Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தண்டனை தீர்ப்பை திரும்பப்பெற வேண்டும்!: பேரறிவாளன் புதிய மனு

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை திரும்பப்பெற வேண்டும் என்று கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள் சி.பி.ஐ பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்திற்கு வந்திருந்தபோது ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

பேரறிவாளன்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில், வெடிகுண்டு தயாரிக்கும் சதித்திட்டத்தில் உடந்தையாக இருந்தார் என்பதே பேரறிவாளன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரி தியாகராஜன் ஒரு பிராமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், பேரறிவாளனிடம் அவர் விசாரிக்கும்போது, மனித வெடிகுண்டாக செயல்பட்ட தாணு பயன்படுத்திய பெல்ட் வெடிகுண்டுக்கு, தான் இரண்டு பேட்டரி வழங்கியதாக பேரறிவாளன் கூறியிருந்தார்.

ஆனால், அந்த பேட்டரியை வழங்கியபோது, அவற்றை என்ன காரணத்திற்காக, என்ன நோக்கத்திற்காக வழங்கினேன் என்று தனக்கு தெரியாது என்று பேரறிவாளன் தெரிவித்திருந்தாக தியாகராஜன் கூறியிருக்கிறார்.

பேட்டரிகள் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் என்பது பற்றிய காரணம் தெரியாமல் வழங்கப்பட்டு இருப்பதால், இந்த சதித்திட்டத்தில் அவருக்கு பங்கிருக்க வாய்ப்பில்லை என்றும் விசாரணை அதிகாரியாக இருந்தபோது, இதனை பற்றி விளக்கமாக நீதிமன்றத்திடம் நான் தெரிவிக்கவில்லை என்றும் தியாகராஜன் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருந்தார்.

பேரறிவாளன் முறையீடு:

இதையடுத்து, “தியாகராஜன் வழங்கிய பிரமாண பத்திரம் மிக முக்கியமான ஆவணம். இதனால் என்னுடைய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். எனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்” என்று பேரறிவாளன் மனு செய்திருந்தார்.

இந்த கோரிக்கை தொடர்பாக மத்தியப் புலனாய்வு துறை பதில் அளிக்க வேண்டும் என்று கடந்தமுறை நடந்த விசாரணயின்போது உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. நேற்று (ஜனவரி 23, 2018) மத்திய புலனாய்வு துறைக்குப் பதிலாக மத்திய அரசு ஒரு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது.

“இந்த சதித்திட்டத்தில் யார் யாருக்கு தொடர்பு என்பது பற்றி விசாரிக்க குழு ஒன்று அமைத்திருந்தோம். இந்த விசாரணை முடிவு எதுவும் இல்லாமல் நீண்டு கொண்டே சென்றதால், மேற்கொண்டு விசாரிக்கவில்லை. இதற்கு மேலும் விசாரிக்க வேண்டியதும் இல்லை” என்று அந்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இதனை விசாரித்தபோது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஈடுபட்டோருக்கு எந்தவித கருணையும் அளிக்கக்கூடாது என்று தெளிவாக சொல்லியிருக்கிறது.

தமிழக அரசுக்கு இவர்களின் தண்டனை காலத்தை குறைப்பதற்கு அதிகாரம் உள்ளதா என்பதை முடிவு செய்ய 3 நிதிபதிகள் குழு விசாரிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள்,” என்றும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த 3 நீதிபதிகள் குழு விசாரண நிலுவையில் இருக்கின்றபோது, இவரை விடுதலை செய்வதற்கு எந்தவொரு அனுமதியும் அளிக்கக்கூடாது. நீதிமன்றம் இந்த மனுவை நிராகரிக்க வேண்டும்” என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி, “இது மேலெழுந்தவாரியான ஒரு வாதமாக இருக்கிறது. ஆனால், சிபிஐ அதிகாரி தியாகராஜனின் பிரமாணப் பத்திரத்திற்கு நீங்கள் சரியாக பதில் சொல்லவில்லை.

தியாகராஜன் அளித்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றதா இல்லையா? சதித் திட்டத்தில் பேரறிவாளனுக்கு பங்கு இருக்கிறதா இல்லையா? என்பதை நீங்கள் தெளிவாக சொல்லவில்லை.

எனவே, இது பற்றிய விளக்கத்தை பிரமாணப் பத்திரமாக இல்லாமல், பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும். சிபிஐயும், மத்திய அரசும் இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

கடந்த முறை நடைபெற்ற விசாரணையில், சிபிஐ மூடிய உறையில் வைத்து தங்களுடைய அறிக்கையை அளித்திருந்தது. எனவே, அந்த அறிக்கையின் நகலை வழங்க வேண்டும் என்று பேரறிவாளன் தரப்பு வேண்டுகோள் வைத்தது.

ஆனால், அறிக்கை நகலை வழங்க முடியாது. நீதிமன்றத்திலேயே அந்த அறிக்கையை பரிசீலனை செய்யலாம் என்று நீதிமன்றம் கூறிவிட்டது.

எனவே, நீதிமன்றத்திலேயே இந்த மூடிய உறையில் இருந்த அறிக்கையை வாசித்தனர். இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை தேவையில்லை. இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதான நிலைப்பாட்டை சிபிஐ அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.
ஆனால், அதனை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.

“சிபிஐ அதிகாரி தியாகராஜனின் பிரமாணப் பத்திரத்திற்கு உட்பட்டு உங்களுடைய பதில் மனு அமைய வேண்டும். இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையாக ஜனவரி 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம்,” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன்.

அதனால், பேரறிவாளனுக்கு தண்டனையை நிறுத்தி வைப்பதோ அல்லது ஜாமீன் அளிப்பதோ இப்போது தேவையில்லை என்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.

சி.பி.ஐக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு:

இதையடுத்து, பேரறிவாளன் குறித்த வழக்கு மீண்டும் இன்று (ஜனவரி 24, 2018) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட பேரறிவாளன் தரப்பு, வாங்கிக்கொடுத்த பேட்டரிகள் எதற்காக பயன்படுத்தப்படும் என்று தனக்கு தெரியாது என்று விசாரணை அதிகாரி தியாகராஜனிடம் பேரறிவாளன் அளித்த வாக்குமூலம் குறித்து நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர்.

இந்த வாக்குமூலம் விசாரணையில் மறைக்கப்பட்டுள்ளது என்று விசாரணை அதிகாரி தியாகராஜன் தெரிவித்துள்ளதை குறிப்பிட்ட பேரறிவாளன் தரப்பு, வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது அந்த பேட்டரியிலிருந்துதானா என்பது தெளிவாக தெரியாத நிலையில், 1999 ஆம் ஆண்டு, மே 11 ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பு தவறு என்றும், அதை திரும்பப்பெற வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதற்கான பதிலை சி.பி.ஐ வரும் பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பேரறிவாளனின் மனு விசாரணைக்கு எடுக்கப்படும் பட்சத்தில், 1999 ஆம் ஆண்டு பேரறிவாளனுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு திரும்ப பெறப்படுமா என்பதை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்யும்.