Tuesday, March 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது

அரசுப் பேருந்து பயணக் கட்டணத்தை திடீரென்று உயர்த்தி தமிழக அரசு இன்று (ஜனவரி 19, 2018) இரவு உத்தரவிட்டுள்ளது. புதிய கட்டண உயர்வு நாளை முதல் அமலாகிறது.

தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள், ஊதிய உயர்வு, சேமநலநிதி உள்ளிட்ட பணப்பலன்களை உடனடியாக வழங்கக்கோரி போகி பண்டிகைக்கு முதல் வரை தொடர்ந்து ஐந்து நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

அவர்களுக்கு முதல்கட்டமாக 750 கோடி ரூபாய் பணப்பலன்களை ஒதுக்கி அரசு அறிவித்ததை தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டனர்.

அந்தப் போராட்டத்திற்கு சில நாள்களுக்கு முன்பிருந்தே அரசுப்பேருந்துகளின் பயணக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான பேச்சுகள் உலா வந்தன. போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக கட்டண உயர்வு அறிவிப்பு தாமதம் ஆனது.

இந்நிலையில், அரசுப் பேருந்து பயணக் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி தமி-ழக அரசு இன்று அறிவித்துள்ளது. போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று இரவு 7.30 மணியளவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

போக்குவரத்துக் கழகங்கள் நாளொன்றுக்கு 9 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாகவும், அதனால் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.

புதிய கட்டண விவரம்:

  • சாதாரண பஸ் கட்டணம் புறநகர் ரூ.5 லிருந்து ரூ.6 ஆக உயர்வு
  • விரைவு பஸ் கட்டணம் ரூ.17 லிருந்து 24 ஆக உயர்வு
  • அதிநவீன பஸ் கட்டணம் குறைந்த பட்ச கட்டணம் ரூ.21 லிருந்து ரூ.30 ஆக உயர்வு
  • அதி நவீன சொகுசு பஸ் கட்டணம் ரூ.21 லிருந்து ரூ.33 ஆக உயர்வு
  • பைபாஸ் ரைடர் பஸ் கட்டணம் (புறவழிச்சாலை 30 கி.மீ) ரூ.18 லிருந்து ரூ.27 ஆக உயர்வு
  • மாநகர பஸ் அதிகபட்ச கட்டணம் ரூ.12 லிருந்து ரூ.19 ஆக உயர்வு
  • சென்னை நீங்கலாக நகர பஸ் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5, அதிகபட்ச கட்டணம் ரூ.19
  • வால்வோ பஸ் கட்டணம் ரூ.33 லிருந்து ரூ.51 ஆக உயர்வு
  • ஏ.சி. பஸ் கட்டணம் குறைந்த பஸ் கட்டணம் ரூ.25, அதிகபட்ச கட்டணம் ரூ.150

தனியார் பஸ் கட்டணமும் உயர்கிறது

இந்த பஸ் கட்டண உயர்வு நாளை (ஜன.20) முதல் அமலுக்கு வருகிறது. தனியார் பேருந்துகளுக்கும் இந்த புதிய கட்டண உயர்வு பொருந்தும்.

காரணம் என்ன?

தொழிலாளர் ஊதிய உயர்வு, ஒய்வூதிய ஊதிய உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, பராமரிப்பு செலவு உள்ளிட்ட , தவிர்க்க முடியாத காரணங்களுக்காக பேருந்து பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பி்ல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.