Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவியை இரண்டாம் முறையாக கைப்பற்றியது பாமக!

சேலம் மாவட்ட
ஊராட்சிக்குழுத் தலைவர்
பதவியை பாமக இரண்டாவது
முறையாக கைப்பற்றியது.
அக்கட்சியின் வேட்பாளர் ரேவதி,
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதிமுகவின் ராஜேந்திரன்,
துணைத்தலைவராக
வெற்றி பெற்றார்.

ஊரக உள்ளாட்சி
அமைப்புகளுக்கு இரண்டு
கட்டங்களாக தேர்தல் நடத்தி
முடிக்கப்பட்டது. ஊராட்சி
ஒன்றியக்குழு, மாவட்ட
ஊராட்சிக்குழுக்களின் தலைவர்,
துணைத்தலைவர் பதவிகளுக்கான
மறைமுக தேர்தல் ஜனவரி
11ம் தேதி (சனிக்கிழமை) நடந்தது.

 

சேலம் மாவட்ட ஊராட்சிக்குழுவில்
மொத்தம் 29 உறுப்பினர் பதவிகள்
உள்ளன. இதில், அதிமுக
18 இடங்களிலும், அதன்
கூட்டணிக் கட்சியான பாமக 4,
தேமுதிக 1 இடங்களிலும்
வெற்றி பெற்றிருந்தன.
எஞ்சியுள்ள 6 இடங்களையும்
திமுக கைப்பற்றி இருந்தது.
மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர்
பதவிக்கு போதிய பெரும்பான்மையை
அதிமுக தனித்தே பெற்றிருக்கிறது.
என்றாலும், ஒன்றியக்குழுத்
தலைவர் பதவிகளைக் கேட்டு
பாமக குடைச்சல் கொடுக்காததால்,
அக்கட்சிக்கு மாவட்ட
ஊராட்சிக்குழுத் தலைவர்
பதவியை ஆளுங்கட்சி
விட்டுக் கொடுக்க சம்மதித்ததாக
கூறப்படுகிறது.

 

இதையடுத்து, ஊராட்சிக்குழு
தலைவர், துணைத்தலைவர்
பதவிக்கான மறைமுக தேர்தல்,
சேலம் மாவட்ட ஆட்சியர்
அலுவலகம் அருகில் உள்ள
மாவட்ட ஊராட்சிக்குழு
கட்டடத்தில் நடந்தது.
மாவட்ட ஊராட்சிக்குழு
உறுப்பினர்கள் வாக்களித்து,
தலைவர், துணைத்தலைவரை
தேர்ந்தெடுக்க வேண்டும்.

 

வாக்குப்பதிவு நடக்கும்
கட்டடத்திற்குள் தேர்தல்
நடத்தும் அலுவலர்,
உதவியாளர்கள், வாக்களிக்கும்
ஊராட்சிக்குழு உறுப்பினர்கள்
தவிர பத்திரிகையாளர்கள் உள்பட
பிறர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
உறுப்பினர்கள், தேர்தல்
வெற்றிச்சான்றிதழை மட்டுமே
உடன் எடுத்துச் செல்ல
அனுமதிக்கப்பட்டனர்.
செல்போன், பேனா, பென்சில்
உள்ளிட்ட பொருள்களை
எடுத்துச்செல்லவும்
உறுப்பினர்களுக்கு
அனுமதி மறுக்கப்பட்டது.

 

தலைவர் பதவிக்கு பாமக சார்பில் 3வது வார்டில் வெற்றி பெற்ற ரேவதி, திமுக சார்பில் ஆத்தூர் 26வது வார்டில் வெற்றி பெற்ற நல்லம்மாள் ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். மாவட்ட ஆட்சியர் ராமன் முன்னிலையில் வாக்குப்பதிவு நடந்தது.

 

மொத்தம் உள்ள 29 உறுப்பினர்களில் அதிமுகவைச் சேர்ந்த சின்னுசாமி (11வது வார்டு), ராஜா (29வது வார்டு), திமுகவைச் சேர்ந்த அழகிரி (9வது வார்டு) ஆகியோர் மறைமுகத் தேர்தலில் வாக்களிக்க வரவில்லை. சொந்தக் காரணங்களால், அவர்கள் மறைமுகத் தேர்தலில் கலந்து கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் மொத்தம் 26 உறுப்பினர்கள் தேர்தலில் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

 

இதில், பாமக ரேவதிக்கு 22 வாக்குகளும், திமுகவின் நல்லம்மாளுக்கு 4 வாக்குகளும் கிடைத்தன. ரேவதி, 18 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. திமுக தரப்பில் இருந்தும் ஒரு வாக்கு, ரேவதிக்கு பதிவாகி இருந்தது.

 

இதையடுத்து, சனிக்கிழமை மாலை துணைத்தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடந்தது. அதிமுக சார்பில் கொங்கணாபுரம் ஒன்றியம் 12வது வார்டில் வெற்றி பெற்ற ராஜேந்திரன், திமுக சார்பில் 19வது வார்டில் வெற்றி பெற்ற கீதா ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இதில், ராஜேந்திரன் 22 வாக்குகள் பெற்று துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். திமுகவின் கீதாவுக்கு 5 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

 

சேலம் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவராக வெற்றி பெற்ற ரேவதிக்கு, அதிமுக, பாமக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

 

தலைவராக வெற்றி பெற்ற
பிறகு ரேவதி செய்தியாளர்களிடம்
கூறுகையில், ”சேலம் மாவட்டத்தில்
தரமான சாலைகள், பாதுகாக்கப்பட்ட
குடிநீர், சுகாதார வளாகங்கள்
உள்ளிட்ட அனைத்து அடிப்படை
வசதிகளும் செய்யப்படும்.
எனக்கு வாக்களித்த அனைத்து
வாக்காளர்களுக்கும், தலைவராக
போட்டியிட வாய்ப்பளித்த
பாமக நிறுவனர் மருத்துவர்
ராமதாஸ், முதல்வர்
எடப்பாடி பழனிசாமி
ஆகியோருக்கு நன்றி,”
என்றார்.

 

தமிழகத்தில் கடந்த 2006ம்
ஆண்டு உள்ளாட்சி
அமைப்புகளுக்குத் தேர்தல்
நடந்தபோது, அப்போது
ஆளுங்கட்சியாக இருந்த
திமுகவின் கூட்டணியில்
பாமக அங்கம் வகித்தது.
அந்த தேர்தலில், சேலம் மாவட்ட
ஊராட்சிக்குழுத் தலைவர் பதவியை
பாமகவுக்கு விட்டுக்கொடுத்தது திமுக.
அப்போது பாமக சார்பில் சண்முகம்
தலைவராகவும், திமுகவின்
சுரேஷ்குமார் துணைத்தலைவராகவும்
தேர்வு செய்யப்பட்டனர்.

 

இந்த முறை,
அதிமுக கூட்டணியில்
அங்கம் வகித்தபோதும்
இரண்டாவது முறையாக
மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர்
பதவியை பாமகவே கைப்பற்றி
இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, 2006க்குப் பிறகு
2020ல் மீண்டும் மாவட்ட
ஊராட்சிக்குழுத் தலைவர்
பதவிக்கு வந்திருக்கிறது பாமக.

 

  • பேனாக்காரன்