Saturday, April 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

இந்தியாவில் அதிகரிக்கும் பொருளாதார ஏற்றத்தாழ்வு! – கோ.விசுவநாதன்

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியைப் பொருத்துதான் இருக்கும். உலகில் உள்ள நாடுகளில் சுமார் 70 நாடுகள் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளாக கருதப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சி என்பது, தனிநபர் வருமானத்தை வைத்துதான் கணக்கிடப்படுகிறது.

தனிநபர் வருமானம்
15 ஆயிரம் டாலர்கள் உள்ள
நாடுகளை வளர்ந்த நாடுகள்
என்று அழைக்கிறோம். மீதமுள்ள
நாடுகளை வளரும் நாடுகள்,
வளர்ச்சி பெறாத நாடுகள் என்று
இரு வகையாகப் பிரித்து
வைத்திருக்கிறோம்.

அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே உலகில் பெரிய பொருளாதார நாடுகளாக கருதப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அளவீட்டை வைத்துதான் தன்னிறைவு பெற்ற நாடு, வளர்ந்த நாடு, வளர்கின்றன நாடுகள் என்றெல்லாம் வகைப்படுத்தப்படுகின்றன.

நடப்பு 2023ம் ஆண்டில்,
அமெரிக்காவின் ஜிடிபி 26
டிரில்லியன் டாலர். சீனா 19 டிரில்லியன் டாலர்.
ஜெர்மனி 4.4 டிரில்லியன்,
ஜப்பான் 4.2 டிரில்லியன் டாலர்.
இந்தியாவின் ஜிடிபி 3.7 டிரில்லியன்
டாலராக உள்ளது. கடந்த நவம்பர் மாதம்
அது 4 டிரில்லியன் டாலராக அதிகரித்து
உள்ளதாக தகவல். நாம் ஐந்தாவது
இடத்தில் இருக்கிறோம்.

உலக நாடுகள் மொத்தம் 193.
அதில், ஜிடிபியில் நாம் ஐந்தாவது
இடத்தில் இருக்கிறோம்.
இது, மகிழ்ச்சியான விஷயம்தான்.
முதலில் நாம் ஏழாவது இடத்தில் இருந்தோம்.
இப்போது, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்
ஆகிய இரு நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி
ஐந்தாவது இடத்துக்கு
முன்னேறி இருக்கிறோம்.

அதேநேரம்,
தனிநபர் வருமானத்தில்
நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம்
என்பதையும் கவனத்தில்
கொள்ள வேண்டும். இந்தியாவின்
தனி நபர் வருமானம் 2600 டாலர்.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில்,
நாம் 139வது இடத்தில் இருக்கிறோம்.

மக்கள்தொகையில் நம்முடன்
போட்டி போடும் ஒரே நாடு
சீனா மட்டும்தான்.
சீனாவின் புதிய பொருளாதாரக் கொள்கை
1978-79ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
நம் நாட்டில் 1991ல்தான்
புதிய பொருளாதாரக் கொள்கை
அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போதைய பிரதமர் நரசிம்மராவ்
மற்றும் நிதி அமைச்சர் மன்மோகன் சிங்
இருவர்தான் இதற்குக் காரணம்.
நம் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்டது
இந்த புதிய பொருளாதாரக்
கொள்கைதான் என்று சொல்லலாம்.

1980ம் ஆண்டில் இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளுமே பொருளாதார ரீதியாக ஒரே நிலையில்தான் இருந்தோம். அப்போது இந்தியாவின் தனி நபர் வருமானம் 224 டாலர். சீனாவின் தனி நபர் வருமானம் 243 டாலராக இருந்தது. கடந்த 42 நாடுகளில் இந்தியா, சீனா இரண்டுமே வளர்ந்து இருக்கின்றன என்பதும் உண்மை.

அதேநேரம், சீனாவுடன் ஒப்பிடுகையில் நாம் வளர்ச்சியில் பின்தங்கிதான் இருக்கிறோம். 1980ல் சீனாவுக்கும் நமக்கும் தனி நபர் வருமானத்தில் வித்தியாசம் வெறும் 19 டாலர்தான். இப்போது அந்த வித்தியாசம் 10 ஆயிரம் டாலரைத் தாண்டி விட்டது. இதற்கு முக்கியக் காரணம் சீனாவின் கல்வி வளர்ச்சியும் தொழில் வளர்ச்சியும்தான்.

இந்தியாவில் உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கை 27 சதவீதம் மட்டுமே. இந்தியா வளர்ந்த நாடாக அங்கீகாரம் பெற உயர்கல்வி மிக அவசியம். ஆனால் உயர்கல்வியில் நாம் பின்தங்கிதான் இருக்கிறோம். அதேநேரம், சீனாவில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம். சீனாவின் வளர்ச்சிக்கு இது ஒரு முக்கிய காரணம்.

அதனால்தான் தொழில் உற்பத்தியில் உலக நாடுகள் எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு சீனா முதலிடத்தில் இருக்கிறது. 1980ல் உலக உற்பத்தியில் சீனாவின் பங்களிப்பு மூன்று சதவீதமாக இருந்தது. இப்போது 30 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடத்தை எட்டி இருக்கிறது சீனா. உலக உற்பத்தியில் இந்தியாவின் தற்போதைய பங்களிப்பு மூன்று சதவீதம்தான்.

சீனாவின் கட்டுப்பாடு, அரசு அளிக்கும் சலுகைகள், மக்களின் கடின உழைப்பு, ஏற்றுமதிக்கு அந்த நாடு தரும் முக்கியத்துவம் ஆகியவை சீனாவின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம். விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்த சீனா, இன்று உலகின் உற்பத்தி மையம் என்ற நிலைக்கு உயர்ந்து இருக்கிறது. இதை ஓர் அபரிமிதமான வளர்ச்சியாகத்தான் உலக நாடுகள் பார்க்கின்றன.

ஒரு நாட்டின் வளர்ச்சியின் பலன் எல்லா மக்களையும் சென்றடைய வேண்டும். ஆனால் நம் நாட்டில் அவ்வாறு நடைபெறவில்லை. வசதியானவர்கள் மேலும் வசதிகளைப் பெறுகிறார்கள். ஆனால் ஏழைகளுக்கு கடைசி வரை எதுவுமே எட்டவில்லை.

சான்றாகச் சொல்ல வேண்டுமானால், கொரோனா நோய்த்தொற்று காலத்தில் இந்தியாவில் பொது முடக்கம் அமலில் இருந்தது. இதனால் பலருக்கு வேலை பறிபோனது. ஊதியம் கிடைக்கவில்லை. வருமானம் குறைந்தது. கொஞ்சம் பேருக்கு வருமானமே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த ஆண்டு, அதாவது 2021ல் இரண்டு தொழில் அதிபர்களுக்கு மட்டும்தான் நான்கு லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கிறது.

2000ம் ஆண்டில் இந்தியாவில்

இருந்த பெரும் கோடீஸ்வரர்களில்

அதாவது பில்லியனர்கள் ஒன்பது பேர்தான்.

2022ல் அந்த எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது.

இதற்குக் காரணம் என்ன?

நமது பொருளாதாரக் கொள்கையில்

உள்ள குறைபாடுகள்தான்.

ஏற்கனவே ஜாதி, மதம் காரணமாக

ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இந்தியாவில்,

நமது பொருளாதாரக் கொள்கை

காரணமாக இப்போது மிகப்பெரிய

ஏற்றத்தாழ்வு நம்மைப் பிரிக்கிறது.

இந்த ஏற்றத்தாழ்வு நமது எதிர்கால

வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்காது.

நம்முடைய மக்கள்தொகை 140 கோடி. இதில் மேல் தளத்தில் உள்ள 10 சதவீதம் பேர் இந்த நாட்டில் 80 சதவீதம் சொத்துகளை வைத்திருக்கிறார்கள். கடைநிலையில் உள்ள 50 சதவீத மக்கள் வெறும் 6 சதவீத சொத்துகளைத்தான் வைத்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் மொத்த சொத்தில் ஒரு சதவீதம் பேரிடம் 37 சதவீத சொத்துகள் இருக்கின்றன. இந்தியாவில் ஒரு சதவீதம் பேரிடம் 58 சதவீத சொத்துகள் உள்ளன. அமெரிக்காவை விட இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைய இருக்கின்றன என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவை இல்லை.

அரசின் வரிச்சலுகைகள் மேல்தளத்தில் உள்ளவர்களுக்குதான் வழங்கப்படுகின்றன. அதேசமயம், இந்தியாவின் மொத்த வரி வருவாயில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக கடைநிலையில் உள்ளவர்கள்தான் (64 சதவீதம்) செலுத்துகின்றனர்.

ஜிஎஸ்டி வரி வருவாய்தான் மத்திய அரசுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருவதாக மத்திய அரசே புள்ளிவிவரங்கள் வாயிலாக ஒப்புக்கொள்கிறது. அதுமட்டுமின்றி, மாதந்தோறும் ஜிஎஸ்டி வரி வருவாய் அதிகரித்துக் கொண்டு இருக்கிறதே தவிர, குறைவதில்லை. இதையும் மத்திய அரசுதான் சொல்கிறது.

இந்த ஜிஎஸ்டி வரி வருவாயில் மேல்தளத்தில் உள்ளவர்கள் பங்களிப்பு வெறும் 4 சதவீதம் மட்டுமே. உலகில் உள்ள பல நாடுகளுடன் நமது நாட்டின் வரி விதிப்பு முறையை ஒப்பிட்டுக்கூட பார்க்க முடியாது. அவ்வளவு முரண்பாடுகள்.

கடந்த 2021ம் ஆண்டில் இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் 2.04 லட்சம் ரூபாய். ஆனால், கடைநிலையில் உள்ள 50 சதவீத மக்களின் சராசரி ஆண்டு வருமானம் 53 ஆயிரம் ரூபாய் மட்டும்தான். மேல் தளத்தில் உள்ள 10 சதவீத மக்களின் ஆண்டு வருமானம் 11.66 லட்சம் ரூபாய். அதாவது, கடைநிலையில் உள்ளவர்களை விட 20 மடங்கு அதிகம்.

எனவே, தனிநபர் வருமானத்திற்கான அளவீடு, அதன் கணக்கீடு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தவறான கணக்கீடோ என்ற சந்தேகமும வருகிறது. இந்த ஏற்றத்தாழ்வுதான் நமது நாட்டின் மொத்த வளர்ச்சியையும் பாதிக்கிறது.

ஏழை மக்களுக்கு எப்போதும் பொருளாதார தேவை தொடர்ந்து இருந்து கொண்டுதான் வருகிறது. இந்தத் தேவையை அவர்கள் பூர்த்தி செய்து கொள்வதற்கான வாய்ப்பை, அதற்கான வழியை அவர்களுக்கு முழுமையாக கிடைப்பதற்கு நாம் என்ன செய்தோம் என்ற கேள்வி தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது.

இதற்கு, அரசின் பொருளாதாரக் கொள்கைகளில் புரட்சிகரமான மாறுதல்கள் தேவை. பரந்த தோள்களில் அதிக சுமை இருக்க வேண்டும் என்பது வரி விதிப்பில் பொதுவான ஒரு நியதி. அந்த நியதியை நாம் வரி விதிப்பில் பின்பற்றுவதில்லை. இதுதான் இந்தக் கோளாறுக்கு முக்கிய காரணம்.

நாம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேகமாக வளர வேண்டும். அப்போதுதான் வளர்ந்த நாடாக இந்தியா அடையாளப்படுத்தப்படும். இதற்கு அரசியல் கருத்து வேறுபாடுகளுக்கு முக்கியத்துவம் தராமல் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள், பொருளாதார வளர்ச்சி என்ற நோக்கில் இருக்க வேண்டும்.

– கோ.விசுவநாதன்
விஐடி பல்கலை வேந்தர், வேலூர்.
தினமணி இதழில்.