Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் கல்லூரி மாணவர் கொலை! அதிமுக எம்எல்ஏவிடம் தஞ்சம் அடைந்த கூலிப்படை! கூடா நட்பு கேடாய் முடிந்த பின்னணி!!

சேலம் அருகே,
கல்லூரி மாணவர்
படுகொலை செய்யப்பட்ட
சம்பவத்திற்கு பழிதீர்க்கும்
விதமாக அடுத்தடுத்து
மேலும் சில
அசம்பாவிதங்கள்
நிகழக்கூடும் என்ற
தகவலால் ஒரு
கிராமமே திகிலடைந்து
கிடக்கிறது.

 

சேலம் சீலநாய்க்கன்பட்டி அருகே உள்ள நாழிக்கல்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி வசந்தி. கூலித்தொழிலாளிகளான இவர்களின் ஒரே மகன் திலீப்குமார் (19). நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் இறுதியாண்டு படித்து வந்தார். செப்., 5ம் தேதியன்று இரவு 7 மணியளவில் தன் நண்பர்களைச் சந்தித்துவிட்டு வருவதாக அம்மாவிடம் சொல்லிவிட்டு வீட்டில் இருந்து 20 அடி தூரம் நடந்து சென்ற அவரை வழிமறித்த ஒரு கும்பல் கொடூரமாக குத்திக் கொன்றிருக்கிறது.

கொலையுண்ட திலீப்குமார்

மகனை யாரோ சிலர் மிரட்டியபடியே, ‘அவன இங்கேயே போட்டுத்தள்ளுங்கடா…’ என்றுகூற, வீட்டில் இருந்து பதறியடித்தபடி சம்பவ இடத்திற்கு ஓடினார் வசந்தி. அதற்குள் மூன்று பேர் கொண்ட கும்பல் திலீப்குமாரை சூரிக்கத்தி மற்றும் கூரான இரும்பு கம்பியால் குத்திக் கிழித்திருந்தார்கள். ‘டேய் விட்டுடுங்கடா…மகராசனா இருப்பீங்கடா…உங்க பிரண்டுதானேடா…’ என கெஞ்சியவாறே அவர்களின் காலில் விழப்போன வசந்தியை, அவர்கள் வயிற்றிலேயே எட்டி உதைத்துத் தள்ளினர். இந்த தள்ளுமுள்ளுவில் அவருடைய வலது கையிலும் லேசான கத்திக்குத்து விழுந்துள்ளது.

 

மேலும் சிலர் அங்கே வரவும், தலைதெறிக்க அந்த கும்பல் தப்பி ஓடியுள்ளது.

 

திலீப்குமாரின் வலது
முழங்கால் மூட்டுக்கு
மேலே ஒரு கத்திக்குத்தும்,
மூட்டுக்குக் கீழே ஒரு
கத்திக்குத்தும் ஆழமாக
விழுந்ததில் சதை
கிழிந்து தொங்கியது.
ஆழமான வெட்டு விழுந்ததால்
அவரால் தப்பித்து
ஓடமுடியவில்லை.
மேலும், முதுகுப்பக்கம்
இரும்பு கம்பி ஆழமாக
பாய்ந்திருந்தது. அதனால்
ரத்த இழப்பும் அதிகமாக
இருந்துள்ளது. தலை, மார்பு,
உள்ளங்கைகள், மணிக்கட்டு
ஆகிய இடங்களிலும்
வெட்டுக்காயங்கள் இருந்தன.
திலீப்குமாரின் சடலம்,
சேலம் அரசு
மருத்துவமனையில்
உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
முதுகுப்பக்கம் குத்திய
இரும்பு கம்பி, அவருடைய
இருதயம் வரை பாய்ந்திருப்பது
தெரிய வந்தது. இன்னும்
இரண்டு அங்குலம்
ஆழமாக பாய்ந்து இருந்தாலும்
இருதயத்தை குத்திக்
கிழித்திருக்கும்
என்கிறார்கள் உடற்கூறாய்வு
செய்த மருத்துவர்கள்.

கொலையாளிகள் (இடமிருந்து) சூர்யா என்கிற சரவணன் – மற்றொரு சரவணன் (நடுவில்) – திருநாவுக்கரசு

நாழிக்கல்பட்டி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பச்சியப்பன் மகன் வைரம் என்கிற திருநாவுக்கரசு (23), அதே ஊரைச் சேர்ந்த ஆசாரி சேட்டு என்கிற பழனிசாமி மகன் சூர்யா என்கிற சரவணன் (17), குமார் மகன் சரவணன் (17) ஆகிய மூன்று பேரும்தான் திலீப்குமாரை கொடூரமாக குத்தி கொலை செய்ததாக ஊரே கைகாட்டுகிறது. மல்லூர் காவல் ஆய்வாளர் வேலுதேவன் தலைமையிலான தனிப்படை கொலையாளிகளை கைது செய்திருக்கிறது. மூவரும் செப். 7ம் தேதி மாலையில் சேலம் மாவட்ட 6வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டு, பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

இத்தனைக்கும் கொலையாளிகள், திலீப்குமாரின் குடும்பம் வரை நெருக்கமாக பழகி வந்தவர்கள். சூர்யா என்கிற சரவணன், திலீப்குமாரின் தங்கையுடன் ஒரே பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தவர். பின்னர் ஏதோ மனஸ்தாபத்தில் அவர்கள் பிரிந்துள்ளனர். முன்னாள் நண்பர்களே தனக்கு எமனாக வருவார்கள் என திலீப் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை.

வசந்தி, திலீப்பின் தாயார்

இது ஒருபுறம் இருக்க, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி திலீப்குமாரின் பெற்றோர் மற்றும் ஊர்க்காரர்கள், செப். 6ம் தேதியன்று, சேலம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலின்போது, கொலையாளிகளுக்கு ஆளுங்கட்சியினருடன் நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும், அவர்களை தப்பிக்க வைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் திலீப்பின் தாயார் கூறினார். இப்படியொரு குற்றச்சாட்டு கிளம்பிய பிறகே, அவசர அவசரமாக கொலையாளிகள் மூவரும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இருக்கிறார்கள்.

 

கொலை, உடற்கூறாய்வு, சாலை மறியல் என களேபரங்கள் நிகழ்ந்தாலும் கொலைக்கான காரணம் அதுவரை தெளிவாக யாருக்கும் தெரியவில்லை. இதையடுத்து நாம் நாழிக்கல்பட்டி கிராமத்திலும், காவல்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களிலும் நேரடியாக விசாரித்தோம்.

 

கொல்லப்பட்டவரும், கொலையாளிகளும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நாழிக்கல்பட்டியில், ‘இளையபாரதம் நண்பர்கள் குழு’ என்ற பெயரில் இயங்கி வந்துள்ளனர். திருநாவுக்கரசு, அதிமுகவைச் சேர்ந்த மனோன்மணி எம்எல்ஏ, மல்லூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் ஆகியோர் சொல்லும் வேலைகளை அந்த ஊரில் செய்து வந்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு கூலிப்படை தலைவன்போல செயல்பட்டு வந்துள்ளார்.

திலீப்குமாரின் குருதி துளிகள் தெறித்த சுவர்

நண்பர்கள் குழுவையும் கட்சி வேலைகளுக்குப் பயன்படுத்தி வந்துள்ளார் வைரம் என்கிற திருநாவுக்கரசு. நண்பர்கள் குழுவில் அரசியலை நுழைப்பதை கொஞ்சமும் ரசிக்காத திலீப்குமார், இது தொடர்பாக திருநாவுக்கரசுவிடம் நேரடியாகவே பலமுறை தன் அதிருப்தியைச் சொல்லி இருக்கிறார். இனியும் நாம் நண்பர்களாக இருக்க முடியாது என்று கூறிவிட்டே, திலீப்குமார் தன் நண்பர்கள் ஐம்பது பேருடன் ஓராண்டுக்குமுன் திமுகவில் ஐக்கியமாகி விட்டார் என்கிறார்கள் நாழிக்கல்பட்டி ஊர்க்காரர்கள்.

 

தனக்குப் பிடிக்காத திமுக கூடாரத்துடன் சேர்ந்ததோடு, பெற்றோர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக இருக்கும்போது திலீப்குமார் பெரும் படையுடன் திமுகவில் சேர்ந்தது திருநாவுக்கரசுவுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

 

இந்த சம்பவத்திற்குப் பிறகுதான் திருநாவுக்கரசுவும், திலீப்குமாரும் நேரெதிர் துருவங்களாகினர். எல்லோரும் நண்பர்களாக ஒரே குழுவில் இருந்ததுவரை விநாயகர் சதுர்த்தி விழாவை ஒன்று சேர்ந்து கொண்டாடி வந்திருக்கின்றனர். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது திலீப்குமார் தரப்பும், திருநாவுக்கரசு தரப்பும் ஒரே ஊருக்குள் தனித்தனியாக சிலைகளை நிறுவி, விழா கொண்டாடி இருக்கிறது.

 

சதுர்த்தியின் மூன்றாம் நாளான செப். 4ம் தேதியன்று, விநாயகர் சிலையை மேட்டூரில் கரைப்பதற்காக திருநாவுக்கரசுவும் நண்பர்களும் ஊர்வலமாக நடனமாடியபடியே சென்றுள்ளனர். அப்போது திலீப்குமார், திருநாவுக்கரசுவைப் பார்த்து கைகளால் ஏதோ சைகை காட்டியதாக சொல்கிறார்கள். தன்னை கொன்று விடுவதாக திலீப்குமார் சைகையால் காட்டியதாக புரிந்து கொண்ட திருநாவுக்கரசு, கூட்டாளிகளான சூர்யா என்கிற சரவணன், குமார் மகன் சரவணன் ஆகியோரை அழைத்துக்கொண்டு செப். 5ம் தேதி இரவு, திலீப்குமாரை வீடு அருகே வைத்து இரும்பு கம்பி, சூரிக்கத்திகளால் தாக்கி படுகொலை செய்துள்ளார்.

சரண்

திலீப்குமாரை காப்பாற்ற முயன்ற அவருடைய உறவினர் மகன் சரண் என்பவருக்கும் கை, நெற்றி, கால் பகுதிகளில் கத்திக்குத்து விழுந்தது. அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

 

”திலீப்குமாரை மூன்று பேர் ஆபாச வார்த்தைகளால் திட்டிக்கொண்டே, ‘அவனை போடுடா… போட்டுத்தள்ளுங்கடா…’ என்று சொன்னதைக் கேட்டு பக்கத்தில் இருந்த நானும் இங்கே ஓடிவந்தேன். அதற்குள் அவருடைய அம்மா வசந்தியும், எங்க உறவினர் பையன் சரணும் வந்துவிட்டனர். ஆனால் அதற்குள் அழகு என்பவரின் வீட்டு சுவரில் சாய்த்து வைத்து திலீப்பை சூரிக்கத்தியாலும், இரும்பு கம்பியாலும் சரமாரியாக குத்தி விட்டனர். தடுக்கச்சென்ற அவருடைய அம்மாவை வயிற்றிலேயே எட்டி எட்டி உதைத்தனர். திலீப்பின் முழங்காலிலும் வெட்டு விழுந்ததால் தத்தித்தத்தி அழகுவின் வீட்டுக்குள் புகுந்து கொண்டார்.

 

நானும் பின்தொடர்ந்து சென்றேன். திலீப்குமாரால் நிற்கக்கூட முடியாமல் சுருண்டு விழுந்தார். கதவை சாத்துமாறு சைகையால் சொன்னார். திலீப்குமாரை கத்தியால் குத்திய மூவரும் தப்பி ஓடிவிட்டனர். நாங்கள் ஆம்புலன்சை வரவைப்பதற்குள் திலீப்குமார் இந்த வீட்டிலேயே உயிரை விட்டுவிட்டார்,” என்கிறார் திலீப்குமாரின் வீடு அருகே வசிக்கும் கனிமொழி. இவர், இந்த சம்பவத்தை நேரில் பார்த்த முக்கிய சாட்சியங்களுள் ஒருவர்.

கனிமொழி, கொலையை நேரில் பார்த்தவர்.

ஒரு படுகொலை நிகழ்ந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக மேலும் அசம்பாவிதங்கள் நிகழக்கூடும் என்ற நிலையில் திலீப்பை பறிகொடுத்தவர்கள் தரப்பில் கொந்தளிப்பு நிலவும் சூழலிலும்கூட, நிகழ்விடத்தில் காவல்துறையினர் ஒருவர்கூட பாதுகாப்புக்கு நிறுத்தப்படவில்லை. நாழிக்கல்பட்டி பிரிவு சாலையோரம் ரோந்து வாகனத்தில் மட் டுமே இரு காவலர்கள் இருந்தனர். அங்கிருந்து முக்கால் கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சம்பவ இடம். இவர்கள் நிகழ்விடம் போய்ச்சேர்வதற்குள் அங்கே எது வேண்டுமானாலும் நிகழ்ந்து விடும் அபாயமும் இருக்கிறது என பதறுகிறார்கள் சிலர்.

 

நாம், திலீப்குமாரின் தாயார் வசந்தி, தந்தை ராஜேந்திரன் ஆகியோரைச் சந்தித்தோம்.

 

”என் பையன் யாருடைய வம்பு தும்புக்கும் போறதில்லீங்க. கொலை செஞ்ச மூணு பசங்களோடயும் திலீப்புக்கு என்ன பிரச்னைனு எங்களுக்கு தெரியல. இப்ப ஒரு வருஷத்துக்கு மேலாக அவங்ககூட என் பையன் எதுவும் வெச்சிக்கறதில்ல. காலேஜ் இல்லாத நாள்களில் என்கூட செங்க சூளைக்கு வேலைக்கு வந்திடுவான். திடீர்னு விசால கிழமையன்னிக்கு சாயங்காலம் திருநாவுக்கரசு, சூர்யா என்கிற சரவணன், இன்னொரு சரவணன் ஆகிய மூணு பேரும் எங்க வீட்டுக்கு திடுதிப்புனு வந்தானுங்க. அப்ப என் பையன் வீட்டுல இல்ல. ‘உன் பையன அடக்கி வெச்சிக்கு. இல்லேனா… போட்டுத்தள்ளிடுவோம்’னு மிரட்டிட்டு போய்ட்டானுங்க. அதற்குப் பிறகுதான் என் பையன் வீட்டுக்கு வந்தான்.

 

அந்த திருநாவுக்கரசு எப்ப பார்த்தாலும் கத்தி, கட்டைணு வெச்சிக்கிட்டே சுத்துவான். அதனால அவன்கூட எல்லாம் சேராதப்பானு என் பையன்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பேன். மறுபடியும் அவனுங்க மூணு பேரும் அன்னிக்கு ராத்திரி 7 மணிவாக்குல வந்தானுங்க. பிரண்டுங்கள பார்த்துட்டு வந்துடறேன்மானு சொல்லிட்டு என் பையன் வீட்டுல இருந்து கிளம்பினான். என் பையனை சில பேரு கெட்ட கெட்ட வார்த்தையால திட்டற சத்தம் கேட்டு அங்கே போனேன்.

 

அதற்குள் என் பையனை கத்தியால குத்தி கொன்னுட்டானுங்க. பிரண்டு பிரண்டுனு போனான். இப்ப பிரண்டுங்களே அவன கொன்னுப் போட்டுட்டானுங்க….ஒத்த புள்ளடா நீ… உனக்காகத்தான் நானும் அப்பாவும் தங்கச்சியும் உசுரோட இருக்கோம். நீதான் இந்த குடும்பத்த முன்னுக்குக் கொண்டு வரணும்னு சொல்லிக்கிட்டே இருப்போம். இப்ப அவனே இல்லேனு ஆகிப்போச்சு. அவனை கொன்ன மூணு பேரையும் தூக்குல போடணும். இல்லேனா நாங்க தீக்குளிச்சு செத்துப்போய்டுவோம். அந்த திருநாவுக்கரசுவுக்கு அதிமுக எம்எல்ஏ மனோன்மணிகிட்ட செல்வாக்கு இருக்குனுலாம் பேசிக்கிறாங்க. அதனால அவன் தப்பிச்சிடக் கூடாதுங்க,” என்று மார்பில் அடித்துக்கொண்டு கதறி அழுதார் திலீப்குமாரின் தாய் வசந்தி.

 

”திலீப்குமாருக்கு போலீஸ் ஆகணும்னு ரொம்பவே ஆசை. இதுபத்தி அவன் அவங்க அப்பா அம்மாகிட்டக்கூட சொன்னதில்ல. ஒருநாள், போலீஸ் யூனிபார்ம்ல வந்து இந்த ஊர் முன்னாடி நிக்கணும். அதுவரைக்கும் சஸ்பென்ஸாக வைத்திருக்கணும்னு சொல்லிக்கிட்டே இருப்பான். கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நடந்த போலீஸ் தேர்வைக்கூட எழுதிட்டுதான் வந்தான். அதற்குள் இப்படி ஆகிப்போச்சு,” என்கிறார்கள் அவருடைய நண்பர்கள்.

இது தொடர்பாக மல்லூர் காவல் ஆய்வாளர் வேலுதேவனிடம் கேட்டபோது, ”கொலை வழக்கில் எல்லாம் யாருடைய ரெக்கமண்டும் எடுபடாது. இப்படித்தான் யாராவது எதாவது சொல்லிக்கிட்டு இருப்பாங்க. அதையெல்லாம் நாம் பார்த்துட்டு இருக்க முடியுமா? எல்லாம் சட்டப்படிதான் நடந்து கொண்டிருக்கிறது. கொலையை நேரில் பார்த்த இரண்டு சாட்சியங்களும் இருக்கு. அதை எல்லாம் வைத்துதான் இந்த வழக்கில் திருநாவுக்கரசு உள்பட மூன்று பேரை கைது செய்திருக்கிறோம். திருநாவுக்கரசு தவிர மற்ற ரெண்டு பேரும் சிறார் குற்றவாளிகள். அதனால் அவர்கள் பெயர்களைக்கூட நான் சொல்லக்கூடாது,” என்று சட்டத்தை முரட்டுத்தனமாக பின்பற்றும் மனிதர்போல பேசினார்.

 

இதற்கிடையே,
மல்லூர் காவல் நிலையத்திற்கு
வெளியே கூடியிருந்த
திருநாவுக்கரசுவின் தந்தை
மற்றும் ஆண்டிப்பட்டி,
போடிநாயக்கன்பட்டி பகுதிகளில்
இருந்து வந்திருந்த அவருடைய
உறவினர்கள் நம்மிடம்,
”மூன்று பசங்களுமே
மனோன்மணி எம்எல்ஏ
வீட்டுக்குப் போனாங்க.
அவங்க சொன்னதால்தான்
மூன்று பேரும் காவல்
நிலையத்தில் சரணடைந்தார்கள்,”
என்றனர். மேலும்,
‘ஏன் சார்… கொலை
நடந்தப்ப கரண்ட்
இல்லைனும், ஊரே இருட்டா
இருந்ததுன்னும் சொல்றாங்க.
அப்புறம் எப்படி சார்
எங்க பசங்கதான்
குத்திக் கொன்னாங்கனு
சொல்றாங்க?,’
என்றனர்.

 

இன்னொரு தகவலும் கிடைத்தது.

 

சம்பவத்திற்குப் பிறகு
அதிமுக எம்எல்ஏ மனோன்மணியிடம்
தஞ்சம் அடைந்த கொலையாளிகள்
உதவி கேட்டுள்ளனர்.
அவரோ கொலை வழக்கில்
ஒன்றும் செய்ய முடியாது
என்று கைவிரித்துவிட்டாராம்.
பின்னர் அவர், மல்லூரைச்
சேர்ந்த அதிமுக நிர்வாகி
ஒருவரை பார்க்கச் சொல்லி
இருக்கிறார். அந்த பிரமுகர்
மூலமாகத்தான் மூவரும்
காவல்நிலையத்தில்
சரணடைய வைக்கப்பட்டார்கள்
என்கிறார்கள் விவரம்
அறிந்தவர்கள்.
ஆளுங்கட்சியினரின் அழுத்தம்
காரணமாகவே, கொலையாளிகள்
காவல்நிலைய கழிப்பறையில்
வழுக்கி விழாமல்,
மாவுக்கட்டு போடுவதில்
இருந்து தப்பித்து
இருக்கிறார்கள்.

மனோன்மணி எம்எல்ஏ

இதுகுறித்து மனோன்மணி எம்எல்ஏவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, ”இது தொடர்பாக பேச வேண்டும் என்றால் நேரில் வாருங்கள். நான் இப்போது பத்திரிகை வைத்துக்கொண்டு இருக்கிறேன்,” என்று சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தார்.

 

இந்த வழக்கின்
முதல் குற்றவாளியான
திருநாவுக்கரசு மீது ஏற்கனவே
வழிப்பறி, அடிதடி என ஐந்து
வழக்குகள் மல்லூர் காவல்
நிலையத்தில் பதிவாகி
இருக்கின்றன. கல்வியறிவு
இல்லாத அவரையும்,
இளம் சிறார்களையும்
ஆளும் வர்க்கத்தினர்
பகடையாக பயன்படுத்திக்
கொள்கின்றனர். ஆனால்,
திலீப்பின் கொலைக்கு
வஞ்சம் தீர்ப்போம் என
கனல் கக்கிக்
கொண்டிருக்கிறார்கள்
அவருடைய உறவினர்கள்.

 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையன்று (செப். 8) நாழிக்கல்பட்டியைச் சேர்ந்த நூறுக்கும் மேற்பட்டோர் மனோன்மணி எம்எல்ஏ வீட்டிற்குச் சென்று, கொலையாளிகளுக்கு நீங்கள் அடைக்கலம் கொடுத்ததாகச் சொல்கிறார்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், ‘கொலை வழக்கில் நான் எப்படி சப்போர்ட் செய்ய முடியும்? ஆளுங்கட்சி எம்எல்ஏவாக இருப்பதால் இப்படித்தான் யாராவது எதையாவது சொல்லிக்கொண்டு இருப்பார்கள்,’ என்று கூறியதாகவும் திலீப்குமாரின் உறவினர்கள் கூறினர்.

 

‘கூடா நட்பு கேடாய் முடியும்’
என்பதற்கு திலீப்குமாரின்
படுகொலையும் இந்த
சமூகத்திற்கு
மற்றுமொரு
சான்று.

 

– பேனாக்காரன்