிக்க மறுத்துவிட்டார்.

‘அம்மா’ மறைவுக்குப் பிறகு,
கூவத்தூர் ரிசார்ட்டில் நடந்த
‘டீலிங்’ சம்பவத்தில்,
எடப்பாடிக்கு அணில் போல
வெங்கடாசலமும் உதவியாக
இருந்தார். அதனால்தான்
அவர் மீது அதிருப்தி
இருந்தபோதும் கூட
எடப்பாடியார் பெரிய அளவில்
நடவடிக்கை எடுக்காமல் இருந்தார்.

ஆனால் கடந்த மூன்று
ஆண்டுகளாகவே கட்சி
வளர்ச்சிக்காக எந்தப்
பணிகளையும் செய்யவில்லை.
கட்சியில் உள்ள ‘வளர்த்தியான’
பிரமுகருடன் சேர்ந்து கொண்டு,
ரியல் எஸ்டேட் பிஸினஸில்
தீவிரமாக இறங்கி விட்டார்.
பட்டு ராமச்சந்திரன்,
செங்கோட்டை, ‘வே பிரிட்ஜ்’ ராஜேந்திரன்,
ஜான் கென்னடி, ஆர்.பி.ராமசாமி,
அபு, ஜெகதீஷ்குமார், சிவக்குமார்,
விஷ்ணுபிரசாத் உள்ளிட்ட
பல நிர்வாகிகளிடம் பணம்
பெற்றுக்கொண்டு பதவியில் நியமித்தார்.

இந்நிலையில்தான், எடப்பாடியாரின் நீண்டகால நண்பரும், மொரப்பூர் முன்னாள் எம்எல்ஏவுமான சிங்காரம், சேலம் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவரிடம் இலைக்கட்சி நிர்வாகிகள், வெங்கடாசலம் மீது பக்கம் பக்கமாக ஆதாரத்துடன் புகார்களை அடுக்கினர். முழுமையாக விசாரித்த சிங்காரம், வெங்கடாசலத்தின் ‘அபார வளர்ச்சியைக்’ கண்டு அதிர்ந்து போனார். இதுகுறித்த விரிவான அறிக்கையை எடப்பாடியாரிடம் சமர்ப்பித்ததை அடுத்தே, அவரை மா.செ. பதவியில் இருந்து கட்டம் கட்டினார்,” என்கிறார்கள் மூத்த நிர்வாகிகள்.

சிங்காரம்

வெங்கடாசலத்திடம் கட்சி நிதியாக கணிசமாக கோடிகளை தலைமை கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதேநேரம், சட்டமன்றத் தேர்தலின்போது சில தொகுதிகளின் செலவுகளை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டாராம். அதன்பிறகே, வெங்கடாசலத்தை முற்றாக ஒதுக்கி வைக்காமல், டம்மியான ஒரு பதவியில் நியமிக்கப்பட்டார் என்கிறார்கள் சீனியர் ர.ர.க்கள்.

சேலம் மாநகர் மாவட்டத்திற்கு தற்போது புதிய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளவர்களில் ஒருவரான எம்.கே.செல்வராஜ், ஏற்கனவே மா.செ., பதவியில் 11 ஆண்டுகள் இருந்திருக்கிறார். பழுத்த அனுபவசாலியான இவர், 2011-2016 வரை எம்எல்ஏ ஆக இருந்துள்ளார்.

எம்.கே.செல்வராஜ் – ஏ.கே.எஸ்.எம்.பாலு

தெலுங்கு செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த எம்.கே.செல்வராஜ், நடுவில் சிறிது காலம் ஓ.பி.எஸ். அணிக்கு தாவிவிட்டு, மீண்டும் எடப்பாடியுடன் ஐக்கியமாகி விட்டார். சேலம் தெற்கு தொகுதியில் தெலுங்கு, கன்னடம் பேசும் செட்டியார் சமூகத்தினர் கணிசமாக உள்ளதாலும், எல்லோரையும் அரவணைத்துச் செல்லக்கூடியவர் என்பதாலும் அவரை ‘டிக்’ செய்தாராம் எடப்பாடி.

மற்றொரு பொறுப்பாளரான ஏ.கே.எஸ்.எம்.பாலு, எடப்பாடி பழனிசாமியின் தீவிர விசுவாசி. கட்சியில் பிளவு ஏற்பட்டபோது கூட அவர் இபிஎஸ் பக்கமே நின்றார். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். சேலம் மேற்கு, சேலம் வடக்கில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமூகத்தைக் குறிவைத்து, பாலுவை நியமித்து இருக்கிறார் எடப்பாடி.

மாடுகள் பூட்டிய தண்ணீர் வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தவர்தான் ஏ.கே.எஸ்.எம்.பாலு. இரண்டுமுறை மாநகராட்சி கவுன்சிலர், மண்டலக்குழுத் தலைவர் பதவிகளில் இருந்தவர். ரியல் எஸ்டேட்டில் பெரும்புள்ளியான இவர், சொந்தமாக பொக்லின் வாகனங்களை வைத்து தொழில் செய்து வருகிறார்.

மூத்த நிர்வாகிகள் சிலரோ,
”சேலம் தெற்கு சிட்டிங்
எம்எல்ஏவான பாலசுப்ரமணியத்தின்
பெயரும் மா.செ. பதவிக்கு
பரிசீலிக்கப்பட்டது. ஆனால்,
2022ல் நடந்த மாநகராட்சி
தேர்தலின்போது, எம்ஜிஆர் மன்ற
துணை செயலாளராக இருந்த
சுகுமாருக்கும், பாலசுப்ரமணியத்துக்கும்
கொடுக்கல் வாங்கல் பிரச்னையில்
கட்சித் தலைமைக்கு பாலசுப்ரமணியம்
மீது அதிருப்தி கிளம்பியது.

பாலசுப்ரமணியம்

கன்னட செட்டியார் சமூகத்தைச்
சேர்ந்த அவர், ‘என் ஜாதியில்
இருந்து என்னைத் தவிர கட்சி
பொறுப்புக்கு புதிதாக ஒருவரை
கொண்டு வர முடியுமா?,’
என பகிரங்கமாக பேசி வந்தார்.
இதை தலைமை கொஞ்சமும்
ரசிக்கவில்லை.

இதையடுத்து பாலசுப்ரமணியனின்
மூக்கை உடைக்க வேண்டும்
என்று திட்டமிட்ட சிங்காரம்,
அதே கன்னட செட்டியார்
சமூகத்தைச் சேர்ந்த,
அவருக்கு நெருக்கமாக
இருந்த மீனாட்சிசுந்தரம், சக்கரவர்த்தி
ஆகிய இருவரையும் பகுதி
செயலாளராக நியமித்தார்.
வாய் நீளம் என்பதால்தான்
பாலசுப்ரமணியனை மா.செ.
பதவிக்குக் கொண்டு வரவில்லை,”
என்கிறார்கள்.

இது தொடர்பாக சேலம் மாவட்ட பொறுப்பாளரான சிங்காரத்திடம் கேட்டபோது, ”2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி கட்சியில் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. யாருக்கும் எந்தப் பதவியும் நிரந்தரமானது இல்லை. கட்சித் தலைமையின் முடிவை விமர்சிப்பது அழகல்ல,” என சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

முன்னாள் மா.செ. வெங்கடாசலத்திடம் விளக்கம் பெற செல்போனில் பலமுறை அழைத்தும், அவர் அழைப்பை ஏற்கவில்லை.

கட்சி சீரமைப்பு என்ற பெயரில் சொந்த மாவட்டத்தில் எடப்பாடி – சிங்காரம் கூட்டணி புகாருக்கு உள்ளான நபர்களை நீக்கி வருவது கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதேவேளையில், பதவி இழந்த தரப்பினர் த.வெ.க.,வுக்கு தாவவும் நூல் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள் அதிருப்தி கோஷ்டியினர்.

  • பேனாக்காரன்

Leave a Reply