Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

‘அதிமுக குரங்கு’: – நடிகர் ட்வீட்!

ஆளுங்கட்சியை சமீப காலமாக நடிகர் கமல்ஹாஸன் டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி கடுமையாக விமர்சித்து வருகிறார். அவர், ”தமிழர்கள் தலையில் இப்போது கோமாளி குல்லா” என்று டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இபிஎஸ் – ஓபிஎஸ் அணிகள் இணைப்பை பற்றிதான் அவர் இவ்வாறு கேலி செய்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

கமல்ஹாஸனை பின்பற்றி நடிகர் கஸ்தூரி, ஸ்ரீபிரியா, பார்த்திபன் ஆகியோரும் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அரசியல் கருத்துகளை ரத்தினச்சுருக்கமாக நையண்டி செய்து வருவது அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய டிவிட்டர் பக்கத்தில், ”கிளியை வளர்த்து யாரோ குரங்கு கையில் கொடுக்க – அந்த குரங்கை பிடித்து யாரோ மனிதன் கையில் கொடுக்க – அப்படி இன்றியமையா இணைப்பிற்குப் பின்!!!” என்று ட்வீட் செய்துள்ளார்.

மேலும், பார்த்திபனின் இடதுபக்க தோள்பட்டையில் ஒரு கிளி அமர்ந்து இருப்பதுபோலவும், அவருடைய கையில் ஒரு குரங்கு உட்கார்ந்து இருப்பது போலவும், அந்தக் கிளியை அவர் பார்ப்பது போலவும் ஒரு படமும் வெளியிட்டு இருக்கிறார்.

அதிமுக அணிகள் இணைப்பைப் பற்றித்தான் அவர் இவ்வாறு கிளி, குரங்கு என்று கேலியாக மறைமுகமாக கருத்து பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுகவின் சமீபத்திய செயல்பாடுகளைத்தான் அவர் இவ்வாறு சுட்டுகிறார் எனில், கிளி, குரங்கு, மனிதன் என்று உருவகப்படுத்தும் நபர்கள் யார் என்பதுதான் அதிமுகவினரிடையே இப்போது சர்ச்சைக்குரிய பேச்சாக நிலவுகிறது.