Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கருணை கொலை செய்யலாம்: உச்சநீதிமன்றம்

தீராத, மீள முடியாத நோய்வாய்ப்பட்டவர்களை கருணை கொலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் இன்று (மார்ச் 9, 2018) தீர்ப்பு அளித்துள்ளது. மனிதர்கள் கண்ணியத்துடன் மரணத்தைத் தழுவ உரிமை உண்டு என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

காமன் காஸ் என்ற தொண்டு நிறுவனம், கடந்த 2005ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், ”நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய வாய்ப்பு இல்லாத நிலையில், மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் அவர்கள் உயிர் வாழச் செய்வதை தவிர்த்து, மரணத்தைத் தழுவ கருணை கொலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்” என்று கோரியிருந்தது.

 

பல ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. கடந்த 2014ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அண்மையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, கருணை கொலை அங்கீகரிக்கப்பட்டால் அது தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசின் சார்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தீராத, மீள முடியாத நோய்வாய்ப்பட்டவர்களை கருணை கொலை செய்ய சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

மனிதர்கள் கண்ணியத்துடன் மரணத்தைத் தழுவ உரிமை உண்டு என்று கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், தீராத நோய் தாக்கியவர்களை சிகிச்சை பலனளிக்காத பட்சத்தில், நோய் காக்கும் உபகரணங்களை அகற்றி ‘பேசிவ் யுதான்சியா’ (Passive euthanasia) எனும் கருணை கொலை செய்ய அனுமதிக்கலாம் என்றும் உத்தரவில் கூறியுள்ளது. உயிர் காக்கும் கருவிகளை எப்போது அகற்றலாம் என்பதை நோயாளிகளே தீர்மானிக்கலாம் என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளது.