Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தர்மபுரி: காட்டுக்குள் வந்தால் கபளீகரம்! காதலர்களுடன் வரும் இளம்பெண்களுக்கு குறி! துப்பாக்கிக்கு இரையான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள்

 

ஒகேனக்கல் அருகே காட்டுப்பகுதிக்குள் காதலனுடன் ஒதுங்கிய இளம்பெண்ணை சீரழிக்க முயன்றபோது ஏற்பட்ட தகராறில் காதலனை கருணையே இல்லாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து நான்கு கி.மீ. தொலைவில் பண்ணப்பட்டி பிரிவு சாலையில் ஒரு காப்புக்காடு இருக்கிறது. இந்தக் காட்டுப்பகுதிக்குள் அந்நியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்றாலும், ஒகேனக்கல்லுக்கு ஜோடியாக சுற்றுலா வரும் இளசுகள், இந்த காட்டுப்பகுதியில் ஒதுங்குவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆளரவமற்ற பகுதி என்பதால், எது நடந்தாலும் வெளி உலகுக்குத் தெரியாது.

முனுசாமி

இந்நிலையில், கடந்த மே 1ம் தேதியன்று, தொப்பூர் அருகே உள்ள ஜருகு குரும்பட்டியான் கொட்டாயைச் சேர்ந்த பாலு மகன் முனுசாமி (25), தனது அக்காள் மகள் ரஞ்சனி (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

 

அங்கிருந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்புகையில், வழியில் பண்ணப்பட்டி காப்புக்காட்டிற்குள் நுழைந்துள்ளனர். அவர்களின் மோட்டார் சைக்கிள் காப்புக்காட்டிற்கு வெளியே, பிரதான சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இளஞ்ஜோடிகள் தனிமையில் ஒதுங்கி இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர், கையில் நீளமான நாட்டுத்துப்பாக்கி சகிதமாக அவர்களை நெருங்க, முனுசாமியும் ரஞ்சனியும் வெலவெலத்துப் போனார்கள்.

இடது மார்பில் குண்டு பாய்ந்து சடலமாக முனுசாமி

அந்த மர்ம நபர், பார்ப்பதற்கு துணை ராணுவ வீரர் போன்ற சீருடையில் இருந்ததுடன், ‘இங்கெல்லாம் வரக்கூடாது. இது யானைகள் நடமாடும் இடம்’ என்று கடுகடுப்பு காட்டியிருக்கிறார். இதனால் அவர், உண்மையிலேயே வனத்துறை அதிகாரியாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்ட முனுசாமி, ‘சாரி சார்… கிளம்பிடறோம் சார்…’ என்றபடியே ரஞ்சனியை அழைக்கிறார். அதற்கு அந்த மர்ம ஆசாமி, ‘அவளை எங்கே கூப்பிடுகிறாய். நீ மட்டும் முதலில் போ. அவளை பிறகு அனுப்பி வைக்கிறேன்,’ என்று சொல்ல, அடுத்து நிகழப்போகும் விபரீதத்தை உணர்ந்த முனுசாமி அவருடன் வாக்குவாதம் செய்கிறார்.

திடீரென்று மர்ம நபர், தான் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் முனுசாமியை சுட்டுக்கொன்று விடுகிறார். முனுசாமியின் இடதுபுற மார்பின் மீது பாய்ந்த தோட்டா, அவரை காவு வாங்கி விடுகிறது. அதிர்ச்சி அடைந்த ரஞ்சனி விருட்டென ஓட்டம் பிடித்து, பிரதான சாலைக்கு ஓடிவந்து கூச்சல் போட, அதற்குள் அந்த வழியாகச்சென்ற சுற்றுலா பயணிகளும் திரண்டு விட, மர்ம நபரும் தலைமறைவாகிவிடுகிறார்.

 

இதுகுறித்து ஒகேனக்கல் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட, தர்மபுரி மாவட்ட எஸ்பி ராஜன் உத்தரவின்பேரில் பென்னாகரம் டிஎஸ்பி மேகலா மேற்பார்வையில் ஒகேனக்கல் காவல் ஆய்வாளர் தண்டபாணி, ஏரியூர் ஆய்வாளர் பாஸ்கர்பாபு உள்ளிட்ட 10 ஆய்வாளர்கள் கொண்ட ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டது.

செல்வம்

சிறுமி ரஞ்சனியிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் காவல்துறையினர் ஆரம்பத்தில் சிலரை சந்தேகித்தாலும், நாட்டுத்துப்பாக்கி சகிதமாக வனத்துறைக்காவலர் போன்ற சீருடையில் மர்ம நபர் நடமாட்டம் என்பதால், நக்சல்களின் வேலையாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் ஒருபுறம் இருந்தது என்கிறார்கள் தனிப்படை காவல்துறையினர். அதனால் கியூ பிராஞ்ச் மற்றும் அதிரடிப்படை வீரர்களும் சுமார் 12 சதுர கி.மீ. பரப்பளவு உள்ள பண்ணப்பட்டி காப்புக்காட்டுக்குள் சல்லடை போட்டு தேடி வந்தனர்.

 

பென்னாகரம் கூத்தப்பாடி மடம் செக்போஸ்ட் அருகே உள்ள இருளர் காலனியைச் சேர்ந்த சடையன் மகன் செல்வம் (40) என்பவர் மீது சந்தேகம் இருந்தது. காரணம், அவர்தான் எப்போதும் வனக்காவலர் போல பச்சை நிற சீருடை அணிந்து கொண்டு காட்டுப்பகுதியில் வலம் வருவார் என்று தெரிவித்துள்ளனர் அந்தப்பகுதி மக்கள். அதுமட்டுமின்றி நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றும் நபர்கள் குறித்த தகவல்களை சேகரித்தபோதும், அந்தப்பட்டியலிலும் செல்வம் இருந்தார். மேலும், சொல்லி வைத்தாற்போல் இருளர் காலனியில் செல்வம் மட்டும் திடீரென்று வீட்டுப்பக்கமே வராமல் நாலைந்து நாள்களாக மாயமாகி இருப்பதும் அவர் மீதான சந்தேகத்தை வலுக்கச் செய்தது.

செல்வத்திடம் பறிமுதல் செய்யப்பட நாட்டுத்துப்பாக்கி

செல்வத்தைப் பிடிக்க செல்போன்
தொழில்நுட்பமும் கைகொடுத்துள்ளது.
பண்ணப்பட்டி காப்புக்காட்டுக்குள் சில
இடங்களில் செல்போன் சிக்னல்
கிடைக்கும் என்பதால், அதை வைத்து
ஆய்வு செய்ததில், மே 1ம் தேதியன்று
சம்பவ இடம் அருகே, செல்வத்தின்
செல்போன் பயன்பாட்டில் இருந்திருப்பதும்
தெரிய வந்தது. அதே காட்டுக்குள்
பதுங்கி இருந்த செல்வத்தை மே 7ம்
தேதியன்று அலேக்காக கைது
செய்திருக்கிறது தனிப்படை.
காவல்துறையினரைக் கண்டதும்
தப்பிக்க முயற்சித்தபோது தானாகவே (?!)
தவறி விழுந்ததில் செல்வத்திற்கு
வலது கால் எலும்பு முறிந்து
போனதாக கூறுகிறது தனிப்படை.
தற்போது அவர் தர்மபுரி
அரசு மருத்துவமனையில்
சிகிச்சையில் உள்ளார்.

 

இவருக்கு நாட்டு துப்பாக்கி செய்து
கொடுத்ததாக கூத்தப்பாடியைச் சேர்ந்த
நாகராஜ் (38) என்பவரையும் அடுத்து
கைது செய்துள்ளனர். செல்வத்தின் மீது
கொலை மற்றும் சட்ட விரோதமாக ஆயுதம்
வைத்திருந்த பிரிவு ஆகிய இரு
வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
நாகராஜ் மீது கள்ளத்துப்பாக்கி
வைத்திருந்த வழக்கு மட்டும்
பதிவு செய்யப்பட்டது.

 

இது தொடர்பாக நாம் ஒகேனக்கல்லைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். அவர்கள் கூறும் சில தகவல்கள் அதிர்ச்சிகரமாக இருந்தன.

சிறுமி ரஞ்சனி

”சார்…காட்டுப்பகுதிக்குள் ரொம்ப
நாளாகவே ஒரு கும்பல் சுத்திக்கிட்டுதான்
இருக்கு. ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா
வரும் இளம் ஜோடிகளை குறி வைத்து
அவர்களிடம் நகை, பணம் பறிக்கிறது,
சில நேரங்களில் ஆண்களைக் கட்டிப்போட்டுவிட்டு
அவர்களுடன் வரும் இளம்பெண்களை
பாலியல் பலாத்காரம் செய்வது
போன்ற குற்றங்களும் நடந்துக்கிட்டுதான்
இருக்கு.

 

பெரும்பாலும் கர்நாடகா மாநிலத்தில்
இருந்து ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா
வரும் இளம் காதல் ஜோடிகள் இங்குள்ள
முண்டச்சி பள்ளம், சிகரலஹள்ளி ஆகிய
காப்புக்காட்டுப் பகுதிகளுக்குள் ஒதுங்கினால்
அவ்வளவுதான். அவர்களை சீரழிக்காமல்
அந்த கும்பல் விடாது. கற்பை பறிகொடுத்த
பெண்கள் இதுவரை ஏன் புகார்
அளிக்கவில்லை என்று தெரியாது. ஆனால்
இதெல்லாம் குறிப்பிட்ட வனப்பகுதிக்குள்
நடந்துக்கிட்டுதான் இருக்கு,” என்றனர்.

கால் உடைந்ததால் சிகிச்சையில் செல்வம்

தனிப்படையில் இடம் பெற்றிருந்த
காவல் ஆய்வாளர் ஒருவரோ,
”நாட்டுத்துப்பாக்கி புழக்கம் எல்லாம்
இந்தப் பகுதியில் சர்வசாதாரணம்.
சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருப்பது
குறித்து வழக்கு போடுவதென்றால்
கூத்தப்பாடி கிராம மக்கள் எல்லோர்
மீதும் பதிவு செய்யலாம்.
குடிசைத்தொழில் போல அவர்களே
நாட்டுத்துப்பாக்கி தயாரித்து
விடுவார்கள். காட்டுப்பகுதிக்குள்
மான், முயல் வேட்டைக்காக
எல்லோருடை வீடுகளிலும்
இதுபோன்ற உரிமம் இல்லாத
நாட்டுத்துப்பாக்கிகள் உண்டு.

 

இறந்தது வன்னியர் சமூகத்தைச்
சேர்ந்த பையன். இன்னும் தேர்தல்
நடத்தை விதிகள்கூட முடியாத நிலையில்,
இந்த வழக்கு சென்சிடிவ் ஆகிவிடக்கூடாது
என்பதற்காகத்தான் இரவோடு இரவாக
தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினோம்.
வெறும் பத்து அடி தூரத்தில்
இருந்துதான் சுட்டுருக்கான். அதுவுமில்லாம,
பாமகவினர் வேறு சடலத்தை வாங்க
மாட்டோம்னு திடீரென்று பிரச்னை
செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. அதனாலதான்
இந்த வழக்கில் நாங்களும் அவசரம்
காட்ட வேண்டியதாயிடுச்சு. சுற்றுலா
பயணிகள் மற்றும் தனிமையில்
ஒதுங்கும் இளம் ஜோடிகளை குறி வைச்சு
ஒரு கும்பல் ரொம்ப நாளாக
விளையாடிக்கிட்டு திரியறது தொடர்பாக
எங்களுக்கும் தகவல்கள்
கிடைக்காமல் இல்லை.
இப்போது அதுகுறித்தும் தீவிரமாக
விசாரித்து வருகிறோம்,” என்றார்.

இதுகுறித்து நாம் பென்னாகரம்
டிஎஸ்பி மேகலாவிடம் கேட்டபோது,
”கைது செய்யப்பட்டுள்ள செல்வத்தின் மீது
ஏற்கனவே ஏரியூர், பென்னாகரம்,
ஒகேனக்கல் காவல் நிலையங்களில்
சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாக
தலா ஒரு வழக்கு வீதம் மூன்று
வழக்குகள் விசாரணையில் உள்ளன.
கொலை செய்யப்பட்ட நபருடன்
வந்த சிறுமி, பாலியல் பலாத்காரம்
செய்யப்படவில்லை. அதேநேரம்
அவருக்கும் நக்சல்களுக்கும்
எந்த தொடர்பும் இல்லை.
நக்சல் தடுப்புப்பிரிவும் இதுகுறித்து
விசாரித்து இருக்கின்றனர். இந்த
வழக்கில் வேறு யார் யாருக்கு
தொடர்பு இருக்கிறது என்பது
அடுத்தக்கட்ட விசாரணையில்
தெரிய வரும்,” என்றார்.

 

– பேனாக்காரன்