Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஸ்ரீதேவியின் உடல் தகனம்; திரையுலகினர் அஞ்சலி

இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டாரான நடிகை ஸ்ரீதேவியின் உடல் முழு அரசு மரியாதையுடன் மும்பையில் இன்று (பிப்ரவரி 28, 2018) தகனம் செய்யப்பட்டது. ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரும் திரண்டு வந்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியில் பிறந்தவர் ஸ்ரீதேவி (55). 4 வயதில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்களான கமல், ரஜினி ஆகியோருடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்தார்.

பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடிக்கச் சென்றவர் அங்கும் தவிர்க்க முடியாத நடிகையாக உயர்ந்தார்.

அதன் பிறகு பாலிவுட் திரையுலகில் நுழைந்தவர் இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

அவர் தனது உறவினர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தார். கடந்த 24ம் தேதி அவர் குளியலறை தொட்டியில் விழுந்து இறந்தார். அப்போது அவர் மது போதையில் இருந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவருடைய உடல், நேற்று இரவு தனி விமானத்தில் மும்பைக்குக் கொண்டு வரப்பட்டது. மும்பையில் உள்ள செலிபிரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் மக்களின் அஞ்சலிக்காக இன்று காலை 9.30 மணி முதல் ஸ்ரீதேவியின் உடல் வைக்கப்பட்டது.

அவருடைய உடல் கெட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காக துபாயிலேயே எம்பாமிங் செய்யப்பட்டுக் கொண்டு வரப்பட்டது.

தென்னிந்திய மொழிகளின் பிரபல நடிகர்கள் முதல் ஹிந்தி திரையுலகைச் சேர்ந்த அனைத்து முன்னணி நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், பொதுமக்களும் திரண்டு வந்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மஹாராஷ்டிரா மாநில அரசு சார்பில், ஸ்ரீதேவிக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டது. பத்மஸ்ரீ விருது பெற்ற நடிகை என்பதால் இவ்வாறு அரசு மரியாதை செலுத்தப்பட்டதாகச் சொல்லப்பட்டது.

திறந்த வாகனத்தில் அவருடைய உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இன்று மாலை 5.22 மணிக்கு ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.