Wednesday, April 24மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

அமெரிக்க கோழிகளால் ஆபத்து! 4 கோடி பேருக்கு வேலை பறிபோகும்; எச்சரிக்கும் பண்ணையாளர்கள்!!

அமெரிக்காவில் இருந்து
இந்தியாவுக்கு கோழிகளை
இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தால்,
தமிழ்நாடு உள்ளிட்ட சில
மாநிலங்களில் காலம்காலமாக
கோழிப்பண்ணைத் தொழிலை
நம்பி இருக்கும் 4 கோடி
பேருக்கு வேலைவாய்ப்பு
பறிபோவதோடு, கடும்
பொருளாதார இழப்பும் ஏற்படும்
என்று கோழி பண்ணையாளர்கள்
சங்கம் எச்சரித்துள்ளது.

உலக வர்த்தக
ஒப்பந்தத்தின்பேரில் இந்தியாவில்
இதுவரை பாரம்பரியமாக
நடைபெற்று வந்த பல
தொழில்கள் பெரும் சரிவை
நோக்கிச் சென்று வருகின்றன.
பல குடிசைத்தொழில்கள்
அழிந்தே விட்டன. மிட்டாய் முதல்
நொறுக்குத்தீனி தயாரிப்பு வரை
பன்னாட்டு நிறுவனங்களின்
நாலுகால் பாய்ச்சலால்,
இந்தியா ஆகப்பெரும்
சந்தையாக உருவெடுத்து
வருகிறது. பன்னாட்டு
நிறுவனங்களின் பார்வையில்,
இந்தியர்கள் வெறும்
நுகர்வோர்களாக மட்டுமே
பார்க்கப்பட்டு வருகிறோம்.

 

இந்நிலையில்தான்,
உலகளவில் முட்டை,
கறிக்கோழி உற்பத்தியில்
இந்தியாவுக்கென குறிப்பாக
தமிழ்நாட்டிற்கென தனி இடம்
இருந்து வந்தது. இப்போது
அமெரிக்காவுடனான
ஒப்பந்தத்தின்பேரில் அதற்கும்
ஆபத்து நெருங்கி விட்டதாக
பண்ணையாளர்கள் தரப்பில்
அதிருப்தி கிளம்பியிருக்கிறது.

 

இது தொடர்பாக கால்நடை
மற்றும் விவசாய பண்ணையாளர்கள்
வர்த்தக சங்கத்தின் செயலாளரும்,
கால்நடை மருத்துவருமான
செந்தில் ஞாயிற்றுக்கிழமை
(பிப். 23) நம்மிடம் விரிவாக
பேசினார்.

 

நாமக்கல் மாவட்டத்தில்
சிறியதும், பெரியதுமாக
ஆயிரத்துக்கும் மேற்பட்ட
முட்டைக் கோழிப் பண்ணைகள்
உள்ளன. இவற்றில் இருந்து
கிடைக்கும் முட்டைகள்
தமிழக அரசின் சத்துணவுத்
திட்டத்திற்கும், உள்நாட்டின்
தேவைக்கும் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், பல்வேறு வெளிநாடுகளுக்கும்
ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும்
30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
பண்ணைகளில் 9 கோடி பிராய்லர்
கறிக்கோழிகள் வளர்க்கப்பட்டு
வருகிறது. இந்தக் கறிக்கோழிகள்
தமிழகம் மட்டுமின்றி,
கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு
உணவுக்காக அனுப்பப்படுகிறது.

 

இந்நிலையில்,
பிப். 24ம் தேதியன்று
(திங்கள்கிழமை), இந்தியாவுக்கு
வருகை தரும் அமெரிக்க
அதிபர் டொனால்டு டிரம்ப்,
இந்திய பிரதமருடன் வர்த்தகம்
தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும்
ஈடுபட உள்ளதாக தகவல்கள்
வெளியாகி உள்ளன.
அதில், அமெரிக்காவில் இருந்து
இந்தியாவுக்கு கோழிகளை
ஏற்றுமதி செய்வது குறித்தும்
பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

அமெரிக்க கோழிகளை இந்தியாவில் விற்பனை செய்யும் வகையில் இறக்குமதி வரியை குறைக்கவும், 5 சதவீதம் வரை இறக்குமதி செய்ய அனுமதிக்கவும், மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது.

 

அரசின் உதவிகள் ஏதுமின்றி இந்தியாவில் கோழிப்பண்ணைத் தொழிலை கடந்த 50 ஆண்டுகளாக சிறு மற்றும் குறு விவசாய பண்ணையாளர்கள் வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். அவர்களின் கடின உழைப்பால் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்யப்படும் தொழிலாக இன்று வளர்ச்சி அடைந்துள்ளது.

கிராமப்புறங்களில் கோழிப்பண்ணை தொழில் மூலமாக நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 4 கோடி பேர் வரை வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இத்தொழில் மூலமாக ஆண்டுக்கு அரசுக்கும் பல கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கிறது. கிராமப்புறங்கள் வளர்ச்சி அடைந்துள்ளதோடு, ஏழை கிராம மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்வும் கிடைத்திருக்கிறது.

 

அமெரிக்க
கோழி உற்பத்தி வகைகளை
இந்தியாவில் அனுமதித்தால்
இங்கு கோழி, முட்டை
உற்பத்தி தொழில் மிகவும்
பாதிக்கப்படும். பலர் வேலை
இழக்கும் அபாயமும் உள்ளது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து
வளைகுடா நாடுகள் உள்பட
17 நாடுகளுக்கு கோழி
முட்டைகள் ஏற்றுமதி
செய்யப்பட்டு வந்தது.
சில ஆண்டுகளாக பறவை
காய்ச்சல் பீதியால் இந்தியாவில்
இருந்து முட்டை
ஏற்றுமதி 95 சதவீதம்
குறைந்து விட்டது.
ஒரே ஒரு நாடு மட்டுமே
தற்போது இங்கிருந்து
முட்டைகளை கொள்முதல்
செய்து வருகிறது.

 

இப்படி பெரும் பாதிப்பை இந்த தொழில் சந்தித்து வரும் நிலையில், அமெரிக்காவில் இருந்து கோழிகளை இறக்குமதி செய்வது என்பது பல்வேறு சிக்கல்களை உண்டாக்கும். எனவே, அமெரிக்க கோழிகளை விற்பனை செய்ய இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது. நாமக்கல் மாவட்டத்தை பறவைக்காய்ச்சல் நோயற்ற முட்டை உற்பத்தி மண்டலமாகவும், கோயம்புத்தூரை நோயற்ற கறிக்கோழி வளர்ப்பு மண்டலமாகவும் மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். அப்போதுதான் இத்தொழிலை பாதுகாக்க முடியும் என்பதோடு, வெளிநாடுகளுக்கு இங்கிருந்து முட்டைகள், கறிக்கோழி இறைச்சி ஏற்றுமதி வாய்ப்பும் அதிகரிக்கும். அந்நிய செலாவணியும் கிடைக்கும்.

 

இவ்வாறு மருத்துவர் செந்தில் தெரிவித்துள்ளார்.

 

– பேனாக்காரன்