Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஏற்காட்டில் கோடை விழா, மலர்க்கண்காட்சி தொடங்கியது; 5 நாள்கள் நடக்கிறது

 

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்றான சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, ‘ஏழைகளின் ஊட்டி’, ‘மலைகளின் அரசன்’ என்று அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் மே மாதம் கடைசி வாரத்தில் கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு முன்னதாகவே அதாவது மே மாதம் இரண்டாவது வாரத்திலேயே கோடை விழா நடத்துவதற்கான ஆயத்தப்பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது.

 

 

அதன்படி, ஏற்காட்டில் 43வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று (மே 12, 2018) தொடங்கியது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழாவைத் தொடங்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டார்.

 

 

கோடை விழாவையொட்டி 24 ஆயிரம் கார்னேசன் மலர்கள், பல வண்ண ரோஜாக்கள் உள்பட ஒரு லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தமிழ்நாடு தலைமைச் செயலக அமைப்பு, சேலத்தில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் மலர்களால் அமைக்கப்பட்ட விமான வடிவம்;

 

 

உழவர்களுக்கு அரசு வழங்கும் சேவையைக் குறிக்கும் வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட டிராக்டர், குழந்தைகளைக் கவரும் மோட்டு, பட்லு கார்ட்டூன் பாத்திர வடிவங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கார்னேசன், ஆந்தூரியம், ஜெர்பிரா, மேரிகோல்டு, ஸ்பேத்திபில்லம், கோழிக்கொண்டை, ஜினியா, பீஸ்லில்லி, சால்வியா, பெகோனியா உள்ளிட்ட 10 ஆயிரம் அரிய வகை, கண்களை கவரும் மலர்த்தொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.

 

 

இந்தக் கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி வரும் 16ம் தேதி வரை 5 நாள்கள் நடக்கிறது.

வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வனத்துறை மற்றும் பலதுறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சாதனை விளக்க அரங்குகள், மலர்களால் ஆன வடிவங்களை முதலமைச்சர் பார்வையிட்டார்.

 

 

தொடக்க விழாவையொட்டி மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனம், கால் கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கதகளி நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

 

 

கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் ஏற்காட்டில் இதமான சூழல் நிலவுகிறது.

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர்.

 

 

இந்த விழாவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன், துரைக்கண்ணு, எம்பிக்கள் பன்னீர்செல்வம், காமராஜ், சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.

 

– பேனாக்காரன்