Saturday, April 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை; உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அவருடையய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் டிச. 21ம் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

இருவரும், விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைய 30 நாள்கள் அவகாசமும் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

திமுகவின் மூத்தத் தலைவர்களில்

ஒருவரான க.பொன்முடி,

தற்போது தமிழக உயர்கல்வித்துறை

அமைச்சராக உள்ளார்.

இவர், கடந்த 2006 – 2011 வரையிலான

திமுக அமைச்சரவையில் உயர்கல்வி

மற்றும் கனிமவளத்துறை

அமைச்சராக பதவி வகித்தார்.

அப்போது,

வருமானத்திற்கு அதிகமாக

1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக

பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி

ஆகியோர் மீது கடந்த 2011ம் ஆண்டு

அதிமுக ஆட்சிக் காலத்தில்,

விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு

காவல்துறையினர்

வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விழுப்புரம்

ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.

பொன்முடி, விசாலாட்சி ஆகியோர்

மீதான குற்றச்சாட்டுகள் அரசுத் தரப்பில்

சரியாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறி,

இருவரையும் கடந்த 2016ம்

ஆண்டு விடுதலை செய்தது.

இதை எதிர்த்து,

சென்னை உயர்நீதிமன்றத்தில்

லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறை

கடந்த 2017ம் ஆண்டு

மேல்முறையீடு செய்தது.

இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் டிச. 19ம் தேதி பொன்முடி, விசாலாட்சி ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்தார். தண்டனை விவரங்கள் டிச. 21ம் தேதி அறிவிக்கப்படும் என்றும், அன்றைய தினம் இருவரும் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையடுத்து, உயர்நீதிமன்ற வளாகத்தில் டிச. 21ம் தேதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. வழக்கறிஞர்கள் கூட்டத்தால் நீதிமன்ற அறை நிரம்பி வழிந்தது. பொன்முடியும், அவருடைய மனைவி விசாலாட்சியும் காலை 9.50 மணிக்கு நீதிமன்றத்திற்கு வந்து காத்திருந்தனர். நீதிபதி ஜெயச்சந்திரன் 10.30 மணிக்கு வந்தார். அவர்கள் இருவரும் கைகூப்பியபடி, கண்ணீர் மல்க நின்று இருந்தனர்.

நீதிபதி: தண்டனை தொடர்பாக எதுவும் கூற விரும்புகிறீர்களா? (பொன்முடி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, இருவருடைய மருத்துவ அறிக்கைகளையும் தாக்கல் செய்தார்).

பொன்முடி: நான் நிரபராதி. எனக்கு 73 வயது ஆகிறது. இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன். போதிய சாட்சிகள் இல்லாததால் எங்கள் இருவரையும் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. எனவே, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

விசாலாட்சி: நானும் நிரபராதி. எனக்கு 68 வயதாகிறது. மூட்டு வலியால் அவதிப்படுகிறேன். எனவே, எங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

நீதிபதி: (மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்தார்). ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 13 (1) (இ)-ன் கீழ், வருமானத்திற்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய், அதாவது 64.90 சதவீதம் அளவுக்கு சொத்து குவித்ததாக இருவர் மீதான குற்றச்சாட்டும் அரசுத் தரப்பில் சரியாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆனால் கீழமை நீதிமன்றம் இதை சரியாக கவனத்தில் கொள்ளவில்லை. எனவே, இருவரையும் விடுதலை செய்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. இருவருக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன். அபராதம் செலுத்தத் தவறினால், மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ: இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வகையில், இந்த தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்.

நீதிபதி: தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது. இருவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், பொன்முடி அமைச்சர் என்பதாலும், அவர்கள் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய 30 நாள்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. ஜனவரி 22ம் தேதிக்குள் சரணடையாவிட்டால் இருவரையும் சிறையில் அடைக்க கீழமை நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விசாலாட்சி: (கண் கலங்கியபடி) என் கணவர் இதய நோயாளி. அவரை உடன் இருந்து கவனிக்க வேண்டியுள்ளதால் தண்டனையை குறைத்து வழங்க வேண்டும்.

நீதிபதி: பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் என்பதால், குற்றத்தின் தன்மையைப் பார்த்துதான் தீர்ப்பு அளித்துள்ளேன். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, உங்கள் குறைகளை முறையிடலாம்.

என்.ஆர்.இளங்கோ: இந்த வழக்கில் பொன்முடியின் சொத்துகளை முடக்குவது தொடர்பாக கடந்த 2011ம் ஆண்டில் நீங்கள் (நீதிபதி ஜெயச்சந்திரன்) தமிழக சட்டத்துறை செயலராக இருந்தபோதுதான் உத்தரவு பிறப்பித்துள்ளீர்கள்.

நீதிபதி: அது தொடர்பாக என் கவனத்துக்கு எதுவும் கொண்டு வரப்படவில்லை. இதை முன்பே நீங்கள் சுட்டிக்காட்டி இருந்தாலும்கூட, இந்த வழக்கில் இருந்து விலகி இருக்க மாட்டேன். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் முன்பாக நடந்த நிகழ்வு அது.

என்.ஆர்.இளங்கோ: உச்ச நீதிமன்றத்திற்கு கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஜனவரி 2ம் தேதிதான் மேல்முறையீடு செய்ய முடியும். எனவே, சரணடையும் கெடுவை 60 நாள்களாக நீட்டிக்க வேண்டும்.

நீதிபதி: ஒருவேளை, அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமானால் மீண்டும் இந்த நீதிமன்றத்தை நீங்கள் நாடலாம்.

இவ்வாறு நீதிபதி கூறிய பிறகு, பொன்முடியும், அவருடைய மனைவி விசாலாட்சியும் நீதிமன்ற கோப்புகளில் கையெழுத்திட்டனர். பகல் 12.40 மணிக்கு நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

– பேனாக்காரன்