Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஓபிசி வங்கியில் ரூ.390 கோடி மோசடி; நகை வியாபாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு

டெல்லியில் உள்ள ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் 390 கோடி ரூபாய் கடன் பெற்று, தலைமறைவாகிவிட்ட நகை வியாபாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நீரவ் மோடி என்ற வைர நகை வியாபாரி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.11400 கோடி கடன் பெற்று மோசடி செய்திருப்பது தெரியவந்தது. புகார் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்.

இதன் பரபரப்பு அடங்குவதற்குள் ரோட்டோமேக் பேனா நிறுவனத் தலைவர் விக்ரம் கோத்தாரி, ஆறு பொதுத்துறை வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.800 கோடி கடன் பெற்று மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த மெகா மோசடி வரிசையில் இப்போது இணைந்திருக்கிறார் டெல்லியைச் சேர்ந்த மற்றொரு நகை வியாபாரி.

டெல்லியில் நகை வியாபாரம் செய்து வரும் சப்யா சேத், ரீடா சேத், கிருஷ்ணகுமார் சிங், ரவிகுமார் சிங் ஆகிய நான்கு பேரும் ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் வங்கியில் 390 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுள்ளனர்.

இவர்கள் நான்கு பேரும் கூட்டாக நகை வியாபாரம் செய்து வருகின்றனர். கடந்த 2007ம் ஆண்டு முதல் அவர்கள் ஓரியண்டல் வங்கியில் கடன் பெற்று வந்துள்ளனர்.

இந்நிலையில் அசல் மற்றும் வட்டி செலுத்தாமல் இருந்து வந்துள்ளனர். இது தொடர்பாக வங்கி நிர்வாகம் கடந்த 10 மாதங்களாக அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தும் தோல்வியில் முடிந்துள்ளது.

இதையடுத்தே, கடந்த 6 மாதங்களாக ஓரியண்டல் வங்கி சிபிஐயிடம் புகார்கள் அளித்துள்ளன. தற்போது அந்த புகாரின்பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஓரியண்டல் வங்கி, 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 16ல் சிபிஐ.,யிடம் புகார் கூறியது. சப்யா சேத்தின் தொழில் கூட்டாளிகள் பலர் துபாய் நாட்டில் இருப்பதும், அவர்களுடன் சப்யா சேத் தொடர்ந்து தொடர்பில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

விரைவில் அவர்களும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவார்கள் எனத்தெரிகிறது.