Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

நடிகனாக மட்டுமே என் வாழ்க்கை முடிந்து விடக்கூடாது!: மலேசியாவில் ரஜினி பேச்சு

ஆண்டவர் கொடுத்த தொழிலில் நாம் நாணயமாகவும், நேர்மையாகவும் செயல்பட்டால் நமக்கு எல்லாமே கிடைக்கும் என்று மலேசியாவில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் சார்பில் மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நேற்று (ஜனவரி 6, 2017) நட்சத்திரக் கலை விழா நடந்தது. விழாவின் ஒரு பகுதியாக நடிகர் விவேக், ரஜினிகாந்திடம் பேட்டி எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.

விவேக் கேட்ட கேள்விகளுக்கு ரஜினிகாந்த் மிக இயல்பாகவும், ஜாலியாகவும் பதில் அளித்தார். எனினும், அவர் கேட்கத் தொடங்குவதற்கு முன்பே, ரொம்ப கடினமான கேள்விகளைத் தவிர்க்கும்படியும் வேண்டுகோள் விடுத்தார்.

விவேக் கேள்விகளும் ரஜினியின் பதில்களும்….

பைரவி டு இந்திரன், சிவாஜிராவ் டு ரஜினிகாந்த், நடிகர் டு தலைவர் இந்த பயணம் பற்றி?

என் 45 வருட சினிமா பயணத்தில் என்னால் முடிந்த அளவு என் படங்களில் நல்ல கருத்துக்களை மக்களுக்கு சொல்லி இருக்கிறேன்.

நீங்கள் இப்போது நடந்து வரும்போது ரசிகர்கள் வெறி பிடித்த மாதிரி கூச்சல் போட்டனர். கே.பி. சார் உங்களுக்கு நடிப்பை தூண்டினாரா இல்லை உங்களுக்குள் இருந்த ஸ்டைல் கே.பி. சார் மூலமாக வெளி வந்ததா?

இப்ப நான் எப்படி இருக்கேனோ எப்போதும் அப்படித்தான் இருப்பேன். நான் பஸ் கண்டக்டராக இருக்கும் போது கூட வேற பஸ்களில் அரை மணி நேரத்தில் 40 டிக்கெட்டுகள் கொடுத்தால், நான் பத்து நிமிடங்களில் அந்த டிக்கெட்டுகளை கொடுத்து விடுவேன். கர்நாடக பஸ்ஸில் நான் வேலை பார்த்த போது ஆண்கள் பஸ் பின்னால் அமருவார்கள்.

பெண்கள் பஸ் முன் பகுதியில் அமருவார்கள். நான் எல்லாருக்கும் டிக்கெட் கொடுத்து விட்டு பஸ் முன் பகுதியில் தான் இருப்பேன் அப்போது தலைமுடி அதிகமாக இருக்கும். காதுக்கு பின் பறக்கும் முடிகளை கையால் கோதிவிட்டு ஸ்டைலாக டிக்கெட்… டிக்கெட்… என்று கொடுப்பேன். இதை கேபி சார் பார்த்து இருக்கிறார். டேய் சினிமாவுக்கு நீ போனா இந்த ஸ்டைல் புதுசு. ஜனங்களுக்கு பிடிக்கும். இதை எப்பவும் மாற்றாதே என்று அட்வைஸ் பண்ணார். அதை நான் அப்படியே மெயின்டெயின் பண்றேன்.

உங்களுடைய குறைந்தபட்ச ஆசை என்ன? அதிகபட்ச ஆசை என்ன?

குறைந்த பட்சம் ஒரு ஸ்கூட்டர் வாங்கணும். 2 பெட்ரூம் உள்ள அபார்ட்மென்ட் வாங்கணும் ஒரு டீசன்ட் மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழ ஆசை.

அதிகபட்சம்னா… என்னை வாழ வைத்த தமிழ் மக்களை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்பதுதான்.

எப்ப நீங்க ரொம்ப ஜாலியாக இருந்தீங்க? எப்ப நீங்க ரொம்ப மனசு வருத்தப்பட்டீங்க?

படம் ஹிட் ஆனால் ஜாலியா சந்தோஷமாக இருந்திருக்கேன். படம் சரியாக போகவில்லை என்றால் வருத்தப்பட்டு இருக்கேன். நிறைய சந்தோஷபட்டு இருக்கேன்.. வாழ்க்கையில் நிறைய கண்ணீர் விட்டு இருக்கேன்.

பல தலைமுறைகள் தாண்டியும் ரசிகர்கள் உங்களுக்கு இருக்காங்க.. அந்த ரசிகர்களுக்காக அந்த ‘பட்டர் பிட்டர்’ வசனங்களை பேசி காட்ட முடியுமா?

சாரி. மறந்துட்டேன்.

பொது வாழ்க்கைக்கு வரும் போது குடும்பம் சுகமா? சுமையா?

பொதுவாக சொல்லி விட முடியாது. தனி தனி நபர் வாழ்க்கையை பொறுத்தது.

கட்டம் சரியில்லை (ஜோதிடம்) என்று சும்மா இருக்கணுமா? இல்லை, முயற்சி பண்ணி பார்ப்போமே என்று உழைக்கணுமா?

புராண காலத்தில் இருந்தே ஜோதிடம் இருக்கிறது. அதை யார் சொல்றாங்க என்பது முக்கியம். அதற்காக ஜோதிடத்தை கேட்டுக் கொண்டு சும்மா உட்கார முடியாது. என்ன எழுதி இருக்கோ அதுதான் நடக்கும். என்ன கிடைக்குமோ அது கிடைக்கதான் போகும். கிடைக்கிறது கிடைக்காமல் போகாது. ஆண்டவர் கொடுத்த தொழிலில் நாம் நாணயமா நேர்மையா செய்திட்டு இருந்தால் எல்லாமே நமக்கு கிடைக்கும்.

1996 இல் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதை (அரசியல்) தவற விட்டதாக நினைத்தது உண்டா?

ஒரு செகண்ட் கூட வருத்தப்பட்டது கிடையாது.

 

முதல் முறையாக மலேசியா பயணம் செய்தது பற்றி?

1977ல் ‘நினைத்தாலே இனிக்கும்’ படப்பிடிப்புக்கு நானும் கமலும் வந்திருக்கோம். எனக்கு அதுதான் முதல் முறை. அப்போது கமல் பெரிய நடிகர். நான் அப்போது தான் சினிமாவுக்கு வந்திருந்தேன். கமலை அழைத்துச் செல்ல தனி கார் வரும் ஆனால் ரஜினி எங்கே என்று கேட்டு என்னையும் அழைத்துச்செல்வார். அரவணைத்து என்னை பக்கத்தில் வைத்துக் கொண்டார்.

சூட்டிங் முடிந்த அன்று, நானும் கமலும் இரவுகளில் மலேசியாவில் ஜாலியா என்ஜாய் பண்ணிருக்கோம். காலை நான்கு மணிக்கு வந்து தூங்குவோம். கே.பி. சார் வருவாங்க. என்ன இந்த பசங்க இப்படி பன்றாங்க என்று அப்படியே பேசிட்டு போய்டுவாங்க. கமலும் நானும் இதை மறக்கவே மாட்டோம். அருமையான எக்ஸ்பீரியன்ஸ்.

வாழ்வின் நிறைவில் நீங்கள் என்னவாக நினைவு கூறப்பட விரும்புகிறீர்கள்?

ஒரு நடிகனாக வந்தேன். மகிழ்வித்தேன். நடிகனாக போய்ட்டேன் என்று என் வாழ்க்கை முடிந்து விடக்கூடாது என நினைக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியின் மூலமாக உலக ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

தாய் தந்தை குடும்பம் ரொம்ப முக்கியம். அவங்க தான் தெய்வங்கள். முதலில் நீங்கள் அதை செய்தால் உங்கள் பின்னால் எல்லாமே வரும். முக்கியமாக இளைஞர்கள். தாய் தந்தையை வணங்குங்கள். அவர்களை சந்தோஷப் படுத்துங்கள். அவர்களை சந்தோஷப் படுத்தினால் போதும். ஆண்டவர் உங்களை சந்தோஷப் படுத்துவார்.

இவ்வாறு ரஜினிகாந்த் பதில் அளித்தார்.