Sunday, March 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

அன்னை தெரேசா பெயரில்1000 கோடி ரூபாய் வசூல்!கதிகலங்கிய கூட்டுறவு வங்கிகள்!

சேலத்தில், அன்னை தெரேசா டிரஸ்ட் பெயரில் மக்களிடம் சட்ட விரோதமாக 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த முன்னாள் பா.ஜ.க., பெண் நிர்வாகி உள்ளிட்ட 17 பேரை காவல்துறையினர் கொத்தாக கைது செய்துள்ளனர்.

சேலம் அம்மாபேட்டையில்
உள்ள சிவகாமி திருமண மண்டபத்தில்,
புனித அன்னை தெரேசா மனிதநேய
அறக்கட்டளை என்ற தொண்டு
நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுக்கும்
மேலாக இயங்கி வருகிறது.
இந்த அமைப்பின் மூலம்
பெண்களுக்கு தையல்,
பாக்கு தட்டு தயாரித்தல்
உள்ளிட்ட கைத்தொழில்
பயிற்சிகள் இலவசமாக
வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜன. 23ம் தேதி,
இந்த மண்டபத்திற்குள்
பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக
முண்டியடித்துச் சென்றனர்.
மண்டபம் அமைந்துள்ள சாலையில்
போக்குவரத்து நெரிசல் ஏற்படும்
அளவுக்கு கூட்டம் திரண்டது.

அறக்கட்டளை நிர்வாகிகள்,
பொதுமக்களிடம் முதலீடுகளைப்
பெற்று வருவதாகவும்,
அதை இரண்டே மாதத்தில்
இரட்டிப்பாக திருப்பித் தருவதாகவும்
கவர்ச்சிகரமான திட்டத்தை
அறிவித்துள்ளதாக தகவல்கள் கசிந்தன.
சாத்தியமே இல்லாத திட்டமாக
இருக்கிறதே என புருவங்களை
உயர்த்திய சேலம் பொருளாதார
குற்றப்பிரிவு காவல்துறை,
கள நிலவரத்தை அறிந்து வர
எஸ்.ஐ., ஒருவரை நிகழ்விடத்திற்கு
அனுப்பி வைத்தது.

சாதாரண உடையில் முதலீட்டாளர் போல மண்டபத்திற்குள் சென்ற அந்த எஸ்.ஐ., செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அதை கவனித்துவிட்ட அந்த என்ஜிஓ நிர்வாகிகள், அவரை மிரட்டியுள்ளனர். வந்தவர் எஸ்.ஐ., என்று தெரிய வந்த பிறகு வாக்குவாதம் முற்றி, ஒரு கட்டத்தில் கைகலப்பு வரை சென்றது.

நிலைமை கைமீறிப் போகவே, பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி வெங்கடேசன், ஆய்வாளர் சித்ராதேவி மற்றும் அம்மாபேட்டை காவல்துறையினர் பெரும்படையுடன் திருமண மண்டபத்திற்குள் அதிரடியாக நுழைந்தனர்.

காவல்துறை விசாரணையில், பல திடுக்கிடும் மோசடி தகவல்கள் வெளியாகின.

மண்டபத்திற்குள் நுழைந்த
காவல்துறையினர், முதலீட்டாளர்களை
வெளியேற்றிவிட்டு கதவுகளை
உள்பக்கமாக பூட்டிக் கொண்டனர்.
அங்கிருந்த, அறக்கட்டளையின்
தலைவர் விஜயபானு (48),
துணைத் தலைவர் ஜெயபிரதா (47),
செயலாளர் பாஸ்கர் (49)
ஆகியோரை கைது செய்தனர்.
மக்களிடம் டெபாசிட் தொகையைத்
திரட்டுவதற்காக அவர்கள் சட்டப்பூர்வ
அனுமதி பெறவில்லை என்ற
பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது
வழக்குப்பதிவு செய்தனர்.
காவல்துறையினரை தாக்கியதாக
இந்நிறுவன ஊழியர்கள் 12
பேரையும் கொத்தாக அள்ளினர்.

விஜயபானு – ஜெயப்பிரதா

மண்டபத்திற்குள் போலீசார்
நுழைவதைப் பார்த்ததும் என்ஜிஓ
நிர்வாகிகள் பணத்தை அங்கிருந்த
குப்பைத் தொட்டிகள், சமையல் பாத்திரங்கள்,
இண்டு இடுக்கு, சந்து பொந்துகளில்
எல்லாம் ஒளித்து வைத்தனர்.
அங்குலம் அங்குலமாக
சோதனையிட்ட காவல்துறையினர்,
அங்கிருந்து 12.65 கோடி
ரூபாய் ரொக்கம், 2.50 கிலோ தங்கம்,
13 கிலோ வெள்ளி, 300 மூட்டை
அரிசி, மளிகை பொருட்களைக்
கைப்பற்றினர்.

பிடிபட்ட தொகை அன்று
ஒரு நாள் வசூல் என்கிறார்கள்.
நெசவாளர்கள், நடுத்தர மக்கள்,
சிறு தொழில்முனைவோர் போன்ற
சாதாரண மக்கள்தான்
இந்த கும்பலின் இலக்காக இருந்திருக்கிறது.
30 லட்சம், 50 லட்சம் ரூபாய் என
கொத்தாக முதலீடு செய்த சிலரும்
இருக்கிறார்கள். பெரும்பாலானோர்
2 லட்சம் முதல் 5 லட்சம் வரை
செலுத்தி இருக்கிறார்கள்.

இதுபற்றி பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையிடம் கேட்டோம்.

”சேலம், வேலூர், சென்னை,
திருப்பத்தூர், கோவை, ஈரோடு,
நாமக்கல், திருப்பூர், பெரம்பலூர்,
அரியலூர், திருச்சி, நெல்லை,
தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச்
சேர்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்
இந்த நிறுவனத்தில் டெபாசிட்
செய்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில்
700 முதல் 1000 கோடி ரூபாய் வரை
வசூல் செய்திருக்கலாம் என
சந்தேகிக்கிறோம். டெபாசிட்
செய்ததற்கான முறையான
ரசீது தரப்படவில்லை.

ஒரு லட்சம் ரூபாய்க்கு
30 ஆயிரம் வீதம் 9 மாதத்திற்கு
இரட்டிப்பு மடங்கிற்கு மேல்
திருப்பிக் கொடுத்துள்ளனர்.
இதனால் மக்களிடம் நம்பிக்கை
ஏற்பட்டு, மேலும் மேலும்
டெபாசிட் பணத்தைக் கொட்டியுள்ளனர்.
டெபாசிட் திரட்டி வர
முகவர்களும் உள்ளனர்.

கைது செய்யப்படுவதற்கு
சில நாள் முன்பு, முதலீட்டுத்
தொகையை இரண்டே மாதத்தில்
இரட்டிப்பாகத் தரப்படும் என
அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதனால்தான் கூட்டம் கட்டுக்கடங்காமல்
வந்துள்ளது. சட்டம் ஒழுங்கு
பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக
முக்கிய நிர்வாகிகளை கைது
செய்துள்ளோம். அவர்களை காவலில்
எடுத்து விசாரித்தால் மேலும்
விவரங்கள் தெரிய வரலாம்,”
என்கிறது காவல்துறை.

பாஸ்கர் – சையது மகமது

இதற்கிடையே, ஜன. 27ம் தேதி விஜயபானுவின் முக்கிய உதவியாளரான வேலூரைச் சேர்ந்த சையத் மகமது என்பவரையும் கைது செய்திருக்கிறது போலீஸ்.

புதிய அகராதி இணைய ஊடகம் நடத்திய கள விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சர்ச்சைக்குரிய இந்த அறக்கட்டளை, 11.8.2017ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடைசியாக கைது செய்யப்பட்ட சையத் மகமது, இந்த டிரஸ்டின் அறங்காவலர்களுள் ஒருவர்.

முதலீட்டாளர்களுக்கு ஒரு துண்டு அட்டையில் அவர்களின் பெயர், செல்போன் எண், கார்டு எண், ஆதார் எண் ஆகிய விவரங்களை கையால் எழுதி, நிறுவனர் கையொப்பத்துடன் கொடுத்துள்ளனர். இதைத்தான் ரசீது என்கிறார்கள். அதில், டெபாசிட் செய்த தொகை பற்றிய குறிப்புகள்கூட இல்லை.

ரசீது அட்டை

ஒவ்வொரு நபரிடமும் பெற்ற டெபாசிட் தொகை விவரங்களை டிரஸ்ட் தரப்பில் பராமரிக்கப்படும் பதிவேட்டில் குறித்து வைத்துள்ளனர். வெளி நபர்களுக்கு சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, ரசீது அட்டையில் ‘உதவி பெறுவோர்’ என்றே அச்சிட்டு கொடுத்துள்ளனர். அதாவது, ஒரு தொண்டு நிறுவனம் ஏழைகளுக்கு சுயதொழில் செய்ய நிதி உதவி செய்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு திட்டமிட்டு இயங்கியுள்ளனர்.

மண்டபத்திற்குள் நுழைவோர் யாராக இருந்தாலும் அவர்களிடம் பலத்த விசாரணை செய்து, செல்போனை வாங்கி வைத்துக் கொண்ட பிறகே அனுமதிக்கின்றனர். யாராவது துருவி துருவி விசாரிப்பது தெரிந்தாலே குண்டர்களை வைத்து வெளியேற்றி விடுகின்றனர். இப்படி எல்லா வகையிலும் ஒருவித எச்சரிக்கையுடன் ‘விஜயபானு அன் கோ’ செயல்பட்டு வந்துள்ளது.

‘இரண்டு மாதத்தில் இரட்டிப்பு’ என்ற திட்டத்தில் ஒரு லட்சத்திற்கு மேல் முதலீடு செய்யும் டெபாசிட்தாரர்களுக்கு தங்கத்தினாலான மூக்குத்தி, தோடு, நெக்லஸ் மற்றும் தங்கம், வெள்ளி நாணயங்களை பரிசாக அளித்துள்ளனர். இதற்காக தங்கம், வெள்ளி நாணயங்கள், தங்க பிஸ்கட்டுகளை சேலத்தில் உள்ள ஒரு முன்னணி நகைக்கடையில் கொள்முதல் செய்திருப்பது தெரிய வந்தது. லட்சத்திற்கும் குறைவான முதலீட்டாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்களை அன்பளிப்பாக அளித்துள்ளனர்.

அறுபதே நாளில் இரட்டிப்பு மடங்கு பணம் என்றதும் ஆலாய்ப் பறந்த முதலீட்டாளர்கள், சேலம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் செலுத்தியிருந்த டெபாசிட் தொகையை அவசர அவசரமாக எடுத்துள்ளனர். பலர், வீட்டில் இருந்த நகைகளை எல்லாம் கூட்டுறவு சங்கங்களில் அடமானம் வைத்து 10 லட்சம், 15 லட்சம் ரூபாய் என கடன் பெற்றுள்ளனர். கொத்து கொத்தாக டெபாசிட் இருப்பு குறையத் தொடங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கூட்டுறவு சங்க செயலாளர்களும் அன்னை தெரேசா டிரஸ்ட் குறித்து விசாரிக்கும்படி ஏற்கனவே புகார் அளித்துள்ளனர்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், முதலீட்டாளர்கள் தரப்பில் என்ஜிஓ மீது பலத்த நம்பிக்கையே நிலவுவதையும் களத்தில் காண முடிந்தது. டெபாசிட்தாரர்களிடம் பெறப்பட்ட முதலீட்டுக்கு என்ன உத்தரவாதம் அளிக்கப்பட்டதோ அதை இந்த டிரஸ்ட் இதுவரை முறையாக திருப்பி அளித்திருக்கிறது என்கிறார்கள் முதலீட்டாளர்கள். அதனால்தான் தெரேசா டிரஸ்ட் மீது மக்களுக்கு பலத்த நம்பிக்கை ஏற்படுத்துள்ளது.

அந்த அறக்கட்டளை அலுவலகத்திற்குச் செல்லும் முதலீட்டாளர்கள், சுயதொழில் முனைவோருக்கு வெறும் 10 ரூபாய்க்கு சாப்பாடு, பலகாரங்களை கொடுத்துள்ளனர். இப்படி மெல்ல மெல்ல மக்களிடம் இந்த டிரஸ்ட் நிர்வாகிகள் நம்பிக்கையைப் பெற்றுள்ளதும் தெரிய வந்தது.

இப்போது காவல்துறையினர் உள்ளே நுழைந்துவிட்டதால் எங்களுக்கு அசல் பணம் திரும்பக் கிடைக்குமா என்பதே சந்தேகம்தான் என புலம்புகிறார்கள். இதனால் நிறுவனத்திற்கு எதிராக புகார் கொடுக்கவே பலரும் தயங்குகிறார்கள். காவல்துறையினர் கெஞ்சி கேட்டுக் கொண்டதால் முதல்கட்டமாக 60 பேர் வரை புகார் அளித்துள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க,
விஜயபானு, ஜெயபிரதா ஆகிய
இருவரும் சேர்ந்து ‘விபிஜே கோல்டு
பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில்
5 லட்சம் ரூபாய் பங்கு
மூலதனத்துடன் ஒரு நிறுவனத்தை
(ஜிஎஸ்டி எண்: 33 ஏஏகேசிவி 0848 சி1 இசட் ஐ),
கடந்த 4.4.2024ம் தேதி பதிவு செய்துள்ளனர்.
தவிர, காட்பாடியில் ‘அன்னை
தெரேசா புட்ஸ்’ என்ற பெயரில்
விஜயபானுவை இயக்குநராக
கொண்ட நிறுவனமும் பதிவு
செய்யப்பட்டுள்ளது. எனினும்,
இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள்
குறித்த விவரங்கள் கிடைக்கவில்லை.

டெபாசிட் தொகையை பெறுவது,
இரட்டிப்பு மடங்காக திரும்ப
வழங்குவது அனைத்தையுமே
விஜயபானு தரப்பு, ரொக்கமாகவே
கையாண்டு வந்துள்ளது.
அன்றாடம் திரட்டப்படும்
பல கோடி ரூபாய் பணத்தை
அவர்கள் எங்கே? யார் மூலம்?
எந்த வகையில் பத்திரப்படுத்தினார்கள்?
என்பதும் பலத்த சந்தேகத்தை
ஏற்படுத்தி இருக்கிறது.

பங்குச்சந்தை, கமாடிட்டி
மார்க்கெட்டில் முதலீடு
செய்தாலும் கூட இந்தளவுக்கு
பெருக்க முடியாத பணத்தை,
குறுகிய காலத்தில் பல மடங்காக
திருப்பித் தந்தது எப்படி?
கிறித்தவ மிஷனரி பெயரில்
ஹவாலா பணம் புழங்குகிறதா?
கருப்புப் பணத்தை
வெள்ளையாக்குகிறார்களா?
என பல கேள்விகளையும்
முன்வைக்கிறது காவல்துறை.

இப்போதைக்கு டிரஸ்ட் மற்றும்
முக்கிய நிர்வாகிகளின் வங்கிக்
கணக்குகளை முடக்கி உள்ளனர்.
பிடிபட்ட முக்கிய நிர்வாகிகள்
நால்வரின் வங்கிக் கணக்குகளில்
சுமார் 3 கோடி ரூபாய் வரை
ரொக்கம் இருப்பதையும்
காவல்துறை உறுதிப்படுத்தி உள்ளது.

இந்த கும்பலின் பினாமி யார்?
அல்லது இவர்கள் யாருக்காவது
பினாமிகளாக செயல்பட்டார்களா?
என்ற ரீதியிலும் விசாரணை
நடந்து வருகிறது.

விஜயபானு ஏற்கனவே, வேலூர் மாவட்ட பா.ஜ.க.,வில் எஸ்சி பிரிவு தலைவராக இருந்துள்ளார். கடந்த 2022ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வேலூர் மாநகராட்சியில் பாஜக சார்பில் 5வது வார்டில் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளார்.

இந்நிலையில் வேலூர்,
ஆந்திரா மாநிலம் சித்தூர்
பகுதிகளில் மக்களிடம்
பண இரட்டிப்பு ஆசை காட்டி
மோசடி செய்ததாக சித்தூர்
காவல்துறையினர் விஜயபானு,
சையது மகமது உள்ளிட்டோரை
சில ஆண்டுக்கு முன்பு கைது
செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்குப்
பிறகு அவரை பாஜகவில் இருந்து
நீக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
அதன்பிறகுதான் விஜயபானு
வேலூரில் இருந்து சேலத்திற்கு
ஜாகையை மாற்றியுள்ளார்.

சேலம் அம்மாபேட்டையில் உள்ள
திமுகவைச் சேர்ந்த கிறித்தவ
பாதிரியார் செந்தில்குமார்,
அவருடைய சகோதரர் பாஸ்கர்
மூலமாகத்தான் விஜயபானு
சேலத்திலும் கிளை பரப்பி
இருப்பது தெரிய வந்துள்ளது.
மக்களிடம் திரட்டப்பட்ட டெபாசிட்
தொகையில் பல கோடி ரூபாயை
செந்தில்குமார் கையாடல் செய்ததாகவும்,
அதனால் இருவருக்கும் மோதல்
ஏற்பட்டு, விஜயபானு தனது
குழுவினருடன் இரண்டு ஆண்டுக்கு
முன் பிரிந்து சென்று சிவகாமி
திருமண மண்டபத்தை வாடகைக்கு
எடுத்து அலுவலகம் நடத்தி
வந்ததாகச் சொல்கிறார்கள்.
விரைவில் செந்தில்குமாரையும்
விசாரணை வளையத்திற்குள்
கொண்டு வர காவல்துறை
திட்டமிட்டுள்ளது.

ஆதரவற்றோருக்கு தேடித்தேடிச் சென்று அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கியதன் மூலமாக நம்பகத்தன்மையைப் பெற்ற இந்த நிறுவனம், அதை பணமாக்க முயற்சித்துள்ளது. அத்துடன், கிறித்தவ மதத்திற்கு மாற்றும் பணிகளிலும் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளனர்.

சேலத்திற்கு வந்த பிறகு விஜயபானு, தன்னை திமுக ஆதரவாளராகவும் காட்டிக்கொண்டார். ஆளுங்கட்சி பிரமுகர்களை அழைத்து சில நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார்.

இதற்கிடையே, தங்கள் முதலீட்டை பெற்றுத் தரக்கோரியும், விஜயபானு உள்ளிட்டோரை கைது செய்த காவல்துறையைக் கண்டித்தும் முதலீட்டாளர்களில் ஒரு பிரிவினர் சேலம் கோட்டையில் பிப். 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய விந்தையும் நடந்தது.

விஜயபானு மற்றும் அவருடைய குழுவினரை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க இருக்கிறது காவல்துறை. அப்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • பேனாக்காரன்

Leave a Reply