Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மல்லசமுத்திரம்: திமுக கவுன்சிலரின் கணவரை காரில் விரட்டிச்சென்று கொல்ல முயற்சி! முன்னாள் ஊழியர் உள்பட 7 பேர் மீது புகார்!!

மல்லசமுத்திரம் அருகே,
திமுக ஒன்றிய கவுன்சிலரின்
கணவரை, அவருடைய முன்னாள் 
ஊழியர் உள்பட 7 பேர் காரில் 
விரட்டிச்சென்று அடித்துக் கொல்ல
முயன்ற சம்பவம் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முருகேசன்

நாமக்கல் மாவட்டம்
மல்லசமுத்திரம் அருகே உள்ள
அவினாசிப்பட்டி காலனியை
சேர்ந்தவர் முருகேசன் (50).
திமுக பிரமுகர். இவருடைய
மனைவி தமிழ்ச்செல்வி. இவர்,
மல்லசமுத்திரம் ஒன்றியக்குழு திமுக
கவுன்சிலராக உள்ளார்.

 

முருகேசன், சொந்த ஊரில்
பேப்பர் கோன் தயாரிக்கும் ஆலை
நடத்தி வருகிறார். மேலும், தனியார்
நிறுவனங்களுக்கு தேவையான
வடமாநில தொழிலாளர்களை
ஒப்பந்தத்தின்பேரில் பணிக்கு
அமர்த்தும் மேன்பவர் கன்சல்டசன்சி
நிறுவனமும் நடத்தி வருகிறார்.

 

இவரிடம், மோர்பாளையம்
அருகே உள்ள ராமாபுரத்தைச் சேர்ந்த
சரவணன் என்ற வாலிபர்,
கார் ஓட்டுநராகவும், மேலாளராகவும்
7 ஆண்டுகளாக வேலை
செய்து வந்தார்.

 

அவுட்சோர்சிங் மூலம் பணிக்கு
அமர்த்தப்படும் தொழிலாளர்களின்
வருகையை குறைத்து காண்பித்து,
பல லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி
செய்ததால் சரவணனை, கடந்த
4 ஆண்டுக்கு முன்பு வேலையில்
இருந்து நிறுத்தி விட்டார்.

 

இதையடுத்து முருகேசனுக்கு
போட்டியாக அவரும் மேன்பவர்
கன்சல்டன்சி தொழில் தொடங்கி
செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, சரவணன் தன்னிடம்
வேலை செய்தபோது அவருக்கு முருகேசன்
5 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.
அந்தப் பணத்தில் 2.70 லட்சம் ரூபாய்
திருப்பிக் கொடுத்துள்ளார்.
மீதம் 2.30 லட்சம் ரூபாயை
திருப்பித் தருமாறு முருகேசன்
அவரிடம் கேட்டு வந்துள்ளார்.

 

இது ஒருபுறம் இருக்க,
சரவணனிடம் வேலையில் இருந்த
வடமாநில தொழிலாளர்கள் சிலர்,
முருகேசனிடம் வேலைக்குச் சென்றுவிட்டதாக
சொல்லப்படுகிறது. இது தொடர்பாக
அவர்களுக்குள் மோதல்
இருந்து வந்தது.

 

இந்நிலையில்,
கடந்த திங்கள்கிழமை (பிப். 8),
ஒரு வேலையாக திருச்செங்கோடு
சென்றிருந்த முருகேசன்,
மாலை 6 மணியளவில் காரில்
வீடுக்குச் சென்று கொண்டிருந்தார்.

 

மோர்பாளையம் சந்தை அருகே
வந்தபோது, பின்தொடர்ந்து
காரில் வந்த 7 பேர் கும்பல் முருகேசனை
காரை வழிமறித்து நின்றது. அந்த காரில்
இருந்து சரவணன், ராமாபுரத்தைச்
சேர்ந்த தினேஷ், சதீஸ்கர் மாநிலத்தைச்
சேர்ந்த ரமேஷ் உள்பட 7 பேர்
‘திபுதிபு’வென இறங்கினர்.
முருகேசனை காரை விட்டு
கீழே இறங்காதபடி தடுத்துக்
கொண்டனர்.

 

அப்போது சரவணன்,
தன்னிடம் வேலைக்கு வந்த
ஆள்களை நீ எப்படி உன்பக்கம்
இழுக்கலாம் எனக்கேட்டுள்ளார்.
அதற்கு முருகேசன், தொழிலாளர்கள்
விருப்பத்தின் பேரில்தான்
தன்னிடம் வேலைக்கு சேர்ந்ததாக
கூறியுள்ளார். மேலும், கடனை
திருப்பிக் கேட்டதற்கும்
சரவணன் மிரட்டியுள்ளார்.

 

ஒருகட்டத்தில்,
ஆத்திரம் அடைந்த அவர்,
செருப்பு காலாலேயே முருகேசனை
காருக்குள் வைத்து சரமாரியாக
எட்டி உதைத்துள்ளார். சரவணனும்,
கூட்டாளிகளும் கொலை
மிரட்டலும் விடுத்துள்ளனர்.
மோர்பாளையம் சந்தையில்
இருந்த பொதுமக்கள்,
முருகேசனுக்கு ஆதரவாக
கூடியதால், அந்த கும்பல்
அங்கிருந்து தப்பி ஓடியது.

 

இதுகுறித்து முருகேசன்,
பிப். 9ம் தேதி மல்லசமுத்திரம்
காவல்நிலையத்தில் புகார்
அளித்தார். முதல்கட்டமாக
சரவணனை அழைத்து
விசாரித்துள்ளனர். புகார் அளித்து
இரண்டு நாள் ஆகியும் எப்ஐஆர்
பதிவு செய்யாமல் காவல்துறையினர்
காலம் கடத்தி வருவதோடு,
புகாரை திரும்பப் பெறுமாறு
முருகேசனிடம் வற்புறுத்துவதாகவும்
சொல்லப்படுகிறது.

 

இந்த விவகாரம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர்
மெகராஜின் கவனத்துக்கும்
சென்றுள்ளது. மல்லசமுத்திரம்
காவல்துறையினர் மட்டுமின்றி
திருச்செங்கோடு டிஎஸ்பி
அசோக்குமாரும் விசாரணை
நடத்தி வருகிறார்.

 

தாக்கப்பட்ட முருகேசன்,
கொரோனா ஊரடங்கு காலத்தில்
மோர்பாளையம், மல்லசமுத்திரம்
சுற்றுவட்டார கிராம மக்களுக்கு
சொந்த செலவில் 20 லட்சம்
ரூபாய்க்கு காய்கறிகளை
வீடு வீடாக ஒரு மாதம்
இலவசமாக தொடர்ந்து
வழங்கினார்.

 

மேலும், ராசிபுரம் அருகே
அணைப்பாளையத்தைச் சேர்ந்த
2 சிறுமிகளை உள்ளூரைச் சேர்ந்த
12 பேர் கும்பல் பாலியல்
பலாத்காரம் செய்து சீரழித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிகளையும்,
குடும்பத்தினரையும் மாவட்ட
ஆட்சியர் முன்னிலையிலேயே
தத்தெடுத்துக் கொள்வதாக
முருகேசன் உறுதி அளித்து
இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மீதான தாக்குதல்,
மோர்பாளையம் வட்டாரத்தில்
பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.