சேலம் மாவட்ட மைய
நூலகத்திற்குச் சொந்தமான
ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள
இடத்தை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நிறுவனத்துக்கு இலவசமாக
கொடுக்க மாவட்ட நிர்வாகம்
முயற்சிப்பதால், நூலகத்துறை
அதிகாரிகள் கடும் அதிருப்தி
அடைந்துள்ளனர்.
சேலம் அரசு இருபாலர் கலைக்கல்லூரி அருகே, மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது. மாநகரின் மையப்பகுதியில் அசோகா மரம், புளிய மரம், பனை மரம், கொய்யா, மரமல்லி, பாதாம், வாழை மரங்கள் சூழ காற்றோட்டமான சூழ்நிலையில் இந்த நூலகம் அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்கள் தவிர மற்ற அனைத்து நாள்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்நூலகம் செயல்படுகிறது.
![](https://i2.wp.com/puthiyaagarathi.com/wp-content/uploads/2019/08/salem-collector-raman.jpg?resize=424%2C466)
சிவில் சர்வீசஸ் தேர்வு, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கென பிரத்யேக நூல்கள் தருவிக்கப்பட்டது, பெண்களுக்கென தனி வாசிப்புப்பிரிவு என தொடங்கப்பட்டதால் இளைஞர்களையும் பெரிய அளவில் கவனம் ஈர்த்திருக்கிறது. நாள்தோறும் 300க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து செல்கின்றனர். பாரம்பரியம்மிக்க இந்த நூலகத்திற்கு இப்போது சேலம் மாவட்ட கலெக்டர் மூலமாக புதிய சிக்கல்கள் உருவெடுத்துள்ளன.
சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட்டில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்ட மைய நூலகத்தில் இருந்து பழைய பேலஸ் திரையரங்கு வரை சாலையின் இருபுறமும் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், மாவட்ட மைய நூலகத்தின் முகப்புப் பகுதியில் இருந்து உள்புறமாக சுமார் 6 அடி வரையிலும் நிலம் பறிபோகிறது. அதேபோல், பேலஸ் திரையரங்கு எதிரில் செயல்பட்டு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான நியூ செஞ்சுரி புத்தக கடையும் அகற்றப்பட்டு உள்ளது. பாலம் கட்டுவதற்காக அந்த புத்தக கடை இடிக்கப்பட்டதால், ஏவிஆர் கல்யாண மண்டபம் எதிரில் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.
ரயில்வே மேம்பாலத்தால் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்குச் சொந்தமான இடம் பறிபோனதால், அரசுக்குச் சொந்தமான ஏதாவது ஓரிடத்தில் புத்தக கடை கட்டுவதற்கு புதிதாக இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்று சேலம் மாவட்ட கலெக்டர் ராமனிடம், அந்நிறுவனம் தரப்பிலிருந்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, மாவட்ட மைய நூலகத்திற்குச் சொந்தமான காலி இடத்தில் 450 சதுர அடி பரப்பளவுள்ள நிலத்தை, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு கடை கட்டுவதற்கு ஒதுக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஜூலை 31ம் தேதி மாலை 4.30 மணியளவில், திடீரென்று சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மைய நூலகத்தின் பின்பக்கம் உள்ள காலி இடத்தை நேரில் பார்வையிட்டனர்.
அப்போது கலெக்டர் ராமனிடம்,
திடீர் ஆய்வு குறித்து நாம் கேட்டபோது,
”நூலகத்தை ஆய்வு செய்வதற்காக
வந்தேன். வேறு ஒன்றும்
இல்லை,” என்று மழுப்பலான
பதிலைச் சொல்லிவிட்டு
காரில் ஏறி புறப்பட்டார்.
உண்மையில், கலெக்டர் ஆய்வுக்கு
வந்ததாகச் சொல்லப்பட்ட
ஜூலை 31ம் தேதியும்
அதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு
இருந்தே நூலகத்திற்கு
புதிய புத்தகங்கள் கட்டுக்கட்டாக
வந்து இறங்கியதால்,
அந்த புத்தகங்கள் வாசகர்கள்
அமரும் இடத்திலேயே
வைக்கப்பட்டு இருந்தன.
இதனால் வாசகர்கள்
அமர்வதற்குக்கூட போதிய
இடவசதி இல்லாத நிலை
இருந்தது. அத்துடன்,
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும்
முடங்கியதால், பாதுகாக்கப்பட்ட
குடிநீர்கூட இல்லாத நிலை இருந்தது.
அப்படியான நிலையில்,
கலெக்டர் ராமன் நூலகத்தை
ஆய்வு செய்ய வந்ததாகச்
சொன்னதும், வெளியே நின்று
பெயர் பலகையை மட்டும்
பார்த்துவிட்டுச் சென்றதையும்
என்ன மாதிரியான ஆய்வு
முறையோ? என்று வாசகர்கள்
பலரும் கிண்டலாக பேசினர்.
![](https://i0.wp.com/puthiyaagarathi.com/wp-content/uploads/2019/08/library-inside.jpg?resize=510%2C382)
ஆனால், சில நாள்கள் கழித்த பின்னர்தான், கலெக்டர் ராமன் வந்து சென்றது, தனியார் நிறுவனமான நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்காக, நூலகத்திற்குச் சொந்தமான இடத்தை தாரை வார்க்கும் வேலைக்காக வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு ஒதுக்கப்படுவதாகச் சொல்லப்படும் இடத்தில் விரைவில், குழந்தைகளுக்கான சிறப்பு நூலகம் கட்ட நூலகத்துறை திட்டமிட்டுள்ளது. இதுபற்றி சட்டப்பேரவையிலும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கலெக்டரிடம் நூலகத்துறை தரப்பில் எடுத்துச் சொன்ன பிறகும், அவர் தரப்பில் நூலகத்துறைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுவதால் கலெக்டருக்கும் நூலகத்துறைக்கும் இடையே பனிப்போர் வெடித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள், தமிழக முதல்வரை நேரில் அணுகி இது தொடர்பாக பேசியதாகவும், அதனால் முதல்வரின் அரசுத்தரப்பு நேர்முக உதவியாளர் விஜயகுமாரே, ஆட்சியருக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், அதனால்தான் அவர் நூலகத்திற்குச் சொந்தமான இடத்தை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்துக்கு ஒதுக்க முடிவெடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
கலெக்டரின் ஒருதலைப்பட்சமான முடிவு, நூலகத்துறையினரிடம் மட்டுமின்றி வாசகர்களிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக நூலகத்தின்
மூத்த வாசகரும், தமிழ்
ஆர்வலருமான சொல்லரசர்
கூறுகையில், ”சேலம்
மாவட்ட மைய நூலகம்
பழமையான நூலகம். சேலம்
ஒருங்கிணைந்த மாவட்டமாக
இருந்தபோது இருந்தே செயல்பட்டு
வந்தாலும், எம்ஜிஆர் முதல்வராக
இருந்தபோதுதான் இந்த நூலகம்
விரிவாக்கம் செய்யப்பட்டது.
இளைஞர்களிடம் வாசிப்பு பழக்கத்தை
ஊக்குவிக்க வேண்டும்
என்பதற்காகவே அவர் இந்த
நூலகத்தை விரிவாக்கம் செய்ததாக
பலரும் சொல்ல கேட்டிருக்கிறேன்.
அரசு இடத்தை அந்நியருக்கு
ஒருபோதும் விட்டுத்தரக்கூடாது.
![](https://i1.wp.com/puthiyaagarathi.com/wp-content/uploads/2019/08/sollarasar.jpg?resize=325%2C408)
இப்போது நியூ செஞ்சுரி புத்தக
நிறுவனத்திற்கு இந்த இடத்தை
விட்டுக்கொடுத்தால்,
பிறகு இன்னொரு கம்யூனிஸ்ட்
கட்சிக்காரர்களும் இதே இடத்தில்
ஏதாவது கடை நடத்த அனுமதி
கேட்பார்கள். அதன்பின்
ஆளுங்கட்சியினரும் உள்ளே
நுழைவார்கள்.
பெரிய அறிவுஜீவிகளையும்,
படைப்பாளர்களையும்,
போட்டித்தேர்வுகள் மூலம்
அதிகாரிகளையும் உருவாக்கும்
வகையில் இந்த நூலகத்தை
சென்னையில் உள்ள கன்னிமாரா
நூலகம் போல் விரிவாக்கம்
செய்ய வேண்டும்.
தனியாருக்கு இடம் கொடுப்பதை
கைவிட வேண்டும்.
வாசகர்களுக்கு குளிர்சாதன வசதி,
வாசிப்பை பகிர்ந்து கொள்ள
கூட்ட அரங்கு வசதிகள்
செய்ய வேண்டும்,” என்றார்.
இது தொடர்பாக, நூலகத்துறை இயக்கக உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.
”சேலம் மாவட்ட மைய நூலகம்,
1953ம் ஆண்டிலிருந்து இயங்கி
வருகிறது. சேலம், தர்மபுரி,
நாமக்கல் ஆகிய மாவட்டங்கள்
ஒன்றாக இருந்தபோது இதுதான்
ஒரே மைய நூலகம்.
1981ம் ஆண்டு சேலம்
மாவட்டத்திற்கென தனி மைய
நூலகமாக விரிவாக்கம்
செய்யப்பட்டது. ஆண்கள், பெண்கள்,
சிறுவர்கள் என வாசகர்களுக்கு
தனித்தனி வாசிப்புப்பகுதி
ஏற்படுத்தும் திட்டம் இருக்கிறது.
அப்படிச் செய்தால், இப்போது
இருக்கும் இடமே எங்களுக்கு
போதாது. விரைவில்,
50 லட்சம் ரூபாயில்
சிறுவர்களுக்கான நூலகம்
கட்டுவதற்கான பணிகளை
துவங்க இருக்கிறோம்.
அந்த நூலகத்துடன் சிறுவர்
விளையாட்டு பூங்காவும்
உருவாக்கப்பட உள்ளது.
சிறுவர் நூலகம் கட்டுவதற்கான இடத்தைதான் இப்போது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு ஒதுக்க கலெக்டர் ராமன் திட்டமிட்டுள்ளார். சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 450 சதுர அடி நிலம் அந்த புத்தக நிறுவனத்திற்கு இலவசமாக கொடுக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. அரசுக்குச் சொந்தமான இடத்தில் தனியாரை அனுமதித்தால் இதுவே எதிர்காலத்தில் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் அபாயமும் இருக்கிறது. திமுக, அதிமுக, ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் சிறுபான்மை கட்சியினர் என எல்லோருமே பதிப்பகங்கள் வைத்துள்ளனர். அவர்களும் தங்களின் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி இதுபோல் இடம் கேட்டால் நாங்கள் எங்கே போவது?
மேலும், பலரும் எல்லா மாவட்டங்களிலும் நூலக இடங்களை ஆக்கிரமிக்கும் அபாயமும் உள்ளது. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் உள்ளிட்ட எந்த ஒரு தனியாருக்கும் இடம் கொடுக்க சம்மதம் இல்லை என்று சேலம் மாவட்ட கலெக்டரிடம் சொல்லி விட்டோம். இதற்குமேல் அவர்தான் இப்பிரச்னையில் முடிவெடுக்க வேண்டும்,” என்றார் அந்த அதிகாரி.
– பேனாக்காரன்