Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மூன்றாவது டுவென்டி-20 ரத்து; இந்தியா – ஆஸி. ஏமாற்றம்!

ஹைதராபாத்தில் இன்று (அக்டோபர் 13, 2017) நடக்க இருந்த மூன்றாவது மற்றும் இறுதி டுவென்டி-20 கிரிக்கெட் போட்டி, மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, ஏற்கனவே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இழந்திருந்தது. அடுத்து, மூன்று 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றது. முதல் இரண்டு டுவென்டி-20 போட்டியில் இந்தியாவும், ஆஸி அணியும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் உள்ளன.

மூன்றாவது மற்றும் இறுதி டுவென்டி-20 போட்டி இன்று ஹைதராபாத்தில் நடக்க இருந்தது. அங்கு கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இன்று மழை இல்லை. எனினும், மைதானம் ஈரப்பதத்துடன் இருந்தது. இரவு 7 மணிக்கும், பிறகு 7.45 மணிக்கும் மைதான ஈரப்பதம் சோதிக்கப்பட்டது. ஆடுகளம் போட்டி நடத்துவதற்கு உகந்ததாக இல்லை என அறிக்கை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ‘டாஸ்’ கூட போடாமலேயே இந்தப் போட்டி ரத்து செய்யப்படுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர்.

இரு அணிகளும் ஏமாற்றம்:

ஏற்கனவே ஒரு நாள் தொடரை இழந்துவிட்ட ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, டுவென்டி-20 போட்டியிலாவது வெற்றி பெற்று, ஒரு கோப்பையுடன் நாடு திரும்ப வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தனர்.

அதேநேரம், இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் கடந்த 70 ஆண்டுகளில் முதன்முதலாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ச்சியாக நான்கு தொடர்களை விராட் கோஹ்லி தலைமையிலான அணி கைப்பற்றி சாதனை படைக்கவும் காத்திருந்தது. மைதான ஈரப்பதன் காரணமாக இரு அணிகளின் எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தில் முடிந்தது.