Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு புதிய டீன் நியமனம்! அரசு உத்தரவு!!

 

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு புதிய முதல்வராக (டீன்) வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருதயவியல் துறைத் தலைவர் திருமால் பாபு நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்தில் சேலம், தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர் (டீன்) பணியிடம் காலியாக இருந்தது. இதையடுத்து அந்த இடங்களில் மூத்த பேராசிரியர்கள் பொறுப்பு முதல்வராக பணியாற்றி வருகின்றனர்.

 

பதவி உயர்வு:

 

முதல்வர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்தன. இதற்காக மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்களின் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் 11 பேர், முதல்வர் பதவி உயர்வுக்குரிய பட்டியலில் இடம் பெற்று இருந்தனர்.

 

அவர்களில் காலியிடங்கள் மற்றும் மூப்பு அடிப்படையில் 5 மருத்துவர்களுக்கு முதல்வர் பதவி உயர்வு வழங்கியும், புதிய பணி இடங்களை ஒதுக்கியும் தமிழக அரசு இன்று (செப்டம்பர் 12, 2018) மாலை உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

 

அதன்படி, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருதயவியல் துறைத்தலைவராக பணியாற்றி வரும் மருத்துவர் கே.திருமால் பாபு, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரியில் மயக்கவியல் துறை பேராசிரியராக உள்ள குமுதா லிங்கராஜ், தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி பொது அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர் கே.ராஜேந்திரன், தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை எம்எம்சி அரசு மருத்துவக்கல்லூரி மருந்தியல் துறை பேராசிரியர் பி.வசந்தி, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

 

கோயம்பத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி பொது அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன், கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

 

சேலம் புதிய முதல்வரை பற்றி…

 

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றி வந்த கனகராஜ், கடந்த ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால், சில நாள்கள் முதல்வர் பொறுப்பில் இருந்தார்.

 

இதையடுத்து, மூத்த மருத்துவரான பிளாஸ்டிக் சர்ஜரி துறையைச் சேர்ந்த மருத்துவர் எம்.கே.ராஜேந்திரனிடம் முதல்வர் பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஜூலை 5ம் தேதி முதல் அவர் முதல்வர் பொறுப்பில் இருந்து வருகிறார்.

 

இந்நிலையில், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி இருதயவியல் துறைத்தலைவர் திருமால் பாபுவை சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு முழு நேர முதல்வராக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இன்னும் சில நாள்களில் அவர் பொறுப்பேற்பார் எனத்தெரிகிறது.

 

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு புதிய முதல்வராக பதவி உயர்வில் வரும் மருத்துவர் திருமால் பாபுவின் சொந்த ஊர், வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு ஆகும். தற்போது வேலூர் மாநகரில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

 

இவருடைய மனைவி ஜெயஸ்ரீ. மகப்பேறு மருத்துவர். இவரும் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்தான் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் பிரமோத், பெங்களூர் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டும், மகள் சாய் பிரத்திகா பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா மருத்துவக்கல்லூரியில் (கிம்ஸ்) முதலாம் ஆண்டும் எம்பிபிஎஸ் படித்து வருகின்றனர்.

 

மருத்துவர் திருமால் பாபு, கடந்த 2011ம் ஆண்டே, சேலம் அரசு மருத்துவமனையில் மூன்று மாதங்கள் பணியாற்றி இருக்கிறார். அவர் பணியாற்றிய காலத்தில்தான் இருதயவியல் துறைக்கு கேத்லேப் துறை புதிதாக தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் இருதயவில் மருத்துவர்களிலேயே மிக மூத்தவர் திருமால் பாபு. 30.3.1963ம் தேதி பிறந்த இவருக்கு தற்போது 55 வயது ஆகிறது. அரசு மருத்துவப்பணிக்கு வந்து 29 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இவர், இருதயவியல் துறையில் 23 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்.

 

எம்பிபிஎஸ், எம்.டி., டி.எம்., படிப்புகளை முடித்துள்ள மருத்துவர் திருமால் பாபு, டி.எம்., படிப்பை சென்னை எம்எம்சி கல்லூரியில் முடித்தார்.

 

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1995ம் ஆண்டு பணியில் சேர்ந்த மருத்துவர் திருமால் பாபு, அங்கு இருதயவியல் துறையை மேம்படுத்தினார். அவருடைய முயற்சியால் அங்கு இருதயவியல் துறைக்கு தேவையான கேத்லேப் துறையை நவீன வசதிகளுடன் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது. விரைவில் கேத்லேப் துறையை அரசு துவக்கி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அந்த மருத்துவமனையில் ஏற்கனவே ஏஆர்எம்ஓ, துணை மருத்துவக்கண்காணிப்பாளர் உள்ளிட்ட நிர்வாகப் பணிகளிலும் அங்கம் வகித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

– பேனாக்காரன்.