Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

உடுமலை சங்கர் சாதி ஆணவ படுகொலை வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி அலமேலு நடராஜன் மரணம்!

உடுமலை சங்கர் சாதி ஆணவப் படுகொலை வழக்கில் அதிரடியான தீர்ப்பு அளித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த திருப்பூர் மாவட்ட நீதிபதி அலமேலு நடராஜன் உடல்நலக்குறைவால் இன்று (ஜனவரி 25, 2018) மரணம் அடைந்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கரும், பழனியைச் சேர்ந்த கவுசல்யா என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், கவுசல்யாவின் பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையை ஏவி சங்கரை பட்டப்பகலில் படுகொலை செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, திருப்பூர் மாவட்ட சாதி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் நடந்து வந்தது. மாவட்ட நீதிபதி அலமேலு நடராஜன் இந்த வழக்கை விசாரித்து வந்தார்.

ஒன்றரை ஆண்டுகள் தொடர்ந்து விசாரணை நடந்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், இரண்டு பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து அதிரடியான தீர்ப்பை வழங்கினார் நீதிபதி அலமேலு நடராஜன்.

சாதி ஆணவப்படுகொலைக்கு எதிரான முதல் தீர்ப்பு என்பதாலும், 6 பேருக்கு இரட்டை தூக்கு என்பதாலும் உலகம் முழுவதும் இந்த தீர்ப்பு குறித்து பெரும் கவன ஈர்ப்பை பெற்றது.

நீதிபதி அலமேலு நடராஜனுக்கு பல தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இனி வரும் காலத்தில் சாதி ஆணவப்படுகொலைக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்பதை அவருடைய தீர்ப்பு உறுதி செய்வதாக அமைந்தது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக கடுமையான காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவால் நீதிபதி அலமேலு நடராஜன் அவதிப்பட்டு வந்தார். கடந்த 22ம் தேதி இரவு, திருப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து சிறிது நேரத்தில் மீண்டும் அவர் கோயம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், நுரையீல் நோய் தொற்று காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று அவர் மரணம் அடைந்தார்.

நீதிபதி அலமேலு நடராஜனின் சொந்த ஊர், கோவை மாவட்டம் போத்தனூர். பள்ளிப்படிப்பை திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளியிலும், சட்டப்படிப்பை திருச்சி அரசு சட்டக்கல்லூரியிலும் முடித்துள்ளார்.

பின்னர், 1991ம் ஆண்டு நீதித்துறை மாஜிஸ்ட்ரேட் ஆக பணியில் சேர்ந்தார். 2015ம் ஆண்டு, திருப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். உடுமலை சங்கர் வழக்கை விசாரிப்பதற்காக சாதி வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அதன் முதல் சிறப்பு நீதிபதியாக பொறுப்பேற்று, சாதி ஆணவப் படுகொலை வழக்கில் அதிரடியான தீர்ப்பை வழங்கினார்.

சட்டத்தின்படியும், மனிதாபிமானத்தின்படியும் நேர்மையாக தீர்ப்பு வழங்குவதில் கெட்டிக்காரர் என சக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவருடைய மறைவுக்கு பலர் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, பலர் அவரின் சிறந்த செயல்பாடுகளை பாராட்டி புகழாரமும் சூட்டியுள்ளனர்.

நீதிபதி அலமேலு நடராஜனின் திடீர் மரணம், நீதித்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு ஆகும்.