Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம்: எடுபடாத கிராம சபைக்கூட்டம்! விவசாயிகள் அதிருப்தி!! #GramaSabha

 

சேலம் மாவட்டத்தில் கண்துடைப்பாக கிராம சபைக்கூட்டங்கள் நடத்தப்படுவது அம்பலமாகி உள்ளது. இதனால் கிராம மக்கள், விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 

கிராம சபைக்கூட்டம்

 

இந்தியா 70 சதவீதம் கிராமங்களையும், விவசாயத்தை பிரதானத் தொழிலாகவும் கொண்ட நாடு. நகர்ப்புறத்தில் கிடைக்கும் அத்தனை வசதிகளும் கிராமப்புறங்களிலும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆண்டுக்கு நான்கு முறை கட்டாயமாக ஒவ்வொரு கிராமத்திலும் கிராமசபைக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பது சட்டமாகக் கொண்டு வரப்பட்டது.

 

அதன்படி நாடு முழுவதும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நான்கு தினங்களில் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும்.

 

385 கிராமங்களில்…

 

தமிழகம் முழுவதும் கடந்த அதன்படி அக்டோபர் 2, 2018)ம் தேதியன்று 12618 கிராமங்களிலும் இக்கூட்டம் நடத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 385 கிராமங்களில் கிராமசபைக்கூட்டம் நடந்தது. இக்கூட்டம் நடைபெறுவது குறித்து ஒரு வாரத்திற்கு முன்பே அந்த மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் ஒவ்வொரு குக்கிராமத்திலும் பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்பது நடைமுறை.

 

ஆனால், கிராமசபைக்கூட்டங்கள் என்பது அதிகாரிகளைப் பொருத்தளவில் வெறும் சம்பிரதாயமாகவே கருதப்படுவதால், இதுகுறித்து யாரும் முன்கூட்டி அறிவிப்பு வெளியிடப்படுவதில்லை. சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, இக்கூட்டம் தொடர்பாக அக்டோபர் 2ம் தேதி வெளியான பத்திரிகைகளில் மட்டுமே அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, நடந்து முடிந்த கிராம சபைக்கூட்டங்களிலாவது ஏதாவது ஆக்கப்பூர்வமான முடிவுகள் எட்டப்பட்டதா என்றால் அதுவும் கேள்விக்குறிதான்.

 

குள்ளம்பட்டி

 

குள்ளம்பட்டி கிராமசபைக்கூட்டம் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் நடந்தது. அயோத்தியாப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர் வடிவேல் என்பவர் அக்கூட்டத்தில் அரசுப்பார்வையாளராக கலந்து கொண்டார்.

 

கூட்டம் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் குள்ளம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ், முருகேசன், மணிகண்டன், வடிவேல் ஆகியோர் அவரிடம், தங்கள் பகுதியில் தெருவிளக்குகள் வசதி செய்து தருமாறு கடந்த கூட்டத்தின்போதே தீர்மானம் நிறைவேற்றி இருந்தோம். ஆனால் இன்னும் அப்பிரச்னை தீரவில்லை. எப்போது தெருவிளக்கு வசதி செய்து தரப்படும்? என வடிவேலிடம் கேட்டுக் கொண்டிருந்தனர்.

காலை 10.45 மணியளவில் குள்ளம்பட்டி கிராம மக்கள் மேலும் சிலர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்து கொண்டிருந்தனர். அதைப் பார்த்ததும் அரசுப் பார்வையாளர் வடிவேல் என்ன நினைத்தாரோ, திடீரென்று கூட்டத்தில் இருந்து யாரிடமும் எதுவும் சொல்லாமல் கொள்ளாமல் தீர்மான பதிவேட்டை கையில் எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். இதனால் கிராமசபைக் கூட்டம் பதினைந்து நிமிடங்களில் முடிந்து போனது.

 

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நடந்த கூட்டத்தின்போதும் வடிவேல் இதேபோல்தான் தீர்மான பதிவேட்டை எடுத்துக்கொண்டு அடிக்கடி வெளிநடப்பு செய்ய முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.

 

சாதாரண கடைநிலை ஊழியருக்கு ஒட்டுமொத்த கிராம மக்களின் நலன்களையும் புறக்கணித்து ஓட முடிகிறது என்றால் அதுதான் உண்மையான கிராம ராஜ்ஜியமா? என்ற கேள்விகளும் எ-ழாமல் இல்லை. இதுவரை வடிவேல் மீது துறை ரீதியான நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லையே ஏன்?

 

பின்னர் காலை 11 மணியளவில், கால்நடைத்துறையில் இருந்து பெண் மருத்துவர், மின்வாரிய ஊழியர், ரேஷன் கடை ஊழியர் ஆகியோரும் அந்தக் கூட்டத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் தங்களை 11 மணிக்குதான் கூட்டத்திற்கு வரும்படி தகவல் கொடுக்கப்பட்டதாகக் கூறினர்.

 

மேலும், குள்ளம்பட்டி கிராமத்தில் தெருவிளக்கு இல்லாமல் மக்கள் இருளில் கிடப்பது குறித்து இதுவரை அயோத்தியாப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து மின்வாரிய அலுவலகத்திற்கு எந்த ஒரு தகவலும் சொல்லப்படவில்லை என்றும் அங்கு வந்த மின்வாரிய ஊழியர் கூறினார்.

 

பிறகுதான், நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் பெண்களைக் கொண்டு பெயரளவுக்கு கிராமசபைக் கூட்டத்தை நடத்திவிட்டு வடிவேல் ஓட்டம் பிடித்திருப்பது கிராம மக்களுக்கு தெரிய வந்தது.

 

இதுவரை கிராமசபைக் கூட்டங்களில் கொண்டு வந்த தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றாமல் பெயரளவுக்கு கூட்டம் நடத்தப்படுவதாகவும் கிராம மக்கள் சலிப்புடன் கூறினர். முந்தைய கூட்த்தில் நிறைவேற்றப்பட்ட எந்த ஒரு தீர்மானம் மீதும் இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனும்போது இப்படி ஒரு கூட்டமே தேவையில்லை.

 

ராமலிங்கபுரம்

 

இது ஒருபுறம் இருக்க, ராமலிங்கபுரம் கிராமசபைக்கூட்டத்தில் எட்டு வழிச்சாலைக்கு எதிராக கிராம மக்கள் தீர்மானம் கொண்டு வந்தனர். அரசுப் பார்வையாளராக வந்திருந்த ஊழியர், இந்த திட்டத்துக்கு தற்போது உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் தீர்மானம் பதிவு செய்ய முடியாது என்றார்.

 

¢அதற்கு அந்த ஊரைச் சேர்ந்த சிவகாமி, கவிதா மற்றும் கிராம மக்கள் சிலர், எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு இடைக்கால தடை உத்தரவுதான் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டால் ராமலிங்கபுரம் கிராமமே ஒட்டுமொத்தமாக அழிந்து விடும். எங்கள் ஊரில் கிராம மக்களே சேர்ந்து கட்டிய கோயிலும், பள்ளிக்கூடமும் அழிந்துவிடும்.

 

ஊர்மக்களை பிளவுபடுத்தும் இந்த திட்டத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். அதைப்பற்றி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொண்டே இருந்தனர்.

 

இதையடுத்து, அந்த தீர்மானத்தை பதிவேட்டில் அரசு பார்வையாளர் பதிவு செய்து கொண்டார். மேலும், தங்கள் பகுதிக்கு தெருவிளக்கு, குடிநீர் பிரச்னைகளை உடனடியாக தீர்வு காண வேண்டும் என்ற தீர்மானத்தையும் கொண்டு வந்தனர்.

இதற்கிடையே, குள்ளம்பட்டி கிராம மக்கள் நேற்று (அக்டோபர் 3) அயோத்தியாப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அரசு பார்வையாளர் வடிவேல் மீது புகார் அளித்தனர். அதற்கு அவர், குள்ளம்பட்டி கிராமத்தில் தெருவிளக்கு பிரச்னை உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என்றும், அடுத்தமுறை கிராமசபைக் கூட்டத்தை முறையாக நடத்தப்படும் என்றும் சமாதானம் செய்தார்.

 

அதிகாரிகளை முற்றுகையிடுவோம்

 

பூலாவரியில் நடந்த கிராமசபைக்கூட்டத்தில், எட்டு வழிச்சாலைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தபோதும் ஆரம்பத்தில் அரசு பார்வையாளர்கள் அதை பதிவு செய்ய மறுத்துவிட்டனர். அவ்வாறு பதிவு செய்யாவிட்டால் அதிகாரிகளை முற்றுகையிடுவோம் என்று விவசாயிகள் உரத்துச் சொன்ன பிறகுதான் வேண்டாவெறுப்பாக அந்த தீர்மானத்தை பதிவு செய்துள்ளனர்.

 

அதேபோல் பாரப்பட்டியிலும், பெரும் சலசலப்புகளுக்கு இடையில்தான் எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு எதிரான தீர்மானங்களை அரசுப் பார்வையாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

 

பெரும்பாலான கிராமசபைக் கூட்டங்களில் அரசுத்தரப்பு அதிகாரிகள் காசநோய், டெங்கு, தனிநபர் கழிப்பறை குறித்து பத்து நிமிடங்களில் விழிப்புணர்வு பரப்புரை பெயரளவுக்கு மேற்கொண்டனர். தெருவிளக்கும், குடிநீர் வசதி போன்ற சின்னச்சின்ன தீர்மானங்களைக்கூட நிறைவேற்றித்தராத வெற்று கிராமசபைக் கூட்டங்களால் கிராம மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 

– நாடோடி