Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ரவுடி கதிர்வேலை திட்டமிட்டு படுகொலை செய்த போலீஸ்! உண்மை கண்டறியும் குழு பாய்ச்சல்!!

சேலத்தில் ரவுடி கதிர்வேலை
திட்டமிட்டு படுகொலை செய்துவிட்டு,
என்கவுண்டர் செய்ததாக காவல்துறையினர்
நாடகம் ஆடுவதாக உண்மை
கண்டறியும் குழுவினர்
தெரிவித்துள்ளனர்.

சேலத்தை அடுத்த மேட்டுப்பட்டி தாதனூர் அருகே தேவாங்கர் காலனியைச் சேர்ந்த சேட்டு மகன் கதிர்வேல், கடந்த மே 2, 2019ம் தேதியன்று என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக மாவட்ட காவல்துறை தெரிவித்தது. ஒரு கொலை வழக்கில், காரிப்பட்டி காவல் ஆய்வாளர் சுப்ரமணியம், எஸ்.ஐ.க்கள் மாரி, பெரியசாமி ஆகியோர் அவரை பிடிக்க முயன்றபோது, கத்தியால் தாக்க முயன்றதாகவும், அதனால் அவரை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதாகவும் சொன்னது காவல்துறை.

 

 

கதிர்வேல் மீது ஏற்கனவே மூன்று கொலை, ஒன்பது வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது ஒருபுறம் இருக்க, அவர் தானாகவே காவல்துறையில் சரணடைந்த நிலையில், திட்டமிட்டு அவர் கொல்லப்பட்டதாகவும் மாறுபட்ட தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் மற்றும் வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், ஹரிபாபு, தமயந்தி ஆகியோர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவினர், என்கவுண்டர் நடந்ததாகக் கூறப்படும் இடம், கதிர்வேலின் உறவினர்கள் ஆகியோரிடம் இரு நாள்களாக விசாரணை நடத்தினர்.

 

இதுகுறித்து அ.மார்க்ஸ் மே 10ம் தேதி கூறியது:

 

முறுக்கு வியாபாரி கணேசன்
கொலை வழக்கில் ரவுடி கதிர்வேல்
முன்கூட்டியே காவல்துறையில்
சரண் அடைந்துள்ளார். மாநகர
காவல்துறையினர் அவரை கைது செய்து,
காரிப்பட்டி காவல்நிலையத்தில்
ஒப்படைத்துள்ளனர். ஆனால் கதிர்வேலை,
காவல்துறையினர் திட்டமிட்டு கொலை
செய்துவிட்டு என்கவுண்ட்டர் செய்ததாக
நாடகம் ஆடுகின்றனர். இந்த வழக்கை
உள்ளூர் காவல்துறையினர் விசாரித்தால்
உண்மை வெளி வராது. கதிர்வேல்
என்கவுண்ட்டரில் பல்வேறு
சந்தேகங்கள் உள்ளன.

எனவே இந்த வழக்கை சிபிஐ
விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
கதிர்வேலின் குடும்பத்தினர் மிகவும்
ஏழ்மையானவர்கள். இதனால் அவருடைய
குடும்பத்தினருக்கு தமிழக அரசு
25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்.
என்கவுண்ட்டர் நடந்ததாகக் கூறப்படும்
குள்ளம்பட்டி ஆலமரத்துக்காடு பகுதியில்
நேரில் சென்று விசாரித்தோம். அங்கு
வசிக்கும் நபர்கள், என்கவுண்ட்டர்
சம்பவம் நடந்ததே தெரியாது
என்கிறார்கள்.

 

இந்த வழக்கின் விசாரணை
அதிகாரி டிஎஸ்பி அண்ணாமலை,
எஸ்பி தீபா கனிக்கர் ஆகியோரை
சந்திக்க சென்றபோது அவர்கள்
எங்களை சந்திக்க மறுத்துவிட்டனர்.
கதிர்வேல் தாக்கியதாக கூறப்பட்ட
ஆய்வாளர் சுப்ரமணியம், எஸ்ஐ மாரி
ஆகியோரையும் விசாரிக்க முடியவில்லை.
இந்த வழக்கு தொடர்பாக நாங்கள்
சில ஆதாரங்களை திரட்டி உள்ளோம்.
இந்த என்கவுண்ட்டர் தொடர்பாக
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும்
முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு மார்க்ஸ் கூறினார்.

 

– பேனாக்காரன்