Saturday, April 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

திண்ணை: ”எதையும் நியாயமாதான் செய்வோம்…!” பெரியார் பல்கலையில் அக்கப்போர்!

”தலைநகரையே புரட்டிப்போட்ட மிச்சாங் புயல் ஓய்ந்தாலும் கூட, சேலம் பெரியார் பல்கலையில் சனாதனத்திற்கும், திராவிடத்திற்குமான மோதல் இப்போதைக்கு ஓயாது போலருக்கு,” என்று நேரடியாக சப்ஜெக்டுக்கு வந்தார் பேனாக்காரர்.

காதுகளை தீட்டிக்கொண்டு ஆர்வமாகக் கேட்கத் தொடங்கினார் நம்ம நக்கல் நல்லசாமி.

”பெரியார் பல்கலையில்
முருகக்கடவுள் பேர் கொண்ட
அந்தப் பேராசிரியர், பெரியார் பற்றி
சில புத்தகங்களை தொகுத்து
வெளியிட்டு இருந்திருக்கிறார்.
அவரும்கூட கருப்புச்சட்டை சிந்தனாவாதிதான்.
இந்த புத்தகம் வெளியிட்டு,
அதையெல்லாம் விடியல் தலைவர்கிட்ட
காட்டி அந்த பேராசிரியர் வாழ்த்தெல்லாம்கூட
வாங்கிய படங்கள் பொதுவெளியில் வந்துச்சு,”

”அது தெரிஞ்ச சேதிதானே. மேலே சொல்லுங்க” அவசரம் காட்டினார் நக்கல் நல்லசாமி.

”பல்கலைக்கழக சாசன விதிகளின்படி,
முன்அனுமதி பெற்றுதான் புத்தகம் வெளியிடணுமாம்.
அந்த பேராசிரியர் பர்மிஷன்
ஏதும் வாங்கலையாம். அதற்காகத்தான்
இப்போது விளக்கம் கேட்டிருக்கு
‘பல்கொலை’ நிர்வாகம்.

அதுமட்டுமில்லாம,
பத்து வருஷத்துக்கு முன்னாடி
அந்த பேராசிரியர் ஒரு பொண்ணுக்கிட்ட
கசமுசாவில் ஈடுபட்டதாக இப்போது
ஒரு மொட்டைப் பெட்டிஷன் வந்துச்சாம்.
அதற்கும் விளக்கம் கேட்டிருக்காங்க.
அப்புறம் அவரு ஏதோ போலி ‘பில்’ மூலம்
பல்கலை பணத்தைக் கையாடல்
செய்ததாக ஒரு புகார். அதற்கும் பதில் கொடுங்கனு
‘சார்ஜ் மெமோ’ போட்டிருக்காங்களாம்பா.
புத்தகம் போட்டதெல்லாம் பிரச்னை இல்லையாம்.
பெரியார் பத்தி எழுதினதுதான்
பிரச்னைனும் சொல்லிக்கிட்டு ஒரு கோஷ்டி
பரப்பிக்கிட்டு இருக்கு,” என்றார்
பேனாக்காரர்.

”அண்ணே….
பல்கலையில் வழக்கமாக யாரையாவது
கட்டம் கட்டணும்னா முதல்ல அவங்க பேர்ல
உயர்கல்வித்துறை செக்ரட்டரி முதல் அமெரிக்க அதிபர் வரை
மொட்டை பெட்டிஷன் போட வைப்பாங்க.
அதுதான் இப்பவும் நடந்திருக்குனு
எனக்கொரு சோர்ஸ் சொன்னாங்க.
எதுலயும் ஒரு நியாயம் வேணும்லயா,”
என்றார் நக்கல் நல்லசாமி.

”டெஃபனெட்லி… டெஃபனெட்லி…”

”பல்கலையில் பெரிய பதவியில் இருக்கும் அந்த துணையானவர் சங்கி ஆதரவாளரா இருந்தாலும் ஓரளவு நல்ல மனுஷன்தான். ஆனால், முக்கிய பதவியில் ‘நிரந்தர’ இன்சார்ஜ் ஆக இருக்கும் அந்த ‘கோல்டுவேல்’ செய்யற கீழ்த்தரமான வேலைதான் இத்தனைக்கும் காரணம்,” என புது மேட்டருக்கு லீடு கொடுத்தார் பேனாக்காரர்.

காதுகளை மேலும் ஷார்ப் ஆக்கிக்கொண்டார் நக்கல் நல்லசாமி.

”அட… ஆமாப்பா… கோல்டுவேல் படிச்சது என்னவோ கணக்குப்பாடம்தான். ஆனா பெரியார் பல்கலையில் கம்ப்யூட்டர் வாத்தியாராதான் வேலைக்குச் சேர்ந்தார். இதெல்லாம் ஆடிட் அப்ஜெக்ஷன்லயும் சொல்லியிருக்கு. ஜெ., ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்னான ஐயனின் உறவுக்காரர் என்பதால் அந்த இன்ஃபுளூயன்சில் கம்ப்யூட்டர் வாத்தியாரா வேலைக்குச் சேர்ந்துட்டார் கோல்டுவேல்.

அவர் மேல 200 கம்ப்யூட்டர் வாங்கியதில் ஊழல், கம்ப்யூட்டர் சர்வர் பணிகளில் ஊழல்னு ஏகப்பட்ட புகார்கள் விஜிலன்ஸிசில் குவிஞ்சிருக்கு. இவரும் சங்கிதான் என்றாலும் விஞ்ஞான ரீதியாக ஊழல் பண்றதுல மூணெழுத்துக் கட்சிக்காரர்களுக்கு சளைச்சவர் இல்ல. இந்தப் புகார் மீதெல்லாம் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. யாராச்சும் கேள்வி கேட்டாக்க, அவங்கள காரணமே சொல்லாம சஸ்பெண்ட் பண்ணிடுவாரு கோல்டுவேல்,”

”ஆமாமா… அதிகார மையத்த எப்பவும் யாரும் கேள்வி கேட்டுடக்கூடாது. கேள்வி கேட்கறதுங்கறதே பெரிய குத்தம்தானே….” என சைடு கேப்புல குத்தினார் நக்கல் நல்லசாமி.

”கோல்டுவேல் 2024 பிப்ரவரியில
ரிட்டயர் ஆகப்போறாரு.
எப்படி இருந்தாலும் தன் மீது
வழக்கு பாயலாம்கிறத தெரிஞ்சுக்கிட்ட அவரு,
பல்கலை தரப்பில் இருந்து தனக்கு வர வேண்டிய
பணப்பலன்கள் 25 லட்சம் ரூபாயை
இப்பவே எடுத்துட்டாராம். கோல்டுவேலும்,
துணையானவரும் நெருங்கிய சொந்தம்கிறதால
இந்த இருவர் கூட்டணி போடற
ஆட்டத்துக்கு அளவே இல்லையாம்,”

”அதேமாதிரி,
தமிழ்த்துறையில் இருக்கற அந்த ‘பெரியகடவுள்’
ஒரே நேரத்தில் ஓதுவாராகவும்,
பி.ஹெச்டி., மாணவராகவும் இருந்துள்ளார்.
நடிகர் கமல் மாதிரி, தமிழ்த்துறை பெரியகடவுள்
ஏக காலத்தில் பல அவதாரங்களை
எப்படி எடுக்க முடியும்கிற லாஜிக் மிஸ்டேக்
இருந்தாலும், அந்த சர்டிபிகேட்களை
காட்டிதான் பணியில் சேர்ந்தாராம்.
அவர் மீது ஏகப்பட்ட புகார்கள்
இருந்தும் யாரும் கண்டுக்கல,”

”அந்தப் பெரியகடவுள் வாத்தியாரு, அதிகார மையத்தில் இருக்கும் விஐபிக்களின் சாதிக்காரர் என்பதால் அவர் மீதான புகார்களை யாரும் கண்டுக்கலையாம்,” என்றார் பேனாக்காரர்.

”சரி… அந்த புத்தகம் போட்டவர் பேரைச் சொல்லலியே”னு கேட்டார் நக்கலார்.

”பேரைச் சொல்லிட்டா சுவாரஸ்யம் குறைஞ்சிடுமே,” என்ற பேனாக்காரர், ”பெரிய கடவுளை பெரியசாமினும் சொல்லலாம்… முருக கடவுளை சுப்ரமணினும் சொல்லலாம்,”னு சொல்லிட்டு, அடுத்த கட்டுரை எழுத ஆயத்தமானார் பேனாக்காரர்.

 

– ஞானவெட்டியான்