Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது, 5 லட்சம் ரொக்கப்பரிசு! சட்டப்பேரவையில் புதிய அறிவிப்பு!!

சமூகம் மற்றும் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காக உழைக்கும் சிறந்த பத்திரிகையாளர்களுக்கு ஆண்டுதோறும் கலைஞர் எழுதுகோல் விருது மற்றும் 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில்
தமிழ்வளர்ச்சி மற்றும்
செய்தித்துறை தொடர்பான
மானியக் கோரிக்கைகள் மீதான
விவாதத்தின்போது அமைச்சர்
மு.பெ.சாமிநாதன் வெளியிட்ட
அறிவிப்புகள்:

 

பத்திரிகையாளர்கள் நலவாரியம்:

 

தமிழ்நாட்டில் முதன்முதலாக,
உழைக்கும் பத்திரிகையாளர்களை
முன்களப் பணியாளர்களாக அறிவித்து
முதல்வர் பெருமை சேர்த்துள்ளார்.

 

அதன் அடிப்படையில்,
உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு
வழங்கப்பட்டு வரும் அனைத்துத்
திட்டங்களையும் ஒருங்கிணைத்துச்
செவ்வனே செயல்படுத்துவதோடு,
நலவாரிய உதவித்தொகைகள்
மற்றும் நலத்திட்ட உதவிகள்
அளித்திடும் வகையில்
பத்திரிகையாளர்கள்
நல வாரியம்
அமைக்கப்படும்.

 

குடும்ப நிதி உதவி உயர்வு:

 

பத்திரிகைத் துறையில்
பணியாற்றும் ஆசிரியர்,
உதவி ஆசிரியர், நிருபர்,
புகைப்படக்காரர், பிழை திருத்துவோர்
பணிக்காலத்தில் இயற்கை
எய்திட நேரிட்டால், அவர்களுடைய
குடும்பத்தினருக்கு முதல்வரின்
பொது நிவாரண நிதியில் இருந்து
தற்போது குடும்ப உதவி நிதியாக
அவர்கள் பணியாற்றிய
காலத்திற்கேற்ப 3 லட்சம் ரூபாய்
வரை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த குடும்ப உதவி நிதி,
இனி 5 லட்சம் ரூபாயாக
உயர்த்தி வழங்கப்படும்.

 

பத்திரிகையாளர்ளுக்கு பயிற்சி:

 

பத்திரிகையாளர்கள் தங்களின்
துறை சார்ந்த தொழில் தகுதியை
மேம்படுத்திக் கொள்வதற்கும்,
திறன் மேம்பாட்டை அதிகரிக்கவும்,
மொழித்திறன் மற்றும் நவீனத்
தொழில்நுட்பத்தில் சிறந்து
விளங்கவும் மாவட்ட அளவிலும்,
மாநில அளவிலும்
பத்திரிகையாளர்களுக்குப்
பயிற்சிகள் வழங்கப்படும்.

 

உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி:

 

இளம் பத்திரிகையாளர்கள்
ஊடகத்துறையில் சிறந்து விளங்கவும்,
அதன் நுணுக்கங்களை
முழுமையாக அறிந்து கொள்ளவும்,
அவர்களை ஊக்குவிக்கும் வகையில்,
ஆர்வமுள்ள தகுதி வாய்ந்த
இளம் பத்திரிகையாளர்களைத்
தெரிவு செய்து, இந்திய அளவில்
புகழ்மிக்க இந்தியன்
இன்ஸ்டிடியூட் ஆப் மாஸ்
கம்யூனிகேஷன்ஸ் ஏசியன்
காலேஜ் ஆப் ஜர்னலிஸம்
போன்ற பத்திரிகை சார்ந்த
கல்வி நிறுவனங்களில்
உயர்கல்வி படிக்கவும்,
பயிற்சி பெறவும் நிதியுதவி
வழங்கப்படும்.

 

சிறந்த இதழியலாளர்ளுக்கு விருது:

 

இதழியல் துறையில்
சமூக மேம்பாட்டிற்காகவும்,
விளிம்பு நிலை மக்களின்
மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி
வரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு
ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல்
விருது’ மற்றும் 5 லட்சம் ரூபாய்
பரிசுத்தொகையுடன் பாராட்டுச்
சான்றிதழும் வழங்கப்படும்.

 

சமூக ஊடகப்பிரிவு உருவாக்கம்:

 

தமிழக முதல்வரின்
செய்தி வெளியீடுகள்,
சாதனைகள் மற்றும் நிகழ்ச்சிகள்
தொடர்பான செய்திகள் மற்றும்
புகைப்படங்கள் ஆகியவற்றை
கீச்சகம் (ட்விட்டர்), படவரி
(இன்ஸ்டாகிராம்), முகநூல் (பேஸ்புக்)
மற்றும் வலையொளி ஆகிய
சமூக ஊடகங்களின் வாயிலாக
உடனுக்குடன் பொதுமக்களுக்குக்
கொண்டு செல்வதற்கு ஏதுவாக
சமூக ஊடகப்பணிகளை
மேற்கொள்வதற்கு செய்தி
மக்கள் தொடர்புத்துறையில்
சமூக ஊடகப்பிரிவு என்ற
தனிப்பிரிவு தொடங்கப்படும்.

 

அரசின் செய்திகள் மற்றும்
திட்டங்கள் குறித்த விவரங்கள்
உடனுக்குடன் பொதுமக்களை
சென்றடையக்கூடிய வகையில்,
பொதுமக்கள் கூடும் முக்கிய
இடங்களான பேருந்து நிலையம்,
சந்தைகள் போன்றவற்றில்
மின் சுவர்கள் உருவாக்கப்பட்டு
ஒளிபரப்பப்படும்.

 

– பேனாக்காரன்