Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கோகுல்ராஜின் நெருங்கிய தோழி சுவாதி நீதிமன்றத்தில் திடீர் ஆஜர்! கைது ஆணையால் அச்சம்!!

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல்
தொடர்ந்து போக்குக் காட்டி வந்த
கோகுல்ராஜின் தோழி சுவாதி,
கைது ஆணை நடவடிக்கைக்கு
பயந்து திடீரென்று நாமக்கல்
நீதிமன்றத்தில் ஆஜராகி
விளக்கம் அளித்தார்.

 

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் (23), கடந்த 23.6.2015ம் தேதி, நாமக்கல் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில்தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். அவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதியுடன் நெருங்கிப் பழகி வந்தார். அதனால் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த கோகுல்ராஜை ஆணவக்கொலை செய்திருக்க வேண்டும் என்று சர்ச்சைகள் எழுந்தன.

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த திருச்செங்கோடு காவல்துறையினர், கோகுல்ராஜை திட்டமிட்டு கொலை செய்ததாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர்.

கோகுல்ராஜ் கொல்லப்படுவதற்கு முன்பாக, அவரை கடைசியாக அழைத்துச்சென்றது யுவராஜூம் அவருடைய கூட்டாளிகளும்தான் என்பதை நேரில் பார்த்த ஒரே சாட்சி சுவாதி என்பதால், அவருடைய வாக்குமூலம் இந்த வழக்கில் அரசுத்தரப்பு துருப்புச்சீட்டாக கருதியது. ஆனால் அவர் பிறழ் சாட்சியாக மாறினார். அதற்கு, குற்றம்சாட்டப்பட்டவர்களும் சுவாதியும் கொங்கு வெள்ளா கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை முக்கிய காரணமாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் கருணாநிதி எடுத்துரைத்தார்.

 

இதையடுத்து, பிறழ் சாட்சியம்
அளித்த சுவாதி மீது இதச
பிரிவு 193ன் கீழ் நடவடிக்கை
எடுக்கக்கோரி சிபிசிஐடி
காவல்துறையினர், நாமக்கல்
முதலாவது நீதித்துறை நடுவர்
நீதிமன்றத்தில், கடந்த 2018,
அக்டோபர் 1ம் தேதி
மனுத்தாக்கல் செய்தனர்.

 

இந்த வழக்கு முதன்முதலாக கடந்த பிப்ரவரி 11, 2019ம் தேதி விசாரணைக்கு வந்தபோது சுவாதி விசாரணைக்கு ஆஜராகவில்லை. மீண்டும் கடந்த 20.2.2019ம் தேதி விசாரணைக்கு வந்தபோதும் சுவாதி நீதிமன்றத்திற்கு வரவில்லை. அவர் தரப்பில் வழக்கறிஞரும் வரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த முதலாவது நீதித்துறை நடுவர் வடிவேல், சுவாதிக்கு கைது ஆணை பிறப்பித்தும், அவரை மார்ச் 12ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

 

இதனால் சுவாதி தரப்பு ரொம்பவே
கலக்கம் அடைந்தது. இதையடுத்து,
நாமக்கல் இரண்டாவது குற்றவியல்
நீதித்துறை நடுவர் மன்றத்தில்
நீதிமன்ற நடுவர் ஜெயந்தி
முன்னிலையில், பிப்ரவரி 22, 2019ம் தேதி
திடீரென்று சுவாதி ஆஜரானார்.
கடந்த முறை வழக்கு விசாரணைக்கு
ஆஜராகாதது குறித்து விளக்கம் அளித்தார்.
அவருடைய விளக்கத்தை
ஏற்றுக்கொண்ட நீதித்துறை
நடுவர் ஜெயந்தி, அவர் மீதான
கைது ஆணையை ரத்து செய்தார்.
மேலும், வரும் மார்ச் 12ம் தேதி
விசாரணைக்கு ஆஜராகும்படி
உத்தரவிட்டார்.

 

– பேனாக்காரன்