Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

“எங்களோட உசுர வேணும்னாலும் விட்டுடுவோம்… நிலத்தை விட்டுத்தர மாட்டோம்!”; விசாரணை அதிகாரிகள் முன்பு விவசாயிகள் போர்க்கொடி!

”எங்களோட உசுரகூட விட்டுடுவோமே ஒழிய, எட்டு வழிச்சாலைக்காக விளை நிலத்தை விட்டுத்தர மாட்டோம்,” என்று விவசாயிகள் இன்று மீண்டும் போர்க்கொடி உயர்த்தியதால், சட்டப்பூர்வ விசாரணை அரங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

சென்னை – சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டு வழிச்சாலைத் திட்டம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சேலம் மாவட்டத்தில் மட்டும் 18 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து 248 ஹெக்டேர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

விவசாயிகளிடம் விசாரணை நடத்தும் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார்.

ஆரம்பத்தில் இருந்தே எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்காக கால் அங்குலம் நிலத்தைக்கூட விட்டுக்கொடுக்க முடியாது என்று விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் சேலம் மாவட்ட வருவாய்த்துறையோ, நிலம் கையகப்படுத்த வேண்டிய பகுதிகளின் சர்வே எண்களை பத்திரிகைகள் மூலம் அறிவிக்கை வெளியிட்டு, சேட்டிலைட் தொழில்நுட்பத்துடன் நேரடியாக விளை நிலங்களில் ஆள்களை இறக்கி அளவைப்பணிகளை மேற்கொண்டது.

 

ஆங்காங்கே விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அவர்களை காவல்துறையினர் மூலம் ஒடுக்கியது. சொந்த நிலத்துக்குள் அத்துமீறிய காவல்துறை, வருவாய்த்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மூதாட்டிகள், இளைஞர்கள் என்றும் பாராமல் பல இடங்களில் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று சிறையில் அடைத்தது காவல்துறை.

 

நிலங்களை அளந்து முட்டுக்கல் நடப்பட்ட பின்னர், தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1956, பிரிவு 3 (சி) (1)ன் படி, ஏற்கனவே சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் பெறப்பட்ட ஆட்சேபனை மனுக்கள் மீது மூன்று கட்டங்களாக சட்டப்பூர்வ விசாரணையை வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

முதல்கட்டமாக, ஜூலை 6ம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஜூலை 10ம் தேதியும் சட்டப்பூர்வ விசாரணை நடந்தது. இறுதி மற்றும் மூன்றாம் கட்ட சட்டப்பூர்வ விசாரணை, சேலம் மணியனூரில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 13, 2018) நடந்தது.

 

உடையாப்பட்டி (18 பட்டாதாரர்கள்), எருமாபாளையம் (35 பட்டாதாரர்கள்), கெஜல்நாயக்கன்பட்டி (16), நாழிக்கல்பட்டி (47), நிலவாரப்பட்டி (26), பாரப்பட்டி (37), சித்தனேரி (11), உத்தமசோழபுரம் (10), அக்ரஹாரம் பூலாவாரி (37) என மொத்தம் 237 பட்டாதாரர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு இருந்தது.

 

விவசாயிகளிடம் மாவட்ட வருவாய் அலுவலரும், நில எடுப்பு அதிகாரியுமான சுகுமார் தனித்தனியாக ஆட்சேபனை மனுக்கள் மீது விசாரணை நடத்தினார்.

விவசாயி சின்னத்தம்பி, அவருடைய மனைவி அம்மாசி

எருமாபாளையத்தைச் சேர்ந்த சில விவசாயிகள், ”மாவட்ட ஆட்சியர் ரோகிணி, ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 9 கோடி வரை இழப்பீடு கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். அவர் சொன்னபடியோ அல்லது இப்போதைய சந்தை மதிப்புக்கு இணையாகவோ இழப்பீடு கிடைத்தால் நிலத்தைக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்,” என்று தங்கள் ஆட்சேபனை மனுவில் கைப்பட எழுதிக் கொடுத்தனர்.

 

சில விவசாயிகள், தங்கள் வீட்டில் படித்த பிள்ளைகள் இருப்பதால் அவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று முறையிட்டனர். அதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், அரசு வேலை தர முடியாது. வேண்டுமானால் அரசு வேலையில் சேர்வதற்கான முன்னுரிமை சான்றிதழ் தரலாம் என்று கூறி, அதற்கான பரிந்துரையை கோப்புகளில் குறிப்பாக எழுதினார்.

 

கணவரை இழந்த கைம்பெண் ஒருவர், ”தனக்குச் சொந்தமாக இருக்கும் ஒரு ஏக்கர் நிலமும் எட்டு வழிச்சாலையால் பறிபோகிறது. இதனால் எங்கள் வாழ்வாதாரமே பாதிக்கிறது,” என்று கண்ணீர் மல்கக் கூறினார். அவருக்கு உடனடியாக விதவை உதவித்தொகை கிடைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

இதற்கிடையே பூலாவரி, சித்தனேரி, பாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, நிலவாரப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், சட்டப்பூர்வ விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை என்றும், நிலம் கொடுக்க விருப்பம் இல்லை என்றும் ஆட்சேபனை மனுவில் எழுதிக் கொடுத்தனர்.

 

பூலாவரியைச் சேர்ந்த விவசாயி சின்னத்தம்பி அவருடைய மனைவி அம்மாசி ஆகியோர் கூறுகையில்,

 

எங்கள் நிலம் முக்கால் ஏக்கர் நிலம் இருக்குங்க. எட்டு வழிச்சாலையால் இந்த நிலம் பறிபோவுதுங்க. என்னோட ரெண்டு பசங்களும் பெட்ரோல் பங்குல வேல செய்யுறாங்க. நாளைக்கு அவங்களுக்கு ஒரு வீடு கட்டணும்னாகூட எங்களுக்குனு நிலம் இல்ல. ஆடு, மாடுகள வெச்சிட்டுக்கு எங்க போவோம். நிலம் கவுருமென்டுக்கு சொந்தம்னு சொல்றாங்க. அப்போ ஜனங்க கவுர்மென்டுக்கு சொந்தம் இல்லையா? சனங்க சாக வேண்டியதுதானா?

விவசாயி சக்திவேல், அவருடைய மனைவி செல்வி

இருக்கற நாலு வழிச்சாலையை பெருசாக்கினால்கூட பரவாயில்லீங்க. இந்த எட்டு வழிச்சாலையை போட்டு யாருங்க சென்னைக்குப் போகப்போறாங்க? பெரிய பெரிய பணக்காரங்க வேணும்னா போவாங்க. எங்களோட முக்கால் ஏக்கரும் போச்சுனா அவ்வளவுதான். நாங்க எங்கங்க போறது? எல்லாரும் சாக வேண்டியதுதான்.

 

எங்கள கொன்னுப் போட்டுட்டு நிலத்தை எடுத்துக்கலாம். நாங்க சாவறத தவிர வேற கதியே கிடையாது. எங்க கிணறும் போகுது. இன்னுக்கு விசாரணைனு கூப்பிட்டாங்க. எங்ககிட்ட நிலம் கொடுக்க விருப்பமா இல்லையானு மட்டும்தான் கேட்டாங்க. இல்லைனு சொன்னதும், அப்படீனா மேலே போய் கையெழுத்துப் போட்டுட்டுப் போங்கனு வெளியே அனுப்பிட்டாங்க.

 

ஏற்கனவே விவாசாயிங்க தானாக முன்வந்து நிலம் கொடுப்பதாக சொல்றாங்க. இப்போ எங்ககிட்ட கையெழுத்து போடுன்னு சொன்னா, அது எதுக்கு என்னனு விளக்கம் சொல்ல மாட்டேங்கறாங்க. நாங்க படிக்காதவங்க… எங்களுக்கு ஆதரவுனு யாரும் இல்ல. என்னனு கண்டு கையெழுத்துப் போட முடியும்?. கருத்து சொல்லுங்கனு கூட்டிட்டு வந்தாங்க… இங்க வந்தா எங்க கருத்த கேட்க யாருமில்ல.

 

குடும்பத்தோடு விஷத்த குடிச்சு செத்தாதானே ஒழிய, அந்த காட்டை விட்டுட்டு எங்களால எங்கேயும் போய் வாழ முடியாது. இன்னிக்கு இருக்கற விலைவாசியில அரசாங்கம் கொடுக்கற காச வெச்சிக்கிட்டு 100 அடி நிலம்கூட வாங்க முடியாது. எட்டு வழிச்சாலையில ரெண்டு பக்கமும் சுவர் கட்டிட்டாங்கனா நாங்க எப்படி அந்தாண்ட இந்தாண்ட போக முடியும்?. விளை நிலத்தை பூராவும் எடுத்துப்புட்டா என்னாத்தக் கண்டு நீங்க சாப்பிடுவீங்க…?,” என்றனர்.

 

விவசாயி சக்திவேல், அவருடைய மனைவி செல்வி ஆகியோர் கூறுகையில், ”ஜூலை 13ம் தேதி ஆட்சேபனை தெரிவிக்கலாம் என்று சொல்லிவிட்டு, அதற்கு முன்பே இரண்டு முறை எங்கள் நிலத்தை அதிகாரிகள் அளந்துட்டுப் போய்ட்டாங்க. அப்புறம் எதற்கு இந்த சட்டப்பூர்வ விசாரணை? இது தேவையே இல்லையே? நாங்கள் உசுரகூட விட்டுடுவோமே தவிர, எட்டு வழிச்சாலைக்காக எங்களோட விவசாய நிலத்தை விட்டுத்தர மாட்டோம். இனிமேலும் அதிகாரிகள் எங்கள் நிலத்துக்குள் வரக்கூடாது,” என்றனர்.

 

இன்று நடந்த சட்டப்பூர்வ விசாரணையில், அழைப்பாணை அனுப்பப்பட்ட பட்டாதாரர்களில் 126 பேர் விசாரணைக்கு ஆஜராகினர். 111 பேர் விசாரணைக்கு வரவில்லை. இன்றுடன், நில எடுப்புக்கான ஆட்சேபனை மனுக்கள் மீதான சட்டப்பூர்வ விசாரணை நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.