Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கொரோனா: முழு ஊரடங்கு காலத்தில் சேலத்தில் எது எதற்கு அனுமதி?

சேலத்தில் மாநகர
பகுதிகளில் மட்டும் இன்று
(ஏப். 26) முதல் தொடர்ந்து
மூன்று நாள்களுக்கு
முழு ஊரடங்கு
நடைமுறைப்படுத்தப்பட்டு
உள்ள நிலையில், எந்தெந்த
சேவைகளுக்கு அனுமதி
வழங்கப்பட்டு உள்ளது
என்பதை மாவட்ட நிர்வாகம்
விளக்கமாக வெளியிட்டுள்ளது.

 

ஆரம்பத்தில் சளி, இருமல்,
தொண்டையில் வலி,
மூச்சுத்திணறல் போன்றவை
கொரோனா வைரஸ்
நோய்த்தொற்றுக்கான
அறிகுறிகளாக இருந்து வந்த
நிலையில், அண்மைய
முடிவுகளில் இந்த அறிகுறிகள்
இல்லாதோருக்கும் நோய்த்தொற்று
இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு
உள்ளது. கொரோனா
நோய்த்தொற்று சமூகப் பரவலாக
மாறி வருகிறதோ என்ற
மருத்துவத்துறையினரின் அய்யம்
காரணமாகவே, ஊரடங்கை
மேலும் கடுமையாக்கி
பரவலாக முழு ஊரடங்காக
அமல்படுத்தி இருக்கிறது
தமிழக அரசு.

 

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, ஏப். 25, 26 ஆகிய இரு நாள்கள் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வரும் செவ்வாய்க்கிழமை (ஏப். 28) இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமல்ப டுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

 

புறநகர் பகுதிகளைக் காட்டிலும், மாநகர பகுதிகளில் நோய்த்தொற்று அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்ததால் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறது மாவட்ட நிர்வாகம். மக்கள் அடர்த்தியும் இன்னொரு காரணமாக பார்க்கப்படுகிறது.

 

இது ஒருபுறம் இருக்க, முழு ஊரடங்கு என்பது இரண்டு நாள்களா அல்லது மூன்று நாள்களா? என்பதில் மக்களும் சற்று குழப்பம் அடைந்துள்ளனர். அதாவது, சேலம் மாவட்டத்தில் மாநகர எல்லைக்கு அப்பால் இருக்கும் புறநகர் பகுதிகளில் வரும் திங்கள் கிழமை (ஏப். 27) முதல் முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டு, இதற்கு முன்பு இருந்த சாதாரண ஊரடங்கு நிலை தொடரப்படும். புறநகர் பகுதிகளில் காய்கறி கடைகள், உழவர் சந்தைகள், மளிகை கடைகள், பேக்கரி கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்கும். இந்த தளர்வு என்பது, 60 வார்டுகளைக் கொண்ட மாநகராட்சி பகுதிகளுக்கு பொருந்தாது.

 

அதேநேரம், சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26) காலை 6 மணி முதல் வரும் செவ்வாய்க்கிழமை (ஏப். 28) இரவு 9 மணி வரை தொடர்ந்து மூன்று நாள்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முழு ஊரடங்கு என்றாலும்கூட குறிப்பிட்ட சில அத்தியாவசிய சேவைகளுக்கு எப்போதும்போல் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம்:

 

* மருத்துவமனைகள்,
மருத்துவ பரிசோதனைக்கூடங்கள்,
மருந்தகங்கள், ஆம்புலன்ஸ்,
அமரர் ஊர்தி சேவைகள்
எப்போதும்போல் இயங்கும்.

 

* அத்தியாவசிய பணிகளை
மேற்கொள்ளும் சுகாதாரம்,
குடும்பநலத்துறை, காவல்துறை,
வருவாய் மற்றும் பேரிடர்
மேலாண்மைத்துறை, மின்சாரத்துறை,
ஆவின், உள்ளாட்சிகள் மற்றும்
குடிநீர் வழங்கல் துறை
ஆகியவை குறைந்தபட்ச
பணியாளர்களுடன் இயங்கும்.

 

* மத்திய அரசு அலுவலகங்கள்,
வங்கிகளில் அத்தியாவசிய
சேவைகளுக்கு மட்டும் 33
சதவீத ஊழியர்களுடன்
இயங்கும்.

 

* அம்மா உணவகங்கள்,
தானியங்கி பணம் வழங்கும்
இயந்திரங்கள் (ஏடிஎம்)
எப்போதும் முழுமையாக
செயல்படும்.

 

* உணவகங்களில் வீடு
தேடிச்சென்று விநியோகம்
செய்யும் டோர் ஸ்டெப்
டெலிவரி சேவைக்கு மட்டும்
அனுமதி வழங்கப்படுகிறது.

 

* முதியோர், மாற்றுத்திறனாளி,
ஆதரவற்றோர் இல்லங்கள்,
முதியோருக்கு உதவி புரிவோர்
ஆகியோருக்கு அனுமதி
வழங்கப்படும்.

 

* ஆதரவற்றோருக்காக
மாவட்ட நிர்வாகங்கள்,
சமூக நலத்துறை மற்றும்
உள்ளாட்சித்துறை அமைப்புகளால்
நடத்தப்படும் சமுதாய
சமையல் கூடங்கள்
தொடர்ந்து செயல்படும்.

 

* ஏழைகளுக்கு உதவி
செய்யும் தொண்டு
நிறுவனங்கள், பிற
அமைப்புகள் சம்பந்தப்பட்ட
அரசு அலுவலரின் உரிய
அனுமதியுடன் இயங்கலாம்.

 

* மொத்த காய்கறி
சந்தைகள் உரிய விதிகளுக்கு
உட்பட்டு செயல்படும்.
அதேபோல் காய்கறி, பழங்கள்
போன்றவற்றை விற்பனை
செய்ய நடமாடும் கடைகள்
மட்டும் அனுமதிக்கப்படும்.

 

* சேலம் மாநகராட்சி
பகுதிகளில் முழு ஊரடங்கு
அமலில் உள்ள நாள்களில்
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட,
அதாவது பேக்கரிகள்,
மளிகைக்கடைகள் உள்ளிட்ட
பிற கடைகள் இயங்க
முற்றிலும் தடை
விதிக்கப்பட்டுள்ளது.

 

* பத்திரப்பதிவு அலுவலகங்கள்
உள்பட மற்ற அரசு அலுவலகங்கள்,
தனியார் நிறுவனங்கள்
இக்குறிப்பிட்ட நாள்களில்
செயல்படவும் தடை
விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.டி. நிறுவனங்களின்
ஊழியர்கள் வீட்டில்
இருந்தபடியே பணியாற்றுவதில்
எந்த தடையும் இல்லை.

 

* முழு ஊரடங்கு காலத்தில்
ஏற்கனவே மூடி “சீல்”
வைக்கப்பட்ட நோய்த்தடுப்பு
பகுதிகள் கடுமையான
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வரப்படும். இப்பகுதிகளில்
தினமும் இருமுறை கிருமி
நாசினி மருந்து தெளிக்கப்படும்.

 

மாநகர பகுதிகளில் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படும். இத்தடையை மீறி பொதுவெளியில் நடமாடினால், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

 

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும், தீவிரமாகவும் பரவும் கடும் நோய் என்பதால் இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு, சேலம் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

 

இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

 

– பேனாக்காரன்