Saturday, April 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கருவை சிதைத்து… முடியை மழித்து… காதல் தம்பதி கொடூர ஆணவக்கொலை! அடங்காத சாதித்திமிர்!!

 

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞனை கைப்பிடித்த ஒரே குற்றத்திற்காக பெற்ற மகளென்றும் பாராமல் இளம்பெண்ணின் தலைமுடியை மழித்தும், வயிற்றில் வளர்ந்த ஒன்றரை மாத கருவை உருக்குலைத்தும், அரிவாளால் வெட்டியும் ஓசூர் அருகே கொடூரமாக அரங்கேறி இருக்கிறது சாதி ஆணவக்கொலை.

 

காவிரி ஆற்றில் சடலம்

 

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம், சிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சி அருகே உள்ள காவிரி ஆற்றில் ஒரு வாலிபரின் சடலமும், இளம்பெண் சடலமும் வெள்ளியன்று (நவம்பர் 16, 2018) மிதந்து வந்தது. சடலங்களின் முகங்கள் சிதைக்கப்பட்டு இருந்தன. உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்களும் கிடந்தன. சடலங்களின் கை, கால்கள் வயரால் கட்டப்பட்டிருந்தன.

 

இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் பெலகவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் மற்றும் போலீசார் சடலங்களைக் கைப்பற்றி விசாரித்தனர். சடலமாகக் கிடந்த வாலிபர், அம்பேத்கர் படம் அச்சிட்ட டி-ஷர்ட் அணிந்திருந்தார். அதில், ‘டாக்டர் அம்பேத்கர், ஜெய்பீம், சூடுகொண்டப்பள்ளி’ என்றும் எழுதியிருந்தது.

 

முக்கிய தடயம்

அந்த வாசகம்தான் போலீசாருக்குக் கிடைத்த முக்கிய தடயம். அதைவைத்துதான் சடலமாகக் கிடந்த நபர், ஓசூர் அருகே உள்ள சூடுகொண்டப்பள்ளியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தது பெலகவாடி போலீஸ். அவர்கள் அளித்த தகவலின்பேரில் ஓசூர் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

 

காவிரி ஆற்றில் சடலமாக மிதந்து வந்த நபர், சூடுகொண்டப்பள்ளியைச் சேர்ந்த நாராயணப்பா என்பவரின் மகன் நந்தீஷ் (25) என்பதும், சடலமாகக் கிடந்த பெண், அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகளும், நந்தீஷின் மனைவியுமான சுவாதி (20) என்பதும் தெரிய வந்தது.

 

மர்ம முடிச்சுகளும் அவிழ்ந்தன

 

கொலையானவர்களின் அடையாளம் தெரிந்துவிட்டதால், அதன்பிறகு எல்லா மர்ம முடிச்சுகளும் அடுத்தடுத்து அவிழ்ந்தன.

 

நந்தீஷ், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர். மரக்கடையில் கூலி வேலை செய்து வரும் ஏழை தொழிலாளியின் மகன். சுவாதி, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

அவருடைய தந்தையும் பொருளாதார ரீதியாக செல்வாக்கு இல்லாதவர்தான். ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் வைத்திருக்கும் குறு விவசாயி. ஆனாலும், சாதிய நம்பிக்கைகளில் ஊறிப்போனவர்.

 

பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள நந்தீஷ், ஹார்டுவேர் கடையில் கூலி வேலைக்குச் சென்று வந்தார். சுவாதி, தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். ஒரே பகுதி என்பதால் அவர்களுக்குள் அடிக்கடி ஏற்பட்ட சந்திப்பு, காதலாக மலர்ந்தது.

 

காதல் தம்பதியினர்

 

இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மகளுக்கு வேறோர் இடத்தில் மணம் முடித்துக் கொடுப்பதற்கான வேலைகள்கூட நடந்ததாகச் சொல்கிறார்கள். அதைத் தொடர்ந்தே, கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியன்று வீட்டைவிட்டு ஓடிப்போய், சூளகிரி திம்மராய சாமி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு, ஓசூர் ராம் நகரில் காதல் தம்பதியினர் வாழ்க்கையைத் தொடங்கினர்.

 

இந்த நிலையில்தான் கடந்த 10.11.2018ம் தேதியன்று, வீட்டில் இருந்து புனுகன்தொட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் செல்வதாக நந்தீஷூம், சுவாதியும் அக்கம்பக்கத்தினரிடம் சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர்.

 

அண்ணனையும், அண்ணியையும் காணவில்லை

 

அதன்பின் அவர்கள் வீட்டுக்கு வராததால், அதிர்ச்சி அடைந்த நந்தீஷின் தம்பி சங்கர் (20), அண்ணனையும், அண்ணியையும் காணவில்லை என்று கடந்த 13ம் தேதியன்று, ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில்தான், நந்தீஷ், சுவாதி ஆகியோரின் சடலங்கள் மாண்டியாவின் சிவனசமுத்திரம் அருகே காவிரி ஆற்றில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

 

சாதி ஆணவப்படுகொலை

 

சடலம் கைப்பற்றப்பட்ட தகவல்கள் காட்டுத்தீயாக பரவின. ஆரம்பத்தில் இருந்தே இது, சாதி ஆணவப்படுகொலை என பல்வேறு தலித் அமைப்புகளும், கட்சிகளும் சொல்லி வருகின்றன.

 

பெலகவாடி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், காதல் தம்பதியினரை சுவாதியின் பெற்றோரும், உறவினர்களும் கடத்திச்சென்று படுகொலை செய்து, சடலங்களை காவிரி ஆற்றில் வீசியிருப்பதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து, சுவாதியின் தந்தையான சூடுகொண்டப்பள்ளியைச் சேர்ந்த சீனிவாசன் (40), பெரியப்பா வெங்கடேஷ் (43), புனுகன்தொட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் (26) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இது நடந்தது, நவம்பர் 16ம் தேதி.

 

இந்த வழக்கு தொடர்பாக சுவாதியின் மற்றொரு பெரியப்பா அஸ்வதப்பா (45), உறவினர்கள் வெங்கட்ராஜ் (25), பாலவனப்பள்ளியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சாமிநாதன் (30) ஆகிய மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.

 

மாண்டியாவிலேயே தகனம்

 

இந்த களேபரங்களுக்கு இடையே, நந்தீஷ், சுவாதி ஆகிய இருவரின் சடலங்களும் மாண்டியா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நவ. 16ம் தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு, சடலங்களை அவரவர் உறவினர்கள் பெற்றுச்சென்றனர். சடலங்கள் அழுகிய நிலையில் இருந்ததால், மாண்டியாவிலேயே தகனம் செய்தனர்.

 

இது ஒருபுறம் இருக்க, நந்தீஷூம், சுவாதியும் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

திடுக்கிடும் தகவல்

இந்த வழக்கு தொடர்பாக பெலகவாடி காவல்துறையினரிடம் நாம் பேசினோம். நெஞ்சை பதற வைக்கும் பல திடுக்கிடும் தகவல்களைக் கூறினர்.

 

ஓசூர் ராம் நகரில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த காதல் தம்பதியினர், கடந்த 10ம் தேதியன்று ஓசூருக்கு வந்திருந்த மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசனை பார்ப்பதற்காக சென்றிருந்தனர். அப்போது சுவாதியின் உறவினர்கள் சிலரும் அங்கே வந்துள்ளனர். காதல் கணவனுடன் சுவாதி வந்திருக்கும் தகவலை அவர்கள், சுவாதியின் தந்தைக்குத் தெரிவித்தனர்.

 

நடந்தது நடந்து போச்சு

 

அதன்பேரில் சுவாதியின் தந்தை சீனிவாசன், பெரியப்பாக்கள் அஸ்வதப்பா, வெங்கடேஷ், கார் ஓட்டுநர் சாமிநாதனர் ஆகியோர் ஒரு வாடகை காரில் அங்கு வந்தனர்.

 

அவர்கள் நந்தீஷிடமும், சுவாதியிடமும், ‘நடந்தது நடந்து போச்சு. எங்களுக்கு உங்கள் மேல் இருந்த கோபம் எல்லாம் போயிடுச்சு. உங்களை ஏற்றுக்கொள்கிறோம். வாங்க… எதுவாக இருந்தாலும் வீட்டுக்குப் போயி பேசிக்கலாம்,’ என்று ஆசை வார்த்தை கூறினர்.

 

இதையெல்லாம் நம்பிய காதல் தம்பதியினர், அவர்களுடன் காரில் ஏறிச்சென்றனர். ஆனால், அந்த கார் சூடுகொண்டப்பள்ளிக்குச் செல்லாமல் திடீரென்று கர்நாடகா மாநிலம் நைஸ் சாலையில் பயணிக்கத் தொடங்கியது. பதற்றம் அடைந்த நந்தீஷூம், சுவாதியும் காரை நிறுத்தும்படி கெஞ்சியும், கார் நிற்காமல் கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் போய்தான் நின்றது.

 

எங்களை வாழ விடுங்கள்…

சுவாதியை விட்டுவிட்டு பிரிந்து செல்லும்படி நந்தீஷை அந்த கும்பல் மிரட்டியது. அப்படி பிரிந்து செல்லாவிட்டால், இருவரையும் தீர்த்துக்கட்டிவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். காதல் தம்பதியினர் அதற்கு ஒப்புக்கொள்ளாமல் முரண்டு பிடித்தனர். கண்காணாத இடத்தில் ஓடிச்சென்று பிழைத்துக்கொள்கிறோம்…. விட்டுவிடுங்கள்… என்று கெஞ்சியுள்ளனர். குறிப்பாக சுவாதி, நந்தீஷின் குழந்தையை சுமக்கிறேன்…. எங்களை வாழ விடுங்கள்… என்று தரையில் புரண்டு அழுதிருக்கிறார்.

 

இதைப்பற்றி கொஞ்சமும் காதில் வாங்கிக்கொள்ளாத அந்த கும்பல் அரிவாளால் அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளது. இருவரின் தலையிலும் பலமான வெட்டுக்காயங்கள் இருந்துள்ளன. நந்தீஷூக்கு உடலில் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்துள்ளன.

 

அப்படியும் அந்த கும்பலின் வெறி அடங்கவில்லை. அவர்களை யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக இருவரின் முகங்களையும் கல்லால் தாக்கி சிதைத்துள்ளனர். சுவாதியின் தலை முடியை அரிவாளாலேயே மழித்துள்ளனர். மேலும், கருவைச் சிதைக்கும் நோக்கில் அவரின் அடிவயிற்றுப்பகுதியையும் கல்லால் தாக்கி சிதைத்துள்ளனர்.

 

கூரிய கற்களால் அடிவயிற்றை…

 

இறக்கும் தருவாயிலும்கூட பட்டியல் சாதி இளைஞனின் கருவை தன் மகள் சுமந்து செல்லக்கூடாது என்ற சாதிய வன்மத்துடன் அவளின் அடிவயிற்றை கூரிய கற்களால் சின்னாபின்னாப்படுத்தி உள்ளனர். அதன்பிறகே இருவரின் சடலங்களையும் கை, கால்களை மின்சார வயரால் கட்டி, காவிரி ஆற்றில் தூக்கி வீசிவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.

 

இந்த விவரங்களைச் சொன்ன பெலகவாடி காவல்துறையினர், இப்படியொரு குரூரமான கொலை எங்கள் காவல்நிலைய சரகத்துக்குள் இதற்குமுன் நடந்ததில்லை என்றும் கூறினர்.

 

ஓசூர் டிஎஸ்பி மீனாட்சி

 

இந்த வழக்கின் அடுக்கக்கட்ட நகர்வு குறித்து ஓசூர் டிஎஸ்பி மீனாட்சியிடம் கேட்டோம்.

 

”நந்தீஷ் காணவில்லை என்பதுதான் நாங்கள்¢ பதிவு செய்த வழக்கு. நந்தீஷூம், சுவாதியும் கொல்லப்பட்ட இடம், கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்டது. அதனால் இப்போதைக்கு அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

 

இதுவரை மூன்று பேரை கைது செய்திருக்கின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். நாங்களும் மூன்று தனிக்குழுக்களை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகிறோம். அவர்களும் கைது செய்யப்பட்ட பிறகு இந்த வழக்கு ஓசூர் போலீசாருக்கு மாற்றம் செய்யப்படும்,” என்றார்.

 

கொலையுண்ட நந்தீஷ் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஏதேனும் பொறுப்பில் இருக்கிறாரா? கொலையான சமயத்தில் சுவாதி கருவுற்றிருந்தாரா? என்று கேட்டதற்கு, ”நந்தீஷ் சமீபத்தில்தான் அக்கட்சியில் சேர்ந்திருப்பார் போலிருக்கிறது. கட்சிப் பொறுப்பில் இருப்பதாகத் தெரியவில்லை.

 

சுவாதி கருவுற்றிருந்தாரா இல்லையா என்பது பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தால்தான் சொல்ல முடியும். இன்னும் எங்களுக்கு அந்த அறிக்கை விவரங்கள் வந்து சேரவில்லை,” என்றார் டிஎஸ்பி மீனாட்சி.

இயக்குநர் பா.ரஞ்சித்

 

இது ஒருபுறம் இருக்க, கபாலி, காலா படங்களின் இயக்குநர் பா.ரஞ்சித், ஆணவக்கொலையை கண்டித்துள்ளதுடன், மகனை இழந்து தவிக்கும் நந்தீஷின் பெற்றோரை சனிக்கிழமையன்று (நவம்பர் 17) நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

 

ஓசூர் உதவி ஆட்சியர் (ஆர்டிஓ) விமல்ராஜிடம், நந்தீஷின் மரணத்தை சாதி ஆணவக்கொலையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்.

 

நக்சல் தடுப்புக்காவல்துறை

 

விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு இயக்கம், சாதி ஆணவக்கொலையால் கணவரை இழந்த உடுமலை சங்கரின் மனைவி கவுசல்யா உள்ளிட்டோரும் நந்தீஷ்-சுவாதி ஆணவக்கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

இதனால் ஓசூர் நகரமே சனிக்கிழமை முழுவதும் பதற்றத்துடன் இருந்தது. வழக்கமான உள்ளூர் காவல்துறையினருடன், நக்சல் தடுப்புக்காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

 

ஆணவக்கொலைகளை தடுத்த தனிச்சட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ”நந்தீஷின் குடும்பத்தினருக்கு உடனடியாக தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்தக் கொலையை ஆணவக்கொலையாக அறிவிக்க வேண்டும்.

 

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதுடன், 120 நாள்களுக்குள் நீதிமன்ற நடவடிக்கைகளை முடித்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளைப் பெற்றுத்தர வேண்டும். ஆணவக்கொலைகளை தடுத்த தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும்,” என்றார்.

 

எடப்பாடி அரசு மவுனம்

 

சேலத்தில் அக்டோபர் 22ம் தேதி சிறுமி ராஜலட்சுமி கழுத்து அறுத்து படுகொலை; தர்மபுரியில் நவம்பர் 5ம் தேதி பழங்குடியின மாணவி கவுசல்யா கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை; இப்போது, ஓசூரில் காதல் தம்பதியினர் சாதி ஆணவக்கொலைக்கு இரையாகியுள்ளனர்.

 

தமி-ழகத்தில் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. சாதிய வன்மம் உயிர்ப்புடன் இருக்கிறது. மவுனம் காக்கிறது எடப்பாடி அரசு.

 

– பேனாக்காரன்.