Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

துணை வேந்தர் கணபதி பணியிடை நீக்கம்; ஆளுநர் உத்தரவு

பணி நியமனத்திற்காக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலை துணை வேந்தர் கணபதியை பணியிடை நீக்கம் செய்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

கோவை பாரதியார் பல்கலையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் சுரேஷ். அவரை அந்தப் பணியில் நியமனம் செய்வதற்காக பல்கலை துணைவேந்தர் கணபதி, ரூ.30 லட்சம் கேட்டுள்ளார்.

 

கடந்த 3ம் தேதி சுரேஷ் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி துணை வேந்தரிடம் லஞ்சப்பணத்தைக் கொடுப்பதற்காக அவருடைய வீட்டிற்குச் சென்றார். லஞ்சம் வாங்கிய துணை வேந்தர் கணபதியை, லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

கணபதியின் லஞ்ச பேரத்திற்கு உடந்தையாக இருந்ததாக பாரதியார் பல்கலை பேராசிரியர் தர்மராஜ் என்பவரையும் கைது செய்தனர். கணபதி, சிறையில் அடைக்கப்பட்டு 48 மணி நேரத்திற்கு மேலாகியும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்படாமல் இருந்தார்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், அவரை பணியிடைநீக்கம் செய்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார்.

மறு உத்தரவு வரும் வரை இந்த பணியிடை நீக்கம் தொடரும் என்றும், ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர், துணைவேந்தர் கணபதி பொறுப்பேற்றதில் இருந்து நியமிக்கப்பட்ட அனைத்து பணி நியமனங்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.