Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

வாயை மூடுங்கள்!: அமைச்சர்களுக்கு ஹைகோர்ட் அட்வைஸ்

நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதாக அளித்த வாக்குறுதியை அமைச்சர்களால் செயல்படுத்த முடியாததால், அவர்கள் இதுபற்றி ஊடகங்களிடம் பேட்டி கொடுக்க வேண்டாம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவுரை கூறியுள்ளார்.

தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வு விவகாரம் உச்சத்தில் இருந்தபோது, அது தொடர்பான வழக்குகளை விசாரித்தபோதெல்லாம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாரன், அத்தேர்வுக்கு ஆதரவு வழங்கினார். இந்நிலையில், நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வி மற்றும் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்ததால் விரக்தியில் அரியலூர் மாணவி அனிதா கடந்த 1ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து தமிழகமெங்கும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வலுத்தது. பல இடங்களில் பள்ளி மாணவ, மாணவிகளும்கூட ஆர்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நீட் தொடர்பாக தொடரப்பட்ட ஒரு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் அனிதா மரணம், அமைச்சர்கள் செயல்பாடுகள் குறித்தும் கருத்துகளை தெரிவித்தார். அதன் விவரம்:

‛நீட்’ தேர்வில் விலக்கு பெறுவோம் என்ற வாக்குறுதி மூலம் மேலும் மாணவர்களை ஏமாற்றவேண்டாம். தேவையில்லாமல் டிவியில் பேட்டி கொடுக்க வேண்டாம். ‛நீட்’ தேர்வில் விலக்கு என்ற வாக்குறுதியை அமைச்சரால் செயல்படுத்த முடியவில்லை.

‛நீட்’ தேர்வில் விலக்கு பெற்று தருவதாக ஏமாற்றி இருக்கிறீர்கள். அமைச்சரின் வாக்குறுதியை நம்பி தமிழக மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அமைச்சர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். காலதாமதத்தால் ஒரு உயிரை இழந்து நிற்கிறோம். இவ்வாறு நீதிபதி கிருபாகரன் கூறினார்.