Sunday, April 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் சிறுமியை சின்னாபின்னமாக்கி கொன்ற ஐவர் கும்பல்! இரட்டை ஆயுள் தண்டனை விதித்த மகளிர் நீதிமன்றம்!!

சேலம் சிறுமியை ஐந்து பேர்
கொண்ட கும்பல் துடிக்க துடிக்க
கூட்டு வன்புணர்வு செய்து, கொலை
செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு
இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி
மகளிர் நீதிமன்றம், வியாழனன்று
(மார்ச் 21, 2019) பரபரப்பு தீர்ப்பு
வழங்கியுள்ளது.

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சென்றாயன்பாளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். தறித்தொழிலாளி. இவருடைய மகள் பூங்கொடி (10). அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த, 14.2.2014ம் தேதி இரவு, சிறுமி பூங்கொடி தனது பெற்றோர், சகோதரிகளுடன் வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். மறுநாள் காலையில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை.

பரமசிவமும் அவருடைய மனைவியும்
பல இடங்களிலும் தேடிப்பார்த்தனர்.
சென்றாயன்பாளையம் பெருமாள் மலைக்கரடு
பகுதியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில்,
சிறுமி தூக்கில் சடலமாக தொங்கிக்
கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுமியின் மர்ம உறுப்பிலிருந்து இரு கால்களின்
பாதம் வரையிலும் குருதி வழிந்து,
தோய்ந்து கிடந்தது. முகத்தில்
ரத்தக் காயங்கள் இருந்தன.
அந்தக் காயத்தின் மீது முகத்திற்கு
போடப்படும் பவுடர் வைத்து
அடைக்கப்பட்டு இருந்தது.

 

காமுகர்கள் சிறுமி என்றும் பாராமல்
அவளை சின்னாபின்னமாக்கி கொடூரமாக
கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
நெஞ்சை பதற வைத்த இந்த சம்பவம்,
அப்போது தமிழகம் முழுவதும் உலுக்கி எடுத்தது.
இதுகுறித்து வாழப்பாடி காவல்துறையினர்
வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை
மேற்கொண்டனர். அப்போதைய
டிஎஸ்பி மாதவன், நேரடியாக
இந்த வழக்கை புலனாய்வு செய்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பூங்கொடியின்
வீடு அருகே வசிக்கும் பூபதி (36), அதே
பகுதியைச் சேர்ந்த ஸ்னேக்பாபு
என்கிற ஆனந்த்பாபு (34), ஆனந்தன் (26),
பிரபாகரன் (31), பாலு என்கிற பாலகிருஷ்ணன் (33)
ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர்
கைது செய்தனர். இவர்கள் ஏற்கனவே
குடிபோதையில் அப்பகுதி பெண்கள்
சிலரிடம் பாலியல் தொல்லை
கொடுத்து வந்ததால், அவர்கள் மீது
பலத்த சந்தேகம் காவல்துறைக்கு இருந்தது.

 

கைது செய்யப்பட்ட ஐந்து பேர்களில் பூபதி,
பா.ம.க.வை சேர்ந்தவர். அப்போது
சென்றாயன்பாளையம் ஊராட்சி மன்ற
உறுப்பினராகவும் இருந்தார். கைது
நடவடிக்கைக்குப் பிறகு அவரை,
பாமக தலைமை கட்சியில் இருந்து
அதிரடியாக நீக்கியது. சிறுமி கொல்லப்பட்ட
சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளுக்கு
அதிகபட்ச தண்டனை வழங்கிடக் கோரியும்
பல்வேறு அமைப்புகள் கண்டன
ஆர்ப்பாட்டங்களை நடத்தின.

 

சம்பவத்தன்று இரவு குடிபோதையில்
இருந்த இவர்கள் ஐந்து பேரும், பரமசிவத்தின்
வீட்டுக்குள் புகுந்து சிறுமியை கடத்திச்சென்றுள்ளனர்.
அப்போது பூங்கொடி கத்தி கூச்சல் போட்டுவிடுவாளோ
எனக்கருதிய அந்த மிருகங்கள், அவளின்
வாயில் துணியை அடைத்து, அருகில் உள்ள
மலைக்கரடு பகுதிக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.

குற்றவாளிகள் கைது செய்யப்பட்டபோது எடுத்த படம். நடுவில், முதல் குற்றவாளி பூபதி.

வறுமையில் உழன்று கொண்டிருந்த பரமசிவம்,
பழுதடைந்திருந்த வாசல் கதவைக்கூட
சரி செய்ய முடியாத நிலையில், அதை
தனியாக கழற்றி வைத்திருந்தார். அதனால்,
வீட்டு வாசலை சாதாரண சேலையால்
திரையிட்டு மூடியிருந்தார். அதனால்தான்
காமுகர்கள் வந்து வீட்டுக்குள்
நுழைந்தபோதும் அவர்களின் சந்தடி
ஓசைகூட தூக்கத்தில் இருந்தவர்ளால்
உணர முடியாமல் போனது.

 

சென்றாயன்பாளையம் பெருமாள் கோயில்
மலைக்கரடு பகுதிக்குச் சிறுமியை கடத்திச்சென்ற
அந்த கும்பல், துடிக்க துடிக்க கூட்டு பாலியல்
வன்புணர்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அப்போது
சிறுமியின் முகத்தில் நகக்கீறல்களால்
ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் சொட்டியதால்,
அவற்றில் முகத்திற்குப் பூசும் பவுடரைக்
கொண்டு அடைத்துள்ளனர்.

 

காமக் கொடூரன்களிடம் சிக்கி சீரழிந்த சிறுமி, அவர்களிடம் இருந்து மீள முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தாள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், அங்கிருந்த ஒரு வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கவிட்டு தப்பிச்சென்று விட்டனர். மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. இத்தனைக்கும் மாயமான சிறுமியை அவளது பெற்றோர் தேடும்போது பக்கத்து வீட்டுக்காரன் என்ற முறையில் பூபதியும் அவர்களுடன் சேர்ந்து தேடுவதுபோல் நாடகமாடி இருக்கிறான்.

 

இந்த வழக்கின் விசாரணை, சேலம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத்தரப்பில் ஆரம்பத்தில் இந்த வழக்கை விசாரித்து வந்த இரண்டு வழக்கறிஞர்கள் பாதியிலேயே மாற்றப்பட்டனர். மூன்றாவதாக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனசேகரன், இறுதி வரை திறம்பட வாதாடினார்.

 

நீதிபதி விஜயகுமாரி முன்னிலையில் இருதரப்பு வாதங்களும் நடந்து முடிந்த நிலையில், கடந்த 19ம் தேதி, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி தீர்ப்பு அளித்தார். தண்டனை விவரங்கள் மார்ச் 21ம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறினார்.

 

அதன்படி, குற்றவாளிகளுக்கு என்னென்ன பிரிவுகளின் கீழ் எவ்வளவு காலம் தண்டனை என்பது குறித்து நீதிபதி விஜயகுமாரி, வியாழனன்று தீர்ப்பில் கூறினார். குற்றவாளிகள் ஐந்து பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

 

அதாவது, சிறுமியை கொலை செய்த குற்றத்திற்காக (இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302) ஓர் ஆயுள் தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. பாலியல் குற்றங்களில் இருந்து சிறுமிகளை பாதுகாக்கும் சிறப்பு சட்டமான ‘போக்சோ’ சட்டப்படி குற்றவாளிகளுக்கு மற்றோர் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

 

இவை மட்டுமின்றி, கூட்டுச்சதி (பிரிவு 120 பி), வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல் (பிரிவு 450), வன்புணர்வு (பிரிவு 366) ஆகிய குற்றங்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 5000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

 

மேலும், தந்தையிடம் இருந்து குழந்தையை கடத்தல் (பிரிவு 363), தடயங்களை அழித்தல் (பிரிவு 201) ஆகிய குற்றங்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதமும், இறந்தவரின் உடைமையை கடத்தல் (பிரிவு 404) குற்றத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

 

காமவெறி பிடித்த மிருகங்களுக்கு மொத்தம் இரண்டு ஆயுள் தண்டனையும், 47 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகை செலுத்தாதபட்சத்தில் அவற்றுக்கு மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதும் தீர்ப்பின் மற்றோர் அம்சம்.

 

இந்த கொடுமை யாருக்கும் நேரக்கூடாது! தந்தை கதறல்!!

 

இத்தீர்ப்பு குறித்து, சிறுமி பூங்கொடியின் தந்தை பரமசிவத்திடம் கேட்டபோது, ”மகளைக் கொன்றவர்களுக்கு தண்டனை கிடைத்தாலும், என் மகள் எங்களை விட்டுப்போனது போனதுதான். இனி, அவள் திரும்பி வரப்போவதில்லை. நான் சாகும் வரைக்கும் என் மகளின் நினைவுகள் என்னை விட்டு அகலாது. உப்பைத்தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். அவர்கள் செய்த பாவம் அவர்களை சும்மா விடாது. ஒரு உயிரின் வலியை நான் உணர்ந்திருக்கிறேன். எனக்கு ஏற்பட்ட இந்த கொடுமை வேறு யாருக்குமே ஏற்படக்கூடாது,” என்று கண்ணீர் சிந்தினார்.

 

தண்டனை விவரங்களை கேட்டதும், நீதிமன்றத்தில் கூடியிருந்த குற்றவாளிகளின் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். கூச்சல் போட்டனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சலசலப்பு ஏற்பட்டது. குற்றவாளிகள் அனைவரும் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

தீர்ப்பால் அதிருப்தி!

 

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ”பத்து வயது சிறுமியை கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்கில் ஆயுள் தண்டனை மட்டுமே கொடுத்திருப்பதில் முழு திருப்தி இல்லை. தூக்கு தண்டனைதான் கொடுத்திருக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான குற்றங்கள் குறையும்,” என்றனர்.

 

– பேனாக்காரன்