Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நெல்லையில் தீக்குளிப்பு: கந்து வட்டி கொடுமைக்கு தாய், மகள்கள் பலி; கணவர் கவலைக்கிடம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (அக். 23, 2017) காலை கந்துவட்டி கொடுமையால் விரக்தி அடைந்த கூலித்தொழிலாளி குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதில் அவருடைய மனைவி, இரு மகள்கள் பரிதாபமாக பலியாயினர்.

கரிக்கட்டையான தளிர்கள் மதி சரண்யா மற்றும் அக்ஷய சரண்யா…

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (32). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுப்புலட்சுமி (24). இவர்களுக்கு மதிசரண்யா (4), அக்ஷய சரண்யா (2) என்ற இரு பெண் குழந்தைகள்.

தீக்கு இரையாகிக் கொண்டிருக்கும் சுப்புலட்சுமி…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் இன்று நடந்து வருகிறது. இந்த முகாமில் மனு கொடுப்பதற்காக இசக்கிமுத்து குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

மனுக்கள் கொடுக்கும் அரங்கு முன்பு திடீரென்று அவர்கள் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தங்கள் மீதும், குழந்தைகள் மீதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டனர்.

கணவர் இசக்கிமுத்துவுடன் சுப்புலட்சுமி. (பழைய படம்)

தீ மளமளவென பற்றி எரிந்து. இதனால் ஆட்சியர் வளாகமே கடும் பரபரப்படைந்தது. பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், பொதுமக்கள் ஆகியோர் தீயில் எரிந்து கொண்டிருந்தவர்கள் மீது மண் அள்ளிப்போட்டும், சிலர் தண்ணீர் ஊற்றியும் தீயை அணைத்தனர்.

எனினும், நான்கு பேரின் முக்கிய உடல்பாகங்களும் தீயில் கருகின. நான்கு பேரும் உடனடியடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமி, அவருடைய இரு மகள்கள் மது சரண்யா, அக்ஷய சரண்யா ஆகிய மூவரும் பலியாயினர். கவலைக்கிடமான நிலையில் உள்ள இசக்கிமுத்துவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் ஒட்டுமொத்த நெல்லை மாவட்டத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.