Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சேலத்தில் ஒரு சாத்தான்குளம்; விவசாயியை அடித்துக் கொன்ற போலீஸ்!

சேலம் அருகே, குடிபோதையில் வந்த விவசாயியை காவல்துறை சிறப்பு எஸ்ஐ ஒருவர் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

முருகேசன்

சேலம் மாவட்டம் வாழப்பாடி
அருகே உள்ள எடப்பட்டி
புதூரைச் சேர்ந்தவர் முருகேசன் (45).
விவசாயி. இவரும், இவருடைய
நண்பர்கள் சிவன்பாபு, ஜெயசங்கர்
ஆகியோரும் ஒரே
மோட்டார் சைக்கிளில்
ஜூன் 22ம் தேதி மாலை
பாப்பநாயக்கன்பட்டி
சோதனைச்சாவடி
வழியாகச் சென்றனர்.

 

சோதனைச் சாவடியில் ஏத்தாப்பூர் காவல்நிலைய சிறப்பு எஸ்ஐ பெரியசாமி மற்றும் காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

சிறப்பு எஸ்ஐ பெரியசாமி

அப்போது முருகேசன்
உள்ளிட்ட மூன்று பேரும்
மது போதையில் இருந்துள்ளனர்.
வாகனத் தணிக்கையில்
ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர்
சிறப்பு எஸ்ஐ பெரியசாமி
மற்றும் காவலர்கள், முருகேசனிடம்
வாகனத்திற்கான ஆவணங்களைக்
கேட்டுள்ளனர். அதற்கு அவர்
ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனால் இரு தரப்புக்கும்
இடையே வாக்குவாதம்
ஏற்பட்டுள்ளது.

 

ஆத்திரம் அடைந்த
சிறப்பு எஸ்ஐ பெரியசாமி,
கையில் வைத்திருந்த மூங்கில்
பிரம்பால் முருகேசனை ரவுண்டு
கட்டி சரமாரியாக தாக்கினார்.

 

அவருடன் வந்த நண்பர்கள்,
அய்யோ… சார்… சார்…
அடிக்காதீங்க சார்…
விட்டுடுங்க சார்… என்று
கெஞ்சினர். அப்போதும்
அதை காதில் வாங்காத
எஸ்எஸ்ஐ பெரியசாமி,
அவரை தாக்கினார்.
போதையில் நிலை தடுமாறிய
முருகேசன் அங்கேயே
மயங்கி விழுந்தார்.
இதில் அவருடைய பின்
பக்கத் தலையில் ரத்த
காயம் ஏற்பட்டுள்ளது.

மயக்கம் அடைந்த அவருக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது மேல் சிகிச்சைக்காக ஜூன் 23ம் தேதி அதிகாலை சேலம் அரசு மருத்துவனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.

 

இதனால் அதிர்ச்சி அடைந்த
முருகேசனின் உறவினர்கள்,
அவரை தாக்கிய காவல்துறை
சிறப்பு எஸ்ஐ மற்றும் உடன்
இருந்த காவலர்கள் மீது
நடவடிக்கை எடுக்கக்கோரியும்,
நிவாரண நிதியுதவி,
அரசு வேலைவாய்ப்பு
வழங்கக்கோரியும் ஏத்தாப்பூர்
காவல்நிலையத்தை புதன்கிழமை
(ஜூன் 23) காலையில்
முற்றுகையிட்டு போராட்டம்
நடத்தினர்.

 

சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, மாவட்ட எஸ்பி அபிநவ் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும், முருகேசனை தாக்கிய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உறவினர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இந்த விவகாரம், அன்று தமிழக சட்டப்பேரவையிலும் எதிரொலித்தது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாயி முருகேசன் உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அந்த குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

 

முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.

 

அடுத்த சில நிமிடங்களில் முருகேசனின் உயிரிழப்புக்குக் காரணமான ஏத்தாப்பூர் சிறப்பு எஸ்ஐ பெரியசாமி மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரை பணியிடைநீக்கம் செய்தும் மாவட்ட எஸ்பி ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டார்.

 

கடந்த ஆண்டு ஜூன் 22ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினர் தாக்கியதில் ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர். அந்த சம்பவம் நடந்து முடிந்த ஒரே ஆண்டில் அதே நாளில், சேலம் மாவட்டத்திலும் காவல்துறையினர் தாக்குதலில் விவசாயி ஒருவர் உயிரிழந்திருப்பது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

மேலும், சம்பவத்தன்று காவல்துறையினர் முருகேசனை தாக்கும் காட்சிகளும் வாட்ஸ்ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதும் காவல்துறையினருக்கும், அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

 

இது ஒருபுறம் இருக்க, மனித உரிமை ஆணையம், இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி சேலம் சரக டிஐஜி மகேஸ்வரிக்கு உத்தரவிட்டுள்ளது.

 

கொரோனா ஊரடங்கால் சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் குறைவாக உள்ள தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மது போதைப் பழக்கம் உள்ளவர்கள் கள்ளச்சாராயம் வாங்கி குடிக்கின்றனர். மேலும், மதுபானத்தைத் தேடி மாவட்டம் விட்டு மாவட்டம் சென்றும் குடித்து வருகின்றனர்.

அதன்படி, மதுவுக்கு அடிமையான முருகேசனும் சம்பவத்தன்று கல்வராயன் மலையடிவாரத்தில் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்துவிட்டு பாப்பநாயக்கன்பட்டி சோதனைச் சாவடி வழியாக வந்தபோதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், நிதானம் இழந்து இருந்த முருகேசன் காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் பேசியதால்தான் தாக்குதல் வரை நடந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறுகின்றனர்.

 

உயிரிழந்த முருகேசனுக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

 

– பேனாக்காரன்