Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

எல்எஸ்டி எனும் எமன்! மாணவர்களை சீரழிக்கும் புதுவித போதை!!

மெட்ரோ நகரங்களில்
மேல்வர்க்கத்து இளைஞர்கள்,
கல்லூரி மாணவர்களிடையே
பரவி வரும் புதுவித போதை
கலாச்சாரம், தற்போது முதல்வர்
எடப்பாடி பழனிசாமியின் சொந்த
மாவட்டமான சேலத்திலும்
எட்டிப்பார்க்கத் தொடங்கி இருப்பது,
காவல்துறைக்கு கூடுதல் தலைவலியை
ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் மண்டல போதைப்பொருள்
தடுப்புப்பிரிவு டிஎஸ்பி
திருநாவுக்கரசுவுக்குக் கிடைத்த
ரகசிய தகவலின்பேரில்,
ஆய்வாளர் அம்பிகா தலைமையில்
காவலர்கள் தர்மபுரி மாவட்ட
எல்லையான தொப்பூர் சுங்கச்சாவடி
அருகே, அண்மையில் வாகனத்
தணிக்கையில் ஈடுபட்டனர்.
சந்தேகத்தின்பேரில், மோட்டார் சைக்கிளில்
வந்த இரு இளைஞர்களை தடுத்து,
அவர்களிடம் பையை சோதனை
செய்தபோது 2.60 கிலோ கஞ்சா
இருப்பது தெரிய வந்தது.
ஒரு இளைஞரின் பேன்ட் பாக்கெட்டில்
உள்ள பொருள்களை எடுத்து
சோதித்தபோது, அதில் தபால்தலை
வடிவத்தில் உள்ளங்கை
அளவிலான ஒரு அட்டையைக்
கைப்பற்றினர்.

சேலத்தில் பிடிபட்ட போதை ஸ்டாம்ப்

விசாரணையில்,
அது தபால்தலை வடிவிலான
போதைப்பொருள் என்பதை
அறிந்து காவல்துறையினர் அதிர்ச்சி
அடைந்தனர். சேலம் போதைப்பொருள்
தடுப்பு காவல்துறைக்கு, அந்த
வடிவிலான போதைப்பொருள்
பிடிபடுவது இதுதான் முதல்முறை
என்பதோடு, அப்படியான பொருளும்
சேலம் கள்ளச்சந்தையில் புழங்கி
வருவதும்கூட அவர்களுக்கு
புதிய தகவலாக இருந்தது.
பிடிபட்டவர்களில் ஒருவர்,
சேலம் சின்னத்திருப்பதியைச்
சேர்ந்த சரண் (22); மற்றொருவர்,
ஓமலூரைச் சேர்ந்த கோகுல் (25).

 

இவர்களில் கோகுல், பி.எஸ்சி.,
மல்டி மீடியா முடித்துவிட்டு,
பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில்
பணியாற்றி வந்திருக்கிறார். மற்றொரு
குற்றவாளியான சரண், பி.இ., மெக்கானிக்கல்
படித்துவிட்டு, ஜார்க்கண்ட் மாநிலத்தில்
திரிவேணி நிறுவனத்தில் பணியாற்றி
வந்துள்ளார். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட
தபால்தலை வடிவிலான பொருள்
‘எல்எஸ்டி எனப்படும்
(Lysergic Acid Dyethylamide)
‘லைசர்ஜிக் ஆசிட் டைஎத்திலமைடு’
என்ற தடை செய்யப்பட்ட
போதைப்பொருள் என்பது
தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறை
வட்டாரத்தில் விசாரித்தபோது,
”வழக்கமாக கஞ்சா, கொகெய்ன்,
அபின் போன்ற போதைப்பொருள்கள்
நடமாட்டம் தமிழகத்தில் இருக்கிறது.
எங்களுக்குக் கிடைக்கும் தகவலின்பேரில்
அத்தகைய போதைப் பொருள்களை
கண்டுபிடித்து பறிமுதல் செய்து வருகிறோம்.
ஆனால், எல்எஸ்டி போதைப்பொருள் பயன்பாடு
என்பது, கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான்
மெதுவாக எட்டிப்பார்க்கத் தொடங்கி இருக்கிறது.
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம்
சென்னை பள்ளிக்கரணை காவல்நிலையத்தில்
இதுபோன்ற எல்எஸ்டி பொருளை
விற்பனை செய்ததாக ஒருவர் கைது
செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு முன்பு
கோவையில் இதுபோல் ஒரு வழக்கு
பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 

இந்த வழக்குகளில் பிடிபட்ட எல்லோருமே 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்ற ஒற்றுமை மட்டுமின்றி, பெங்களூரு, கோவா, புனே நகரங்களில் இருந்து ஸ்டாம்ப் வடிவத்தில் எல்எஸ்டி போதைப்பொருளை வாங்கி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இப்போது சேலத்திலும் அதேபோன்ற வழக்கில் இருவர் பிடிபட்டுள்ளதைப் பார்க்கையில், தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, திருப்பூர், ஓசூர் போன்ற முக்கிய நகரங்களை குறிவைத்து ஒரு கும்பல் கள்ளச்சந்தையில் எல்எஸ்டி போதை வஸ்துவை புழக்கத்தில் விட்டு வருவதாக சந்தேகிக்கிறோம்,” என்கிறார்கள்.

 

சேலம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு டிஎஸ்பி திருநாவுக்கரசுவிடமும் பேசினோம்.

டிஎஸ்பி திருநாவுக்கரசு

”எங்களிடம் பிடிபட்ட கோகுல், சரண் இருவருமே நெருங்கிய நண்பர்கள். ரெண்டு பேருமே சாதாரண குடும்பத்து பசங்கதான். கைது செய்யப்படுவதற்கு நான்கு நாள்களுக்கு முன்புதான் அவங்க கோவாவுக்கு டூர் போயிருந்திருக்காங்க. அங்கே இருந்துதான் எல்எஸ்டி போதைப்பொருளை வாங்கி வந்ததாகச் சொன்னார்கள். பறிமுதல் செய்யப்பட்ட எல்எஸ்டி போதைப்பொருளின் மொத்த எடையே 0.400 கிராம்தான். எல்லாமே குட்டி குட்டி ஸ்டாம்ப் போல ஒரு அட்டையில் வைத்திருந்தனர். (செல்போனில் எடுக்கப்பட்ட படத்தைக் காண்பித்தார்).

 

ஒவ்வொரு போதை ஸ்டாம்பும் 1500 ரூபாய்க்கு விற்கப்படுவது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 30 ஆயிரம் மதிப்புள்ள 20 போதை ஸ்டாம்புகளை பறிமுதல் செய்திருக்கிறோம். சேலத்தில் சில கல்லூரி மாணவர்களிடம் விற்பதற்காகத்தான் வாங்கி வந்திருக்கிறார்கள்.

 

சம்பவத்தன்று காலை 7.30 மணியளவில் அவர்களை கைது செய்து, அன்று மாலையிலேயே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துவிட்டோம். நல்லவேளையாக ஆரம்பத்திலேயே அவர்களின் முயற்சியைத் தடுத்து விட்டோம்,” என்கிறார் டிஎஸ்பி திருநாவுக்கரசு.

 

நமது கள விசாரணையில், சேலத்தில் உள்ள மூன்று தனியார் கலை அறிவியல் கல்லூரி மற்றும் ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் படித்து வரும் வெளிமாநில மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் சிலருக்கு எல்எஸ்டி போதைப்பொருள் நுகரும் பழக்கம் இருந்து வருவதும், அவர்களிடம் பிடிபட்ட இரு இளைஞர்களும் ஒவ்வொரு போதை ஸ்டாம்பையும் தலா 2000 ரூபாய் வரை பேரம் பேசி விற்று வந்திருப்பதும் தெரிய வந்தது.

 

காவல்துறை தரப்பில் கேட்டபோது, இப்போதுதான் கோகுலும், சரணும் முதன்முதலாக இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுவதாகச் சொல்கிறார்கள். உண்மையில், போதை ஸ்டாம்ப் விற்பனையில் வேறு சில குழுக்களும், உள்ளூர் காவல்துறை ஆசியுடன் எவ்வித தடையுமின்றி உலா வந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்கிறார்கள் போதை உலகவாசிகள்.

 

ஹான்ஸ் புகையிலையை உதட்டை இழுத்து உள்ளே சொருகிக் கொள்வதுபோல எல்எஸ்டிக்கு மெனக்கெட வேண்டியதில்லையாம். எல்எஸ்டி பவுடர் தடவிய போதை ஸ்டாம்பை நாக்கில் ஒட்டிக்கொண்டால், அடுத்த 8 மணி நேரத்திற்கு அரை மயக்க நிலைக்குச் சென்று விடுவார்கள் என்கிறார்கள் இதன் வீரியம் அறிந்தவர்கள்.

 

எஸ்எல்டி போதைப்பொருளின் தன்மைகள் குறித்து சேலம் அரசு மருத்துவமனை மயக்கவியல் மருத்துவர் ஜோதி ஆனந்திடம் கேட்டோம்.

மருத்துவர் ஜோதி ஆனந்த்

”எல்எஸ்டி என்பது
முழுக்க முழுக்க போதைக்காகத்தான்
பயன்படுத்தப்படுகிறது. இதை
உட்கொண்டவர்கள், பிரமை
(ஹாலுசினேஷன்) பிடித்தவர் போல்
இருப்பார்கள். அந்தரத்தில்
பறப்பது போன்ற உணர்வு ஏற்படும்.
அந்தரத்தில் பறப்பது போன்ற
உணர்வென்பது சிலருக்கு மோசமான
பயணம் போலவும் அமைந்து விடும்.
எல்எஸ்டியின் இன்னொரு பிரச்னை
என்னவென்றால், இவ்வகை
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்
அதை உட்கொள்ளாதபோதும்கூட
போதையில் இருப்பதுபோலவே
உணர்வார்கள். பவுடர், ஊசி மருந்து
வடிவத்திலும் கிடைக்கிறது.

 

இந்த போதைக்கு அடிமையானவர்கள்
அதிலிருந்து மீண்டு வருவது கடினம்.
மது அருந்தினால் மற்றவர்களுக்கு
தெரிந்து விடும். இந்த வகை
போதையை எடுத்துக்கொண்டால்
யாருக்குமே தெரிய வராது.
யு.எஸ். போன்ற நாடுகளில் இவ்வகை
போதை பயன்பாடு அதிகம்.
இந்தியாவில் கூட வசதியான
வீட்டு பையன்கள், படிக்கும் காலத்தில்
இத்தகைய போதைக்கு அடிமையானதுண்டு.
ஆனால் சேலத்தில் எல்எஸ்டியுடன்
2 பேர் பிடிபட்டுள்ளனர் என்பதே
ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும்
இருக்கிறது,” என்றார்
மருத்துவர் ஜோதி ஆனந்த்.

 

‘விவசாயி மகன்’, கொஞ்சம் போதை விஷச்செடிகளையும் அகற்ற கவனம் செலுத்த வேண்டும் என்பதே எண்ணற்ற பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

 

– பேனாக்காரன்