Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பட்ஜெட் தாக்கம்: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 580 புள்ளிகள் சரிவு

மத்திய பட்ஜெட்டில் பங்குச்சந்தைக்கு சாதகமான அம்சங்கள் இல்லாததால், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (பிப்ரவரி 2, 2018) கடும் வீழ்ச்சி அடைந்தது. முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடந்த ஒரு வாரமாகவே பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை 11000 புள்ளிகளைக் கடந்தது. இந்நிலையில், மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் முதலீட்டாளர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஆண்டுக்கு ரூ.250 கோடிக்கு மேல் வருமானம் பெறும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதம் குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர்களின் கவனம் கார்ப்பரேட் நிறுவன வருமானத்தின் மீது திரும்பி உள்ளது. இதன் தாக்கம் நேற்று பகலிலேயே பங்குச்சந்தையில் எதிரொலித்தது. நேற்று ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கிய நிலையில், பெரும் சரிவுடன் நேற்றைய வர்த்தகம் முடிந்தது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு வரி உயர்வின் காரணமாக, தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் இந்திய பங்குச்சந்தைகள் கடும் பாதிப்புக்களை சந்தித்து வருகின்றன. நிப்டி மீண்டும் 11,000 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்துள்ளது.

காலை 10.30 மணியளவில், சென்செக்ஸ் 571.31 புள்ளிகள் சரிந்து 35,335 புள்ளிகளாகவும், நிப்டி, 182.50 புள்ளிகள் சரிந்து 10,834 புள்ளிகளாகவும் இருந்தன. மதியம் 2 மணியளவில், சென்செக்ஸ் 580 புள்ளிகள் சரிந்து 35328 புள்ளிகளாகவும், நிப்டி 10835 இருந்தன.

ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, இண்டியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ், அதானி போர்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும், ஹிண்டல்கோ, எச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஆட்டோ, ஐடிசி உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும் காணப்படுகின்றன.

மாதத்தின் துவக்கத்திலேயே பங்குச்சந்தைகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் முதலீட்டாளர்கள் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளனர்.