Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் பெரியார் பல்கலை பேராசிரியர் திடீர் பணியிடைநீக்கம்! 8 நாளில் ஓய்வு பெற இருந்தார்!!

சேலம் பெரியார் பல்கலை
டீன் கிருஷ்ணகுமார்,
இன்னும் 8 நாளில் ஓய்வு பெற
இருந்த நிலையில், ஊழல்
புகாரின்பேரில் திடீரென்று
பணியிடைநீக்கம்
செய்யப்பட்டார்.

சேலம் பெரியார் பல்கலையில்
இயற்பியல் துறைத்தலைவராகவும்,
பல்கலை டீன் ஆகவும்
பணியாற்றி வந்தவர் கிருஷ்ணகுமார்.
இவர், கடந்த 2010ம் ஆண்டு
சிறிது காலம் பெரியார் பல்கலை
துணைவேந்தராகவும் பொறுப்பு
வகித்தார். அதன்பிறகு,
புதிய துணைவேந்தராக
முத்துச்செழியன் நியமிக்கப்பட்டார்.
பேராசிரியர் கிருஷ்ணகுமார்,
துணைவேந்தர் பொறுப்பில்
இருந்தபோது, பல்கலை விருந்தினர்
மாளிகையை புதுப்பிப்பதற்காக
குளிர்சாதன உபகரணங்கள்,
அறைகலன்கள் கொள்முதல்
செய்ததில் பல லட்சம் ரூபாய்
முறைகேடு செய்ததாக அவர்
மீது புகார்கள் எழுந்தன.

 

மேலும்,
எழுதுபொருள்கள் கொள்முதல்
செய்ததிலும் இல்லாத
நிறுவனங்களின் பெயரில்
போலியாக ரசீதுகளை
தயாரித்து மோசடியில்
ஈடுபட்டதாகவும் புகார்
கூறப்பட்டது.

 

இதுகுறித்து சேலம் லஞ்ச
ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர்
அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, கடந்த 2013ம் ஆண்டு
செப். 6ம் தேதி, கிருஷ்ணகுமார்
திடீரென்று பணியிடை நீக்கம்
செய்யப்பட்டார். அப்போது
துணைவேந்தராக இருந்த
முத்துச்செழியன், தனது பணிக்காலம்
முடிந்து செல்வதற்கு ஒருநாள்
இருக்கையில், கிருஷ்ணகுமாரை
பணியிடைநீக்கம் செய்திருந்தார்.

 

அடுத்த ஒரு வாரத்திற்குள்ளாகவே,
அவர் மீதான நடவடிக்கை ரத்து
செய்யப்பட்டு, மீண்டும் வழக்கம்போல்
தனது துறையில் பணிகளைத் தொடர்ந்தார்,
கிருஷ்ணகுமார். லஞ்ச ஒழிப்புப்பிரிவு
காவல்துறையினர் தன்னை கைது
செய்து விடாமல் இருக்க
முன் ஜாமினும் பெற்றார்.
கிருஷ்ணகுமார் மீது எப்ஐஆர்
பதிவு செய்யப்பட்டு 6 ஆண்டுகளுக்கு
மேலாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்யாமல் லஞ்ச ஒழிப்புத்துறையினர்
ஏனோ காலம் கடத்தி வந்தனர்.

கிருஷ்ணகுமார்

இந்நிலையில், பேராசிரியர் கிருஷ்ணகுமார் நடப்பு 2020 ஜூலை 31ம் தேதியுடன் ஓய்வு பெற இருந்தார். தன் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் இந்த வழக்கு நீர்த்துப்போய் விட்டதாகக் கருதிய அவர், தனது அனைத்து விதமான அரசியல் தொடர்புகள் மூலமும் ஓய்வு பெறுவதற்கான பணிகளைச் சத்தமில்லாமல் செய்து வந்தார். பல்கலையின் முக்கிய அதிகார மையங்களும் அவரை கவுரவமாக வழியனுப்பி வைப்பதற்கான வேலைகளைச் செய்து வந்தன.

 

நிலைமை இப்படி இருக்க, அவர் ஓய்வு பெறுவதற்கு இன்னும் எட்டு நாள்கள் இருக்கும் நிலையில், அவர் திடீரென்று வியாழக்கிழமை (ஜூலை 23) பணியிடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். துணைவேந்தர் குழந்தைவேலு அவரை பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகுமாருக்கு மீதான நடவடிக்கை உயர்கல்வித்துறை வட்டாரத்திலும் பெரும் பேசுபொருளாகி இருக்கிறது.

 

சில நாள்களுக்கு முன்பு கிருஷ்ணகுமாரிடம் பேசுகையில், ”கடந்த 2013ல் என்னை பணியிடைநீக்கம் செய்ததே உள்நோக்கம் கொண்டது மட்டுமின்றி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அப்போதைய துணைவேந்தர் முத்துச்செழியன் மீண்டும் துணைவேந்தராக வர முயற்சித்தார். அதற்கு நான் இ-டையூறாக இருந்தேன் என்று கருதி, அதற்கு பழிதீர்க்கும் நோக்கத்துடன் என்னை பணியிடைநீக்கம் செய்தார். அதற்கு அடுத்த சில நாள்களில் என் மீதான நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டது. முகாந்திரமற்ற ஒரு புகாரால் இப்போது நான் ஓய்வு பெறும் நிலையிலும் மன உளைச்சலை கொடுக்கிறார்கள்,” என்றார்.

 

”பிராமண சமூகத்தைச்
சேர்ந்தவரான கிருஷ்ணகுமார்
தீவிர இடதுசாரி சிந்தனையாளர்.
தனது துறையில் மட்டுமின்றி,
பல்கலை நிர்வாகப்பணிகளிலும்
திறமையானவராக இருந்தார்.
அதனால்தான் அவர் டீன் ஆகவும்
நியமிக்கப்பட்டார்.
எந்த துணைவேந்தர் வந்தாலும்
அவருடைய திறமையை
பயன்படுத்திக் கொள்ள
தயங்கியதில்லை. தமிழ்த்துறையில்
உள்ள ஒரு பேராசிரியர்,
அவருக்கு எதிரான சங்கத்தைச்
சேர்ந்தவர்.

 

ஆசிரியர் சங்க தேர்தலின் போதிருந்தே தமிழ்த்துறையில் உள்ள குறிப்பிட்ட அந்த பேராசிரியர், கிருஷ்ணகுமார் மீது மோதல் போக்கைத் தொடர்ந்து வருகிறார். அவரும், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் சிலரும் கிருஷ்ணகுமாரை எப்படியாவது ஓய்வு பெறுவதற்குள் பணியிடைநீக்கம் செய்ய வைத்துவிட வேண்டும் என முதல்வர், உயர்கல்வித்துறை செயலர், ஆளுநர் வரை பெட்டிஷன்களை தட்டி விட்டதாகவும்,” சொல்கிறார்கள் பேராசிரியர்கள் சிலர்.

 

இதுகுறித்து பெரியார் பல்கலை துணைவேந்தர் குழந்தைவேலிடம் கேட்டபோது, ”பேராசிரியர் கிருஷ்ணகுமார் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவில் மோசடி புகார் உள்ளிட்ட சில புகார்களின்பேரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் உள்ளது. இதுபோன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளபோது ஓய்வு பெற முடியாது. மேலும், கடைசி நாள் அல்லது அதற்கு முதல் நாளன்று பணியிடைநீக்கம் செய்வது என்பதும் சர்ச்சையை ஏற்படுத்தி விடும். அவருடைய பிறந்த நாள் ஜூலை 27ம் தேதி வருகிறது. அதன் அடிப்படையில், அதுவரை காத்திருக்காமல் சில நாள்கள் முன்னதாக அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசித்த பிறகே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் யாருடைய அழுத்தமும் இல்லை,” என்றார்.

 

– பேனாக்காரன்