Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழகத்தில் ஏப். 20 முதல் இரவு நேர ஊரடங்கு; ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கம்!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், வரும் ஏப். 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தி உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 500க்கும் கீழே குறைந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் காலத்தில் மீண்டும் தொற்றின் வேகம் முன்பை விட அதிகரித்தது.

பொதுமக்கள் முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது, கட்டுப்பாடின்றி பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக கூடியது உள்ளிட்ட காரணங்களால் கொரோனா இரண்டாவது அலையின் பரவல் வேகமெடுத்துள்ளது.

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்றின் தாக்கம் 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது, தமிழக அரசை அதிர்ச்சி அடையச் செய்துள்ள நிலையில், சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏப். 18ம் தேதி விரிவான ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில், முதல்கட்டமாக ஏப். 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கத்தையும் கொண்டு வர முடிவெடுக்கப்பட்டது.

 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

இரவு நேர ஊரடங்கு:

 

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின்போது தனியார், பொதுப்போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.

தமிழகத்தில் இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் உள்ளதால், வெளி மாநிலம், மாவட்டங்களுக்கு இடையேயான பொதுப்போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்தும் மேற்கூறிய காலக்கட்டத்தில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை செயல்பட அனுமதி இல்லை.

மாநிலங்களுக்கு இடையேயான பொது, தனியார் பேருந்து சேவைகளின்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

எனினும், அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமான நிலையம், ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் (பெட்ரோல், டீசல், எல்பிஜி) உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் இரவு நேர ஊரடங்கின்போது அனுமதிக்கப்படும்.

பெட்ரோல், டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்படும்.

தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், இந்நிறுவனங்களில் இரவு நேரப்பணிக்கு செல்லும் பணியாளர்களும் தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணியாளர்களும் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டில் இருந்து பணியிடத்திற்குச் சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.

 

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு:

 

மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அன்றைய தினம் இறைச்சிக்கடைகள், மீன் சந்தைகள், காய்கறி கடைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், அனைத்துக் கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது. இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

எனினும், அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக்கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் உள்ளிட்ட மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருள்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள், எரிபொருள்களை கொண்டு செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின்போது அனுமதிக்கப்படும்.

 

உணவகங்களுக்கு கட்டுப்பாடு:

 

முழு ஊரடங்கு நாள்களில் உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், பல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

ஸ்விக்கி, சொமோட்டா போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மற்ற மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி இல்லை.

ஊடகம், பத்திரிகை துறையினர் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றலாம்.

தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

முழு ஊரடங்கு அமலில் உள்ள நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் திருமணம், அதைச் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம். இறப்பு மற்றும் அதைச் சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளலாம். இந்நிகழ்வுகளில், ஏற்கனவே கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்து கொள்வதற்கும் எந்தவித தடையுமில்லை.

 

சுற்றுலா தலங்கள் மூடல்:

 

நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும், உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாள்களிலும் தடை விதிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாள்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாள்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

 

வீட்டில் இருந்தே வேலை:

 

தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும் வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (ஜவுளி, நகை) ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

 

கோயில் விழாக்களுக்கு தடை:

 

கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே குடமுழுக்கு, திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்தாலோ முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ, கோயில் பணியாளர்கள், கோயில் நிர்வாகத்தினருடன் பொதுமக்கள் 50 நபர்களுக்கு மேல் மிகாமல் கலந்து கொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த அனுமதிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, புதிதாக குடமுழுக்கு, திருவிழாக்கள் நடத்த தற்போதைய சூழ்நிலையில் அனுமதி இல்லை.

 

பிளஸ்2 பொதுத்தேர்வு தள்ளிவைப்பு:

 

பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. எனினும், அவர்களுக்கான செயல்முறைத் தேர்வு மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்.

கல்லூரி, பல்கலை ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியாக வகுப்புகளை எடுக்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் கல்லூரி, பல்கலை தேர்வுகள் இணைய வழியாக மட்டுமே நடத்தப்பட வேண்டும்.

கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுகிறது.

கோடைக்கால முகாம்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் உடைய தனியார் மருத்துவமனைகளுடன், விருப்பப்படும் தங்கும் விடுதிகள் இணைந்து கோவிட் பாதுகாப்பு மையங்களாக செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இதனை சுகாதாரத்துறை ஆய்வு செய்து, தேவைப்படும் அனுமதியை வழங்கலாம். இத்தங்கும் விடுதிகளில் பிற வாடிக்கையாளர்களை தங்க வைக்கக்கூடாது.

 

கடும் நடவடிக்கை:

 

நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற திருமண மண்டப நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் மண்டப உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும் கொரோனா தடுப்பு நிலையான நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

 

ஆக்ஸிஜன் இருப்பு:

 

மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் இருப்பை போதுமான அளவு இருப்பு வைக்க கூடுதலாக தமிழ்நாட்டிலேயே அதன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அதனை உற்பத்தி செய்ய முன்வரும் தொழிற்சாலைகளுக்கு உடனடியாக தற்காலிக உரிமம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க தொழில்துறைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அரசு ஊரடங்கை அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால்தான் நோய் பரவலை தடுக்க முடியும். அரசின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.