Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

”கமல்ஹாசனை சுட்டுக் கொல்வோம்”!: இந்து மகா சபா மிரட்டல்

ஹிந்துக்களுக்கு எதிராக பேசும் கமல்ஹாஸனையும், அவரைப் போன்றவர்களும் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபா தேசியத் துணைத்தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா மிரட்டல் விடுத்துள்ளார்.

நடிகர் கமல்ஹாஸன் சில நாள்களுக்கு முன், ‘தமிழ்நாட்டில் இந்து தீவிரவாதம் ஊடுருவிட்டது. இந்து தீவிரவாதிகள் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான்’ வேண்டும்
என்று கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன.

உத்தரபிரதேசத்தில் கமல்ஹாஸன் மீது மதத்திற்கு எதிராக அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இதற்கிடையே அகில பாரத இந்து மகாசபாவின் தேசிய துணைத்தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா, மீரட் நகரில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது:

கமல்ஹாஸனும் அவரைப் போன்றவர்களும் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் அல்லது தூக்கிலிடப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நாம் பாடம் கற்பிக்க முடியும். இந்துக்கள் மீதும், இந்துக்களின் நம்பிக்கைகள் மீதும் யார் ஒருவர் தகாத வார்த்தைகளை சொல்கிறார்களோ அவர்கள் இந்த புனித பூமியில் வாழத் தகுதி அற்றவர்கள். கமல்ஹாஸன் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு பண்டிட் அசோக் ஷர்மா மிரட்டல் விடுத்துள்ளார்.

மீரட் நகர தலைவரான அபிஷேக் கூறுகையில், ”கமல்ஹாஸன் நடிக்கும் படங்களை பார்க்க மாட்டோம் என்று அகில பாரத இந்து மகாசபா தொண்டர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும். அவர்கள் உறுதிமொழி ஏற்றாலே இந்தியாவே உறுதியேற்றது போலாகும். இந்துக்களையும், இந்து மதத்தையும் விமர்சிப்பவர்களை நாம் மன்னிக்கவே கூடாது,” என்று கூறியுள்ளார்.

அவர்களின் கருத்துக்கு ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் கடும் கண்டனங்களும் எழுந்துள்ளன. கமல் ரசிகர்களும் இந்து மகாசபாவை விமர்சித்து கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

”இதற்குப்பேர் அன்பே சிவம் என்பதா? இதுதான் இந்து தீவிரவாதம்,” என்றும், ”மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதால் நீண்ட காலமாக அடக்கி வைத்திருந்த கொலைவெறியை இப்போது வெளியே காட்டுகிறார்கள்,” என்றும் ட்விட்டரில் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.  இணைப்பு.