Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

தாயின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு!; கவுசல்யா

உடுமலை சங்கர் ஆணவப்படுகொலை வழக்கில் தாய் அன்னலட்சுமி உள்பட மூன்று பேரின் விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சங்கரின் மனைவி கவுசல்யா கூறியுள்ளார்.

உடுமலை சங்கரும், பழனியைச் சேர்ந்த கவுசல்யாவும் கடந்த ஆண்டு சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதலுக்கு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்த கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையை ஏவி, கடந்த ஆண்டு மார்ச் 13ம் தேதி சங்கரை பட்டப்பகலில் பலர் முன்னிலையில் வெட்டிப் படுகொலை செய்தனர்.

கவுசல்யாவையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. எனினும், தீவிர சிகிச்சை காரணமாக அவர் உயிர் பிழைத்தார். இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை, கொலை வழக்கில் உதவியாக இருந்ததாக பிரசன்னா உள்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வழக்கை விசாரித்த திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் மேற்சொன்னவர்களில் தாய் அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய மூன்று பேரையும் போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி, விடுதலை செய்தது.

எஞ்சிய 8 பேரில் ஆறு பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து இன்று (டிசம்பர் 12, 2017) தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பு குறித்து கவுசல்யா கூறியது:

என்னுடைய சங்கர் சிந்திய ரத்தத்திற்கு உரிய நீதி கிடைப்பதற்காக ஒன்றே முக்கால் ஆண்டுகள் காத்திருந்தேன். அந்த வகையில் இன்று வழங்கியுள்ள இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். இந்த தீர்ப்பு, நீதித்துறை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

முக்கியமாக, கொலை வழக்குகளில் தீர்ப்பு வரும் வரை குற்றவாளிகளை சிறையிலேயே வைத்திருந்தது அரிதிலும் அரிதான ஒன்று. அந்த வகையில் என்னுடைய வழக்கை தனித்துவத்தோடு நீதித்துறை அணுகியுள்ளதாகவே கருதுகிறேன். அதிலும், அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தூக்கு தண்டனை குறித்த என் கருத்து வேறாக இருந்தாலும் சாதி வெறியர்களுக்கு இனிமேல் கவுரவ கொலைகள் செய்ய மனத்தடையும், அச்சத்தையும் ஏற்படுத்தும்.

இப்படிப்பட்ட குற்றங்களில் என் வழக்கிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு இந்தியாவிலேயே முதன்முறை என்கிற வகையில் எங்கள் காத்திருப்பு வீண்போகவில்லை.

குறிப்பாக, இரட்டை தூக்கு, இரட்டை ஆயுள் போன்ற தண்டனைகள் குற்றவாளிகளை எந்த வகையிலும் தப்பிக்க இடமளிக்கக் கூடாது என்பதையே காட்டுகிறது. இப்படி எல்லா வகையிலும் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன்.

சங்கர் கொலையில் முக்கியமானவர்களான அன்னலட்சுமி, பாண்டித்துரை, பிரசன்னா ஆகியோருக்கு விடுதலை வழங்கியிருப்பதை பொரு த்தவரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். அவர்களுக்கும் உரிய தண்டனை கிடைக்கும் வரை என் சட்டப்போராட்டம் தொடரும்.

தண்டனை கிடைத்தவர்கள் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தால் அதனை எதிர்த்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். இந்தப் போராட்டத்தில் ஒருபோதும் சளைக்க மாட்டேன்.

சட்டப்போராட்டத்திலும், களப்போராட்டத்திலும் ஒருபோதும் ஓயமாட்டேன். சங்கருக்கான நீதி இந்த வழக்கு தீர்ப்பில் மட்டும் அடங்கியிருக்கவில்லை.

சாதிய கவுரவப்படுகொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் படைப்பதுதான் சங்கருக்கான நீதியாக கருதுகிறேன். அதற்கு இந்த தீர்ப்பு துணை செய்யும் என்று நம்புகிறேன்.

தீர்ப்பு வழங்கப்பட்ட இன்று நீதிமன்ற வளாகத்திலேயே அசாதாரணச் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று பேரின் விடுதலை தீர்ப்பை கவனத்தில் கொண்டு எனக்கும், சங்கர் குடும்பத்தாருக்கும் உயிர் ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறேன். அதனால் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

சங்கர் வழக்கு தீர்ப்புக்கு இதுநாள் வரை உறுதுணையாக இருந்த அரசியல் கட்சிகளுக்கும், போராட்ட இயக்கங்களுக்கும், மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி. இவ்வாறு கவுசல்யா கூறினார்.