Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கஃபீல்கான் என்கிற மனிதநேயர்!

உத்தர பிரதேசத்தில், அரசு மருத்துவர் ஒருவரின் மனிதநேயமிக்க முயற்சியால் பல குழந்தைகளின் உயிர்கள் பலியாகாமல் காப்பாற்றப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோரக்பூர். பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. மூளைவீக்க நோயால் 60 குழந்தைகள் இறந்தது இங்கேதான்.

குழந்தை நல மருத்துவர் ஒருவர் மூளைவீக்க சிகிச்சைப் பிரிவின் தலைவருமாக இருக்கிறார்.

10ஆம் தேதி இரவு. ஆக்சிஜன் குறைபாட்டால் அபாய எச்சரிக்கை பீப் சத்தம் ஒலிக்கிறது. அவசர கால சிலிண்டர்களைப் பயன்படுத்தி ஆக்சிஜன் சப்ளை தடைபடாமல் பார்த்துக்கொள்ளலாம் என்பது மருத்துவருக்கும் ஊழியர்களுக்கும் தெரியும். ஆனால் இது இரண்டு மணி நேரத்துக்குத்தான் தாங்கும். அதற்குப் பிறகு?

மூளைவீக்க நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆக்சிஜன் தடையின்றித் தேவை, அதுதான் அவர்களின் உயிர்காக்கும் மருந்து. இதுவும் அந்த மருத்துவருக்கு நன்றாகத் தெரியும்.

ஆக்சிஜன் சப்ளையரிடம் தொலைபேசியில் பேசுகிறார்கள். பழைய பாக்கி வராமல் புதிதாக சப்ளை செய்ய முடியாது என்கிறார் அவர். மற்ற சில சப்ளையர்களிடம் பேசுகிறார்கள். அவர்களும் சப்ளை செய்ய முடியாது என்கிறார்கள். (அங்கீகரிக்கப்பட்டவர் தவிர வேறு யாராவது சப்ளை செய்தால் அதற்கு மருத்துவமனை பணம் தராது. ஃபைல் நோட்டிங், மேலிட அப்ரூவல், அகவுன்ட் செக்‌ஷன் ஒப்புதல், டிமாண்ட் கடிதம், டெலிவரி செலான், அதில் மருத்துவமனை சீல், என சிவப்புநாடா விஷயங்கள் ஏராளம் உண்டு நிர்வாகத்தில்.)

அந்த மருத்துவர் யோசித்தார். இரண்டு ஊழியர்களை அழைத்துக்கொண்டு தனது காரில் புறப்பட்டார். தனது நண்பர் ஒருவரின் மருத்துவமனைக்குச் சென்று மூன்று ஆக்சிஜன் சிலிண்டர்களை இரவல் பெற்றுக்கொண்டு திரும்பி வந்தார். போவதற்கும் முன்பாக, ஒருவேளை ஆக்சிஜன் தீர்ந்து போனால் மூச்சுக் காற்றை செலுத்துவதற்கான கையால் இயக்கும் பலூன்-பம்ப்கள் (Ambu bags) மூலம் குழந்தைகளுக்கு மூச்சை செலுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டுத்தான் சென்றார்.

அவர் கொண்டு வந்த மூன்று சிலிண்டர்களின் ஆக்சிஜனை மத்திய பைப்லைனில் செலுத்தினால் அரை மணி நேரத்துக்குத்தான் உதவும்.

குழந்தைகளுக்கு பிரச்சினைகள் துவங்கி விட்டன. மருத்துவர் மீண்டும் தன் காரில் வெளியே புறப்பட்டார். தனக்குத் தெரிந்த மருத்துவமனைகள் எல்லாவற்றுக்கும் சென்றார். நான்கு டிரிப்புகள் அடித்தார், பல்வேறு இடங்களிலிருந்தும் 12 சிலிண்டர்களை எடுத்துக்கொண்டு வந்தார்.

அவர் கடைசியாக மருத்துவமனைக்குத் திரும்பி வந்தபோது, ரொக்கப் பணம் கொடுத்தால், ஒரு சப்ளையர் ஆக்சிஜன் சிலிண்டர்களை தரத் தயாராக இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த மருத்துவர் தனது ஏடிஎம் கார்டை ஊழியரிடம் கொடுத்தார். 10000 ரூபாய் எடுத்துக் கொடுத்து, ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கொண்டுவருமாறு பணித்தார். ஃபைசாபாதிலிருந்து சிலிண்டர்களைக் கொண்டு வருவதற்கான டீசல் மற்றும் வாடகைக்கும் தன் கையிலிருந்தே கொடுத்தார். ஆக்சிஜன் வந்தது.
அவர் மட்டும் சமயோசிதமாக செயல்பட்டு இந்த முயற்சிகள் செய்யாமல் இருந்திருந்தால் இன்னும் பல குழந்தைகள் உயிர் இழந்திருப்பார்கள்.

அவர் பெயர் — டாக்டர் கஃபீல் கான் (Dr Kafeel Khan)

நன்றி: திரு.ஷாஜகான்.