Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘சேலம் சங்கமம்’ தமிழர் கலைவிழா! நாளை நடக்கிறது!!

 

காணும் பொங்கல் விழாவையொட்டி,
சேலத்தில் நாளை (17.1.2019, வியாழக்கிழமை)
மாலை ‘சேலம் சங்கமம் – 2019’ என்ற பெயரில் சிறப்பு கலை விழா நடக்கிறது.

தமிழர்களின் பாரம்பரிய விழாக்களுள் ஒன்றான
பொங்கல் விழா, பழையன கழிந்து புதியன புகும்
போகியில் தொடங்கி, உற்றார், உறவினர்களை
நேரில் சென்று சந்தித்து உறவாடும் காணும்
பொங்கலுடன் நிறைவடைகிறது.
பொங்கல் விழாவின்
நான்காவது மற்றும் கடைசி நாள் காணும் பொங்கல்
கொண்டாடப்படுகிறது.
அன்றைய நாளில்,
உறவினர்களைச் சந்தித்து
கூடிப்பிரிதல்
மட்டுமின்றி,
கேளிக்கைகளிலும்
ஈடுபடுவது நம் மரபு.

 

இந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில்,
கந்தாஸ்ரமம் முருகன் கோயில் பின்புறம் உள்ள
கிரீன் வேலி ஸ்போர்ட்ஸ் கிளப்புக்குச்
சொந்தமான கிரிக்கெட் மைதானத்தில்,
‘சேலம் சங்கமம்-2019’
என்ற கேளிக்கை நிகழ்ச்சிக்கு
ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

 

இந்நிகழ்ச்சி
நாளை (ஜனவரி 17) மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
இரவு 10 மணி வரை நிகழ்ச்சிகள்
நடக்கின்றன.

பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனி,
சேலம் சங்கமம் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து,
அவருக்கே உரித்தான நகைச்சுவைத் தூவலுடன்
தமிழர் பாரம்பரியம் குறித்து பேசுகிறார்.

 

பிரபல கலைஞர்களின்
பரத நாட்டிய முதல் தமிழ் மணம் கமழும் கரகாட்டம்,
ஒயிலாட்டம், தப்பாட்டம் வரை கலவையான நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன.
கேரளத்தின் கதகளி முதல் அண்மைய வரவான
ஜிமிக்கி கம்மல் பாடல் வரை கேரள பெண் கலைஞர்கள் பங்குபெறும்
நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

 

வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமின்றி
திறமையாளர்களை ஊக்குவிக்கும் நிகழ்வுகளும் உண்டு.
ஆணழகன் பட்டம் வென்ற இளைஞர்,
நலிந்த, நாட்டுப்புற கலைஞர்களுக்கு
விருதுகளும் வழங்கப்படுகின்றன.

 

திரைப்படத்துறையைச் சார்ந்த கலைஞர்கள்,
பிரபல சின்னத்திரை கலைஞர்களும்
இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
எனினும், பங்கேற்க உள்ள கலைஞர்கள் யார் யார்
என்ற பட்டியல் அழைப்பிதழில் குறிப்பிடப்படவில்லை.
சீறிப்பாயும் காளையை வீரன் ஒருவன் அதன்
திமிலைப் பிடித்து அடக்கும் காட்சியை முகப்புப் படமாக வைத்து,
சேலம் சங்கமம் அழைப்பிதழை விழாக்குழுவினர் அச்சிட்டுள்ளது,
பெரிதும் கவனம் ஈர்த்துள்ளது.

 

சேலத்தில் முதன்முதலாக இதுபோன்ற
மாபெரும் கேளிக்கை நிகழ்ச்சி
சேலம் சங்கமம் என்ற பெயரில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டிக்கெட் இருப்போர் மட்டுமே நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படுவர்.
ஒரு டிக்கெட்டில் அதிகபட்சம் 5 பேர் கலந்து கொள்ளலாம் என்கிறது விழாக்குழு தரப்பு.
டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது
நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்
பார்வையாளர்களுக்கு சுவையான இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

 

ஒவ்வொரு நிகழ்ச்சியையும் சேலத்தின்
பிரபல தொழில் அதிபர்கள்,
முக்கிய பிரமுகர்கள் துவக்கி வைக்கின்றனர்.
இவ்வாறு சேலம் சங்கமம்
அமைப்பாளர் ராஜ்குமார்
தெரிவித்துள்ளார்.