Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எட்டு வழிச்சாலை திட்டத்தில் திருட்டுத்தனம்!; நீதிமன்ற உத்தரவை மதிக்காத நெடுஞ்சாலைத்துறை!! #EightLaneRoad

எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக எந்தவித பூர்வாங்க பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், திருட்டுத்தனமாக ஜருகுமலையில் மண் பரிசோதனை பணிகளில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளது விவசாயிகளிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

பாரத்மாலா பரியோஜனா

 

சேலம் முதல் சென்னை வரை புதிதாக பாரத்மாலா பரியோஜனா என்ற திட்டத்தின்கீழ், எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை அமைக்கும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. மொத்தம் 277.3 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைய உள்ள இந்த சாலைப்பணிகளுக்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

 

சேலம் மாவட்டம் அரியானூரில் தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் இந்த சாலை முடிகிறது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் 2343 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை பெருமளவு மத்திய, மாநில அரசுகள் முடித்துள்ளன.

 

விளை நிலங்கள்

 

இந்த திட்டத்தை முன்னெடுக்க மத்திய, மாநில அரசுகள் சொல்லும் இரண்டு காரணங்களில் ஒன்று, சேலம் – சென்னை பயண நேரம் இரண்டரை மணி நேரமாக குறைகிறது; மற்றொரு காரணம், ஆண்டுக்கு ரூ.700 கோடி பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் மிச்சமாகிறது என்பதாகும்.

 

திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலப்பரப்பில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டவை ஏழை சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள் ஆகும். அவர்கள் பிறரிடம் கையேந்தாமல் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு இருக்கும் ஒரே ஆதாரம் இந்த விளை நிலம் மட்டுமே.

 

ஆனாலும், அவர்களை காவல்துறையினர் மூலம் அடக்கி, ஒடுக்கி நிலத்தை கையகப்படுத்தி, முட்டுக்கல் நடும் பணிகளை நிறைவு செய்திருக்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு.

 

கடும் எதிர்ப்புகள்

 

சேலம் மாவட்டம் ஏற்காடு, திருவண்ணாமலையில் கவுத்திமலை, வேடியப்பன்மலை ஆகிய மலைகளை குடைந்தும் சுரங்கவழிப்பாதை அமைக்கப்படுவதும் திட்டத்தின் முக்கிய அம்சம். இதனால் ஆரம்பத்தில் இருந்தே விவசாயிகள், நிலமற்ற விவசாய கூலித்தொழிலாளர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் இருந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சொந்த மாவட்ட மக்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

விளை நிலம் பறிபோவது மட்டுமே எதிர்ப்புக்கு காரணம் அன்று. சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சமலை, ஜருகுமலை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் கவுத்திமலை, வேடியப்பன் மலைகளில் பொதிந்து கிடக்கும் இரும்பு உள்ளிட்ட தாது வளங்களை தனியார் கார்ப்பரேட் முதலாளிகள் சுரண்டிச்செல்வதற்காக இந்த புதிய வழித்தடம் அமைக்கப்படுகிறது என்ற பலத்த அய்யமும் பொதுவெளியில் நிலவுகிறது.

இந்த நிலையில்தான், இதற்கிடையே பாமக எம்.பி., அன்புமணி ராமதாஸ், தர்மபுரி விவசாயி கிருஷ்ணமூர்த்தி, ‘பூவுலகின் நண்பர்கள்’ சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர்.

 

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த செப். 14ம் தேதி, மேலும் இரு வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதுவரை இத்திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தல், உட்பிரிவு செய்தல் உள்ளிட்ட எந்த ஒரு பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்பதும் அந்த உத்தரவின் முக்கிய அம்சம் ஆகும்.

 

நேற்று முன்தினம் (செப். 20, 2018) இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்காவிட்டால் சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யவும் வாய்ப்பு இருப்பதாக பூடகமான கருத்தை பதிவு செய்தனர்.

 

மண் பரிசோதனை

 

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, கடந்த இரு நாள்களாக சேலம் எருமாபாளையம், சன்னியாசிகுண்டு அருகே உள்ள ஜருகுமலையில் எட்டு வழிச்சாலைக்காக மண் பரிசோதனை செய்யும் பணிகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மிக ரகசியமாக ஈடுபட்டு வருகின்றனர். 200 அடி ஆழம் வரை துளையிட்டு பரிசோதனை செய்துள்ளனர்.

 

இந்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போதே ஜருகுமலையில் சில இடங்களில் பாறைகள் உருண்டு ஓடியதால் மலையடிவாரம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் கடும் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.

 

மண் பரிசோதனை பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எருமாபாளையம், பாரப்பட்டி, நிலவாரப்பட்டி, மின்னாம்பள்ளி பகுதி விவசாயிகள், பொதுமக்கள் நேற்று காலை (செப்டம்பர் 21, 2018) திரண்டு சென்று மண் பரிசோதனையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

மோகனசுந்தரம், மலர்க்கொடி, கந்தசாமி

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் மண் பரிசோதனை பணிகளை நிறுத்தி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த எருமாபாளையம் போலீசார், பொதுமக்களை சமாதானம் செய்தனர். பின்னர் போலீசார் பாதுகாப்புடன் மண் பரிசோதனை பணிகள் தொடர்ந்து நடந்தது.

 

இதுகுறித்து பாரப்பட்டியைச் சேர்ந்த விவசாயி மோகனசுந்தரம் கூறுகையில், ”சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 14ம் தேதி பிறப்பித்த உத்தரவில், மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் இரண்டு வார காலத்திற்கு எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பான பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சொல்லி இருந்தது. அதையும் மீறி அதிகாரிகள் சாலைப் பணிக்காக மண் பரிசோதனையில் ரகசியமாக ஈடுபடுகின்றனர். இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் ஆகும்.

 

எட்டு வழிச்சாலையால் பயண நேரம் குறையும் மற்றும் 700 கோடி ரூபாய்க்கு எரிபொருள் மிச்சமாகும் என்று முதல்வர் சொல்கிறார். ஆனால், இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் சுமார் 8000 ஏக்கர் விவசாய நிலங்களில் இருந்து பல ஆயிரம் கோடி மதிப்புள்ள உணவு தானியங்கள் உற்பத்தி இழப்பு ஏற்படும் என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை.

 

எட்டு வழிச்சாலை விளை நிலத்தையும் விவசாயிகளை மட்டும் பாதிக்கவில்லை. ஊரையும், மக்களையும் பிளவு படுத்தும். எட்டு வழிச்சாலையில் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்குச் செல்ல பல கிலோமீட்டர் தூரம் கடந்துதான் மறு சாலைக்கு வர முடியும் எனும்போது எரிபொருள் செலவு விரயம் ஆகுமே தவிர மீதமாகாது,” என்றார்.

 

மின்னாம்பள்ளியைச் சேர்ந்த விவசாயி மலர்க்கொடி கூறுகையில், ”மலையைக் குடைந்து சாலைகள் அமைப்பதால் வனவளம் குறையும். மழைவளம் குறையும். இந்த திட்டத்தால் ஜருகுமலையில் ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படும் சூழல் உள்ளது. மண் பரிசோதனை செய்ததற்கு பாறைகள் உருண்டு விழுகின்றன. மலையை குடைவதால் நிலநடுக்கம்கூட ஏற்படும் அபாயம் உள்ளது,” என்றார்.

 

எல்லாம் பறிபோகிறது…

 

பாரப்பட்டியைச் சேந்த விவசாயி கந்தசாமி கூறுகையில், ”எனக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் விவசாய நிலம் இருக்கு. அதில் இரண்டு ஏக்கர் நிலம் இந்த சாலையால் பறிபோகிறது. என் நிலத்தை நம்பி முப்பது லட்சம் ரூபாய் செலவழித்து புதிதாக கிணறு வெட்டினேன். அந்த கிணறும் பறிபோகிறது. மாடுகள், மாட்டுக்கொட்டகை, குடியிருக்கும் வீடு என எங்கள் வாழ்வாதாரமே பறிபோகிறது.

 

எஞ்சியுள்ள ஒரு ஏக்கர் நிலமும் எட்டு வழிச்சாலையால் இரண்டு துண்டுகளாக பிளவு படுகின்றது. எங்கள் நிலத்திற்குள் செல்வதற்காக நாங்கள் எட்டு வழிச்சாலைய பல கிலோமீட்டர் தூரம் கடந்துதான் போக வேண்டும். எங்க அப்பாவுக்கு இப்போது 110 வயசு ஆகுது. அவர் இறந்து போனால் சுடுகாட்டுக்குக் கொண்டு செல்லவும் பல கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சாதாரண மக்களுக்கு பயன்படாத இந்த திட்டம் தேவையில்லை,” என்றார்.

 

– பேனாக்காரன்